அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full

அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full
பாடல் எண் பாடல் Verse
0 மன்னுதிரு அண்ணா மலைமாலை நாயடியேன்
பன்னுதமிழ் வெண்பாவில் பாடவே - துன்னுமலர்ப்
பாதனே மூடிகத்தின் பாலேறும் தேவகண
நாதனே நீமுன் நட

அண்ணாமலை வெண்பா > காப்பு > பாடல்: 0

1 ஆதிநடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை - நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை வாஎன்று
அழைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 1

2 அன்பர் பிறப்பை அகற்றுமலை அன்பரல்லா
வன்பர் பிறப்பை வளர்க்குமலை - அன்பை
வடிக்குமலை சிங்கத்தை வந்துசிம்புள் ஆகி
அடிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 2

3 கூற்றை உதைத்தமலை கோமாறன் கூடல்வைகை
ஆற்றை அடைத்தமலை ஆரூரன் - போற்றச்
சிறந்தமலை தீவினையேன் செய்தகுறை எல்லாம்
மறந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 3

4 ஏழைக்கு இரங்குமலை ஏதேது கேட்டாலும்
கோழைப் படாமல் கொடுக்குமலை - வேழம்
உரித்தமலை அம்மைக்கு ஒருபாகம் ஈந்த
மருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 4

5 கண்டம் கரியமலை கண்மூன்று உடையமலை
அண்டரெல்லாம் போற்றற்கு அரியமலை - தொண்டருக்குத்
தோற்றுமலை நாளும் தொழுவோர் ஏழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 5

6 அன்னமுடன் சொன்னம் அளிக்குமலை ஆதரிப்போர்
உன்னுவரம் எல்லாம் உதவுமலை - துன்னுபுகழ்
கொண்டமலை அங்கிக் கொழுந்தாகி அண்டமுற
மண்டுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 6

7 மாமா தவநமச்சி வாயன் தினமொருவெண்
பாமாலை சாத்திப் பணியுமலை - காமாதி
என்னுமலை தான்கடந்தோர் இன்பத் திருஉளத்தே
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 7

8 அஞ்சுஅக் கரமாய் அமர்ந்தமலை ஆதரிப்போர்
வஞ்சக் கருவினையை மாற்றுமலை - நெஞ்சைத்
திருத்துமலை மெய்ஞ்ஞான சித்திதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 8

9 தொண்டர் வலமாகச் சூழுமலை சூழுமவர்
பண்டைவினை எல்லாம் பறிக்குமலை - அண்டம்
உருவுமலை எந்தைகுரு ஓம்நமச்சி வாயன்
மருவுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 9

10 கொம்பனைய பேதைக் குறமகளிர் வானிலுறும்
அம்புலியி னோடுவிளை யாடுமலை - செம்பவளம்
ஒத்தமலை சற்குருவாய் ஒண்கழலென் சென்னியின்மேல்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 10

11 ஞானகுரு நாதன் நமச்சிவா யன்கருணை
ஆனபரன் ஆகிஎனை ஆண்டமலை - வானவர்கள்
போற்றுமலை தீவினையேன் புந்திக்க வலைஎல்லாம். (புந்திக் கவலைஎல்லாம்)
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 11

12 சரண கமலம் தனைப்புகழும் தொண்டர்
மரண பவத்துயரம் மாறக் - கருணை
பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே
வழியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12

13 அன்பர் கருத்தில் அனவரதம் மேவுமலை
துன்பம் அகலத் துரத்துமலை - இன்பம்
விளைக்குமலை செம்பொன்மக மேருவினை வில்லா
வளைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 13

14 நண்பாக் குகையின் நமச்சிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை - திண்பார்
அளந்தமலை செஞ்சுடராய் அன்றிருவர் தேட
வளர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 14

15 சீதமல ரோன்நெடுமால் தேடுமலை அன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலிக்குமலை - மாதவர்கள்
மொய்த்தமலை உண்ணா முலைஉமையைப் பாகத்தில்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 15

16 வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 16

17 முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால்
அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு
துன்னுமலை தன்னைத் துதிக்குமடி யாருளத்தில்
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 17

18 வண்தமிழா லேநமச்சி வாயகுரு ஏத்துமலை
கண்டுதொழு வார்க்கினிய காட்சிமலை - அண்டமுதல்
நீழுமலை போற்றி நினைக்குமடி யாருளத்தே
வாழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 18

19 அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை
விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே
தைத்தமலை நாயேனைத் தன்னடியார் கூட்டத்தில்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 19

20 மன்னாளும் ஓம்நமச்சி வாயகுரு செந்தமிழால்
பன்னாளும் ஏத்திப் பணியுமலை - எந்நாளும்
மெய்க்குமலை பொல்லா வினையேனைத் தன்னடிக்கீழ்
வைக்குமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 20

21 எந்தைகுரு நாதன் இருக்குமலை என்பாச
பந்தமற நோக்கிப் பரித்தமலை - சந்திரனைத்
தேய்த்தமலை நாயடியேன் சிந்திக்கும் சிந்தனைக்கே
வாய்த்தமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 21

22 அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு
மெய்ஞ்ஞானச் சோதி விளக்குமலை - துஞ்ஞானச்
சந்தமலை நாயேற்குத் தந்தைதாய் சற்குருவாய்
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 22

23 நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23

24 ஓலமிடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில்
ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 24

25 ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ்
சோதிச் செழுஞ்சுடராய்த் தோன்றுமலை - வேதம்
முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி
வழங்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 25

26 வந்துலகில் ஓம்நமச்சி வாயகுரு வாயடியேன்
சிந்தைகுடி கொண்டிருக்கும் தெய்வமலை - முந்தைவினை
நீக்குமலை சொல்லரிய நீள்பிறவித் துன்பமெல்லாம்
மாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 26

27 சத்திக்கு ஒருபாகம் தான்கொடுத்து நின்றமலை
முத்திக்கு வித்தாய் முளைத்தமலை - எத்திசையும்
போற்றுமலை போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 27

28 வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 28

29 சிட்டர் இடரும் சிவநீதி இல்லாத
துட்டர் சுகமும் துடைக்குமலை - நட்டம்
பயிலுமலை எவ்வுலகும் பாழ்படுமென்று ஆலம்
அயிலுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 29

30 கண்டம் இருளைக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 30

31 துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான
இன்பப் பசுந்தேன் இருக்குமலை - அன்பர்க்கு
இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி
அருளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 31

32 செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 32

33 கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும்
சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும்
இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட
மகத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 33

34 பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த
வெற்றி மதராசன் வேகவே - உற்று
விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள்
அழித்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 34

35 பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை
வீடு தனக்கிருகால் மேவியே - கூட
இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும்
மணக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 35

36 கந்திக்கும் தேமாங் கனிபறித்துக் கார்க்கடுவன்
மந்திக்கு நல்கி மகிழுமலை - சிந்திக்கும்
எண்ணம்அலை வற்றோர்க்கு இனியமலை ஓரஞ்சு
வண்ணமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 36

37 உன்னு தவம்புரியும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னும் கருணைமுகில் வாழுமலை - பென்னம்
பெரியமலை மாலும் பிரமனும் தேடற்கு
அரியமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 37

38 வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல்
நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட
கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான
அருணமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 38

39 வீடு முதலா விரும்பும் பொருளனைத்தும்
பாடுமடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ்
பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை
ஆண்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 39

40 அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 40

41 மான்அனைய கண்ணார் வசமாகி நாயடியேன்
ஊனவினைக் காட்டில் உழலாமல் - ஞானநெறி
காட்டுமலை தன்னைக் கருதுமடி யாரிடரை
வாட்டுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 41

42 பிள்ளை அறுத்துதவும் பேரா ளனைஉவந்து
கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள
நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 42

43 உய்யவரம் தந்தருளும் ஓம்நமச்சி வாயகுரு
வையம்முழு தும்துதிக்க வாழுமலை - துய்யவரம்
தேக்குமலை நல்லோர் செறியுமலை பெண்ணைஆண்
ஆக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 43

44 உண்ணா முலையாள் ஒருபாகம் ஆனமலை
கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர்
துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும்
மதிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 44

45 நாதனரு ளான நமச்சிவா யன்கனிவாய்
ஓதுதமிழ் மாலை உகந்தமலை - பாதிமதி
சூடுமலை பத்திசெயும் தொண்டருடன் கூடிவிளை
யாடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 45

46 தேவரையும் தேவருக்குத் தேவராய்ச் செப்புமொரு
மூவரையும் மண்ணோர் முனிவரையும் - யாவரையும்
பெற்றமலை தன்பெருமை பேசுங்கால் தாய்தந்தை
அற்றமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 46

47 நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப்
பூசிக்கும் பூசை பொருந்துமலை - ஆசைக்குள்
வீழுமலை பற்றொழிந்த மெய்யடியார் நெஞ்சகத்தில்
வாழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 47

48 நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும்
துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றிருவர்
தேடுமலை சந்தமும் தில்லைச்சிற் றம்பலத்தே
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 48

49 நெஞ்சகத்தில் ஒன்றி நினைப்பார்க்கு மாலறியாக்
கஞ்சமொத்த பொன்னடியைக் காட்டுமலை - அஞ்செழுத்தின்
நாமமலை அம்பிகைஉண் ணாமுலைஅம் மைக்குஉகந்த
வாமமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 49

50 புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய
நன்றிதரும் பொன்னடியை நாடியே - என்றுமொரு
நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய்
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 50

51 சண்ட விடத்தைச் சகமிறந்து போகாமல்
கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர்
பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை
அணியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 51

52 தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேரொளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தரகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 52

53 மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாயென்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 53

54 தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 54

55 புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 55

56 துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 56

57 வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேரா னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவிலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 57

58 நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றிரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 58

59 தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரையிலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றருளும்
மாகமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 59

60 கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதிருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 60

61 முக்குணமும் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்குமுணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 61

62 பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 62

63 அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலமெ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமல கோனறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 63

64 கூனல் சிறுபிறையைக் கோளரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 64

65 பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்தெழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 65

66 ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 66

67 அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைபிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 67

68 கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 68

69 இமயவரும் பத்தரும்மா கேசுரரும் கானச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்கரிய
வானமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 69

70 ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்தெழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்கவரைப் பொற்கொடியோ டெய்தி
மகிழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 70

71 மாலூன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
காலூன்றி ஆனக் கருணையாய்க் - கோலூண்றித்
தந்த விருத்த சதுர்வே தியனாக
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 71

72 அறுகும் மதியும் அணிமுடிமேல் கூடல்
மறுகு தனிலடியார் வாழ - விறகு
சுமந்தமலை போற்றிசெயும் தொண்டரகம் தோறும்
அமர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 72

73 மட்டுஉலவு கஞ்ச மலரோனும் மாயோனும்
திட்டமுடன் தேடித் திகைத்தாலும் - எட்டரிய
ஞானமலை பார்மீது நால்உகத்தில் நாலுவடிவு
ஆனமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 73

74 மறைவடிவாம் சோமாசி மாறன்மகம் தன்னில்
உறைவடிவாம் பங்கிலுமை யோடு - நிறைவடிவாய்ச்
சென்றமலை அந்தணர்சூழ் தெய்வக் கனகமணி
மன்றமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 74

75 எப்பொருளும் ஆகி இருசுடர் பாராக
மெய்ப்பொருளும் ஆகி விளங்குமல - கைப்பொருளை
ஒத்தமலை எந்தலைமெல் ஓம்நம்ச்சி வாயனடி
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 75

76 பல்லுயிரும் கேட்டறியப் பார்த்தன்கை யாலடித்த
வில்லடியும் புத்தன் மிகஎறிந்த - கல்லெறியும்
பட்டமலை மன்மதனைப் பார்வையினால் வெந்துவிழ
அட்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 76

77 வானை உருவ வளர்ந்தமலை வாம்பச்சைத்
தேனைஒரு பாகத்தில் சேர்த்தமலை - யானை
அணித்திரள்சேர் சாரல் அதில்வேய்கள் ஈன்ற
மணித்திரள்சேர் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 77

78 அன்று கயிலை அரக்கன் எடுத்தஅப்போ
நின்றுஅவனைக் காலால் நெரித்தமலை - என்றும்
அருந்துமலை எவ்வுலகும் அன்பரிடர் நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 78

79 அன்றுபதி னாறுவயது ஆனமார்க் கண்டர்தமக்கு
என்றும்ஈர் எண்வயதே என்றமலை - நின்று
சிறக்குமலை தன்னடியார் செய்தகுறை எல்லாம்
மறக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 79

80 அன்றிருவர் தேட அனல்வடிவாய் நின்றமலை
நின்றுருகும் தொண்டருக்கு நேயமலை - என்றும்
நடிக்குமலை வேள்வியிலே நாரணனை ஓட
அடிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 80

81 நஞ்சணியும் கண்டமலை நாளும் அடியவர்தம்
வஞ்சவினை தானறுக்க வந்தமலை - நெஞ்சை
இளக்குமலை அன்பர்க்கு இனியபேர் இன்பம்
வளர்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 81

82 பைஅரவம் சூடுமலை பத்தர்பணிந் தேத்துமலை
கையில்மழு மாந்தரித்த காட்சிமலை - துய்ய
நதிஅணியும் வேணியின்மேல் நாறுமலர்க் கொன்றை (நறுமலர்க் கொன்றை ??)
மதிஅணியும் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 82

83 மயிலரவம் சேருமலை மான்புலிகள் கூடிப்
பயிலுமலை வானோர் பரவும் - கயிலை
பொருந்துமலை எந்நாளும் போற்றுமன்பர் நாவால்
அருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 83

84 உற்றுப் புரத்தில் ஒருமூவர் தம்மைவைத்துப்
பற்றி எரிந்துவிழப் பார்த்தமலை - நத்தியே
நாளும் தனைத்தேடி நம்புமடி யார்தமையே
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 84

85 உள்ளும் புறமும் ஒருசெயலாம் அன்பருளம்
கொள்ளுமலை நாட்டம் குளிக்குமலை - துள்ளும்
எருத்தின்மேல் ஏறுமலை என்பிறவி நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 85

86 துன்பம் அகற்றுமலை தொல்வினையை நீக்குமலை
அன்பர்தமை வாஎன்று அழைக்குமலை - தன்பதத்தைக்
காட்டுமலை தன்னைக் கருத்திலுறும் அன்பரிடர்
வாட்டுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 86

87 போதமுற்ற மெய்யடியார் புந்தியிலே வேஓடிப்
பாதமுச்சி மட்டாய்ப் படர்ந்தமலை - நாதம்
தழைக்குமலை அன்பர் தபோதனரை வாஎன்று
அழைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 87

88 முப்போதும் பூசித்து மோகித்துப் போற்றுமவர்க்கு (போற்றுமவர்க்)
அப்போது முன்நின்று அருளுமலை - எப்போதும் (கப்போது)
தாய்க்குமினி தானமலை சற்குருவாய் நாயேற்கு
வாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 88

89 காலை உதைத்தமலை கையில்மான் சூலமலை
வேலை விடமருந்தும் வெற்றிமலை - மாலை
அணிசேரும் நீள்முடிமேல் அங்கரவம் ஈன்ற
மணிசேரும் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 89

90 மாறுபட்ட தக்கனுயிர் மாய்த்தமலை மாலயற்கு
நீறுபட்ட செந்தழலாய் நின்றமலை - கூறுங்கால்
ஒப்பனைகள் இல்லாது உயர்ந்தமலை நீள்முடிமேல்
அப்பணியும் அண்ணா மலை (அப்புஅணியும்)

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 90

91 பச்சைநிறம் தானாகிப் பாதிவடிவு ஆனமலை
கச்சைஎனக் கட்செவியைக் கட்டுமலை - நிச்சயமாய்
மாளும் அடியேனை மாளா வகைஅருளி
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 91

92 மானொருகை வெற்றி மழுஒருகை ஆனமலை
ஞானமுனி வோர்கள்நித்தம் நாடுமலை - யானை
உரித்தமலை அம்மை உமைபாலே யார்க்கும்
அருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 92

93 முல்லைமலர் கொன்றை முடிமேல் அணிந்தமலை
எல்லைஇல்லா மாதவர்கள் ஏத்துமலை - தில்லையிலே
நட்டமலை முப்புரத்தை நாடுமன்பர் மூவரைவிட்டு
அட்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 93

94 எல்லாரும் காணற்கு இனியமலை என்னுடைய
பொல்லா வினைஅறுக்கப் போந்தமலை - சொல்லாரும்
நல்லமலை பொல்லாரை நாசமுறப் பார்க்கைக்கு
வல்லமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 94

95 ஆழி நெடுமால் அயற்குமரி தானமலை
ஊழின்வினை அன்பர்க்கு ஒழிக்குமலை - ஆழியிலே
நஞ்சழலைக் கண்டு நடுங்கினரைக் காக்குமலை
அஞ்சுமுகத்து அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 95

96 எத்திசையும் தோற்றுமலை ஏறுகந்து நின்றமலை
சித்திவரம் ஈந்தருளிச் செய்தமலை - முத்தர்மனம்
பூணுமலை அண்டர் புகழுமலை நீண்டதொரு
மாணுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 96

97 வண்மைக் குணத்தவரை மாதவரை வந்தடைந்தோர்
தம்மைத் தளராமல் தாங்குமலை - உண்மை
பொருந்துமலை விண்ணவர்கள் போகாமல் ஆலம்
அருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 97

98 வானத்துப் பூந்தருவை வாங்கிக் களிறுபிடி
யானைக்கு நீட்டி அணையுமலை - ஞானத்தர்
உன்னுமலை எந்நாளும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 98

99 அழியாத முத்தி அளிக்குமலை அன்பர்க்கு
ஒழியா வினையை ஒழித்துக் - கழியாத
ஏற்றுப் பிறப்பை இனிஅமையும் என்றருளி
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 99

100 பெற்றம் தனில்தோன்றிப் பெய்வளையும் தானுமென்தன்
குற்றம் களைந்தருளிக் கொண்டமலை - நித்தம்
புதியமலை கங்கைஅணி பொற்சடைமேல் வைத்த
மதியமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 100

101 அண்ணா மலைமாலை ஆனதமிழ் வெண்பாவால்
தண்ஆரும் ஐந்தெழுத்தைச் சாற்றியநூல் - பண்ணாகக்
கற்றவர்கள் கேட்டவர்கள் காசினியில் பேரின்பம்
உற்றுலகை ஆள்வார் உவந்து

அண்ணாமலை வெண்பா > நூல் பயன் > பாடல்: 101

102 மன்னுதிரு அண்ணா மலையைவலம் ஆகவந்துன்
உன்னுதிரு ஐந்தெழுத்தை ஓதினேன் - தென்னருணை
நாயகத்தைக் கோவிலிலே நான்கண்டேன் பெற்றெடுத்த
தாயகத்தைக் கண்டவர்பொன் தாள்

அண்ணாமலை வெண்பா > நூல் பாடிய முறை > பாடல்: 102

மொத்த பாடல்கள்: 102

முன்   முகப்பு