திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full

திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full
பாடல் எண் பாடல் Verse
0
1 அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக
அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 1

2 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் - தம்மில்
நிலைப்படுவர் ஓர் இருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாம் அத் தலை

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 2

3 என்அறிவு சென்றளவில் யான் இன்று அறிந்தபடி
என்அறிவில் ஆர்அறிக என்றுஒருவன் - சொன்னபடி
சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச்
சொல்லக்கேள் நான் உனக்குச் சொல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 3

4 அகளமய மாய்நின்ற அம்பலத்துஎம் கூத்தன்
சகளமாய் போல் உலகில் தங்கி - நிகளமாம்
ஆணவ மூல மலம் அகல ஆண்டனன் காண்
மாணவக என்னுடனாய் வந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 4

5 ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே
யோகங்கள் எங்கே உணர்வுகள்எங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார் அறிவார் பேசு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 5

6 சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 6

7 இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு - என்றால்
உருவுடையான் அன்றே உரு அழியப் பாயும்
உரு அருள வல்லான் உரை

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 7

8 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்த(து) என்னாதே - அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவும் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 8

9 அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதுஇலை - இன்று இதனை
எவ்வாறு இருந்தது என்(று) எவ்வண்ணம் சொல்லுகேன்
அவ்வா(று) இருந்த(து) அது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 9

10 ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்(கு)
ஒன்றும் குறியொன்(று) இலாமையினால் - ஒன்றோ(டு)
உவமிக்கல் ஆவதுவும் தாளில்லை ஒவ்வாத்
தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 10

11 ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை
மாற்றிஅவ் வாற்றால் மறித்தால்போல் - தோற்றிப்
புலன்கள் எனப் போதம் புறம்பொழியும் நம்தம்
மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 11

12 பாலைநெய்தல் பாடியதும் பாம்பு ஒழியப் பாடியதும்
காலனை அன்(று) ஏவிக் கராம்கொண்ட - பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 12

13 தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்டஉறங்குவர்கள் - ஆங்கு அதுபோல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்ட தற்பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 13

14 உள்ள முதல் அனைத்தும் ஒன்ற உருகவரில்
உள்ளம் உருகவந்து உன்னுடனாம் - தெள்ளி
உணரும் அவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லாப் பொருள்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 14

15 நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 15

16 மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே என்ன வரும் இரண்டும் - சொல்லில்
சிவதன்ம மாம் அவற்றிற் சென்றதிலே செய்வாய்
பவகன்மம் நீங்கும் படி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 16

17 ஆதியை அர்ச்சித்தற்(கு) அங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே!
நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை
மெல்வினையே என்றதுநாம் வேறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 17

18 வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே
கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை
வல்வினையே என்றதுநாம் மற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 18

19 பாதகம் என்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக்
கண்டு ஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
சண்டீசர் தன்செயலால் தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 19

20 செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை
ஐயஇது அமுது செய்கென்று - பையஇருந்து
ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி யறுத்தவரை
நாட்டியுரை செய்வதென்னோ நாம்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 20

21 செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - ஐயா
உழவும் தனிசும் ஒருமுகமே ஆனால்
இழவுண்டோ சொல்லாய் இது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 21

22 ஆதார யோகம் நிராதார யோகம் என
மீதானத்(து) எய்தும் விதியிரண்டே - ஆதாரத்(து)
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்(று)
ஆக்காப் பொருளேஒன் றாம்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 22

23 ஆக்கி ஒருபொருளை ஆதாரத்(து) அப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் - பார்க்கில்
இவனாகை தான் ஒழிந்திட்(டு) ஏகமாம் ஏகத்(து)
அவனாகை ஆதார மாம்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 23

24 கொண்ட(து) ஒரு பொருளைக் கோடிபடக் கூறுசெயின்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளும் அன்றியே இன்ன(து) இது வென்னாது
ஒருபொருளே ஆயிருக்கும் உற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 24

25 அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்(து) - அஞ்செழுத்தை
ஓதப்புக்(கு) உள்ள மதியும் கெடில் உமைகோன்
கேதமற வந்தளிக்கும் கேள்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 25

26 ஆக்கப் படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றோடும் தாக்காதே - நீக்கி உடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 26

27 காண்கின்றது ஓர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார்
காண்பானும் காணப் படும்பொருளும் அன்றியே
காண்கையினால் கண்டனரே காண்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 27

28 பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே
எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பால்
உள்நின்றும் போகான் உளன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 28

29 ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 29

30 பற்றினுள் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப்
பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும்
மற்றும் இது சொன்னேன் மதி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 30

31 உணராதே யாதும் உறங்காதே உன்னிப்
புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய
காலங்கள் செல்லாத காலத்துடன் இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 31

32 அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் - வறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவக!
தாழ்ந்தமணி நாவேபோல் தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 32

33 ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென்று ஒத்தொடுங்கில் - ஓசையினில்
அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 33

34 சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 34

35 அன்றி வரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்கும் - சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 35

36 உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில்
உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை
என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை
உன்னில் அவன் உன்னுடனே ஆம்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 36

37 தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல்நான்கும் - மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 37

38 எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையும் சென்றங்கு அளவாதே - சித்தம் எனும்
தூதுவனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனில்
பாதிதனைக் கும்பிடலாம் பார்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 38

39 சாம்பொழுதும் ஏதும் சலமில்லை; செத்தாற்போல்
ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் - சோம்புதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கண்
செல்லும் துணையாகும் சென்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 39

40 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டின் அது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 40

41 அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமுங் காலும் கை கூடும் - புரணமது
கூடாமை யும்கூடும் கூடுதலும் கூட்டினுக்கு
வாடாமை யும்கூடும் வந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 41

42 இன்றுஇங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடரும் அவன் சென்றிடத்தே - என்றும் தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூறு அல்லனோ மற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 42

43 அநாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே
அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே
ஆர்த்த துயர் அகல அம்பிகையோடு எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 43

44 தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு
பூவாக்கிப் பூவழியா மல்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 44

45 தன்னைப் பெறுவதின்மேல் பேறில்லைத் தான் என்றும்
தன்னைத்தான் பெற்றவன்தான் ஆரென்னில் - தன்னாலே
எல்லாந்தன் உட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கும் இவன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 45

46 துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கில் - என்பதனால்
நின்வசனா யேஇருக்கின் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 46

47 செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ
ஒத்தாரே யோகபர ரானவர்கள் - எத்தாலும்
ஆராத வக்கரணத் ஆர்ப்புண்டுஇங்கு அல்லாதார்
பேராமற் செல்வர்அதன் பின்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 47

48 கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர - நண்ணி
வடம் அடக்கி நிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பார்கள்காண் உற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 48

49 வானகமும் மண்ணகமும் ஆய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமதென் என்றனையேல் - ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 49

50 கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும்
அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா!
சகமார்க்கத் தால் அன்றே தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 50

51 உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் - தெள்ளி
அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின்
செறிந்தொழிவாய் ஏதேனும் செய்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 51

52 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் - கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்(று)
ஆரறியும் அன்பன் றது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 52

53 அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை
வேந்தனார்க்(கு) இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பில்
சேந்தனார் செய்த செயல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 53

54 சுரந்த திருமுலைக்கே துய்ய சிவ ஞானம்
சுரந்துண்டார் பிள்ளைஎனச் சொல்லச் - சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 54

55 அன்பேஎன் அன்பேஎன்(று) அன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 55

56 எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன் - வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட திது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 56

57 வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம்
வித்தும் அதன் அங்குரமும் மெய்உணரில் - வித்து அதனில்
காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமையால் அற்றார் பேறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 57

58 ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று - நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று
தலையன்று அடியன்று தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 58

59 செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் - எய்யாதே
மாணவக! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் இத்தால் அறி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 59

60 ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்வான் ஒருவனுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 60

61 செய்தற் கரிய செயல்பலவும் செய்து சிலர்
செய்தற் கரியதனை எய்தினார்கள் - ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்கலாய் இருக்கச்
செய்யாமை செய்யாத வாறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 61

62 இப்பொருள்கள் யாதேனும் ஏதேனினும் ஒன்றுசெய்தல்
எப்பொருளும் செய்யாது ஒழிந்திருத்தல் - மெய்ப் பொருளைக்
கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெல்லாம்
உண்டிருப்ப தென்னோ உரை

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 62

63 வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றிடில் என்
நாட்டிலே நல்வினைகள் செய்திடில் என் - கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த
மாத்திரமே யாம்கண்டாய் வந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 63

64 சிவன்முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடையது என்னறிவ தென்றும் - சிவனவன(து)
என்செயல தாகின்றது என்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 64

65 இன்று இச் சமயத்தில் அல்லதுமற்று ஏழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் - இன்று இங்கே
அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவரார்
எங்கும் இலை கண்டாய் இது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 65

66 விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும்
தெரிந்தும் தெரியாதும் நிற்பர் - தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 66

67 ஆதனமும் ஆதனியும் ஆய்நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச்
சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர்
ஏதமறக் கண்டவர்கள் இன்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 67

68 தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும் தாபதர்கள்
தாம் உணரில் இந்தத் தலம் உணரும் - தாம் முனியில்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 68

69 துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 69

70 ஓடம் சிவிகை உலவாக் கிழி அடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடுஎதிர்வெப்பு
என்புக்கு உயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 70

71 கொல்கரியின் நீற்றறையின் நஞ்சின் கொலை தவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் - நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல்
திருவாமூ ராளி செயல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 71

72 மோகம் அறுத்திடில்நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுகளை
ஏதாகச் சொல்வேன் யான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 72

73 பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத ஊராளும் தேன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 73

74 அம்மையிலும் இம்மையிலும் அச்சம் தவிர்ந்தடியார்
எம்மையுமாய் எங்கும் இயங்குதலால் - மெய்ம்மைச்
சிவயோகமே யோக அல்லாத யோகம்
அவயோகம் என்றே அறி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 74

75 மன்னன் அருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக!
அன்ன வகையது அரன் அருளும் - என்னில்
அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே எல்லாம் அறி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 75

76 உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்து ஆக்கில் - தொடங்கி
முளைப்பதும் ஒன் றில்லை முடிவதும் ஒன் றில்லை
இளைப்பதும் ஒன் றில்லை இவர்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 76

77 பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத்துஉள்ளானை உள்ளபடி - பேரின்பம்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே உண்டார் சுவை

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 77

78 நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் - நங்கையினும்
நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறும் இதுகாண்
எம்பெருமா னார்தம் இயல்பு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 78

79 பொன்நிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள்
எந்நிறத்த ளாய் இருப்பள் ஏங்கள் சிவபதியும்
அந்நிறத்தனாய் இருப்பன் ஆங்கு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 79

80 தாரத்தோடு ஒன்றாவர் தாரத்து ஓர் கூறாவர்
தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் - தாரத்தின்
நாதாதத் தேஇருப்பர் நால் தானத் தேஇருப்பர்
வேதாந்தத்தே இருப்பர் வேறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 80

81 ஒன்றுரைத்தது ஒன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க
என்னால் இயன்றிடுமோ என்போல்வார் ஏதேனும்
சொன்னால்தான் ஏறுமோ சொல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 81

82 யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
மாதேயும் பாகன் இலச்சினையே - ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதாபே தம்செய்வாய் பின்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 82

83 நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம்தெரியா
மன்றினுள் நின்று ஆடல் மகிழ்ந்தானும் - சென்றுடனே
எண்ணுறும் ஐம் பூதம்முதல் எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின்று ஆடும் பிரான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 83

84 சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச்
சிவமாகியே இருப்பது அன்றிச் - சிவமென்று
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரும் உண்டோ புவி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 84

85 அதுஇது என்றும் அவன் நானே என்றும்
அதுநீயே ஆகின்றாய் என்றும் - அதுவானேன்
என்றும்-தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்வரோ உற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 85

86 ஈறாகி அங்கே முதல் ஒன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 86

87 உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாய் நீ உற்றனையோ - மன்னுயிர்கள்
அவ்வகையே காண் இங்(கு) அழிவதுவும் ஆவதுவும்
செய்வகையே நின்றசிவன் பால்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 87

88 அவனே அவனி முதலாயி னானும்
அவனே அறிவாய்நின் றானும் - அவனேகாண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும்
காணாமை நின்றானும் கண்டு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 88

89 இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்தும் கண்டாயோ
அன்றுதான் நானுன்னைக் கண்டேனோ - என்றால்
அருமாயை ஈன்றவள் தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 89

90 கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்
கடல் அளக்க வாராதாற் போலப் - படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 90

91 சிவன் எனவே தேறினன்யான் என்றமையால் இன்றும்
சிவன் அவனி வந்தபடி செப்பில் - அவனிதனில்
உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டாய் அவன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 91

92 அவன் இவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து)
எவன் அவனாய் நிற்கின்ற(து) ஏழாய் - அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 92

93 முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்த(து) அருளென்னும் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப்பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 93

94 அகளத்தில் ஆனந்தத்(து) ஆனந்தி யாயே
சகளத்தில் தையலுடன் தோன்றி - நிகளத்தைப்
போக்குவதும் செய்தான்தன் பொன்னடிஎன் புன்தலைமேல்
ஆக்குவதும் செய்தான் அவன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 94

95 குற்றம் அறுத்(து) என்னியாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத்(து) உடனுறைவர் - முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பர்யான் மற்றொன்றைக் கண்டிடின் அக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 95

96 ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேஅறியும்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளும்
திருவியலூர் ஆளும் சிவயோகி இன்றுஎன்
வருவிசையை மாற்றினான் வந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 96

97 தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே நின்று துலங்காமல் - காலத்தால்
தாளைத்தந்து என்பிறவித் தாளை அறஇழித்தார்க்(கு)
ஆளன்றி என்மா றதற்கு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 97

98 இக்கணமே முத்தியினை எய்திடினும் தான் நினைந்த
அக்கணமே ஆனந்தம் தந்திடினும் - நற்கணத்தார்
நாயகற்கும் நாயகிக்கும் நானடிமை எப்பொழுதும்
ஆயிருத்தல் அன்றியிலேன் யான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 98

99 என்னை உடையவன்வந்து என்னுடனாய் என்னளவில்
என்னையுந்தன் ஆளாகக் கொள்ளுதலால் - என்னை
அறியப் பெற் றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 99

100 சிந்தையிலும் என் தன் சிரத்தினுலும் சேரும்வகை
வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை
மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
ஏதுசொலி வாழ்த்துவேன் இன்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 100

101 பொருளும் மனையும் அறமறந்து போகம் மறந்து புலன்மறந்து
கருவி கரணம் அவைமறந்து காலம் மறந்து மலைமறந்து
தருமம் மறந்து தவம்மறந்து தம்மை மறந்து தற்பரத்தோடு
உருகி உருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார்.

திருக்களிற்றுப்படியார் > தனிப் பாடல் > பாடல்: 101

மொத்த பாடல்கள்: 101

முன்   முகப்பு