திருமந்திரம்

113. திருவடிப் பேறு

(பாடல்கள் 1590 முதல் 1604 வரை)

பாடல் எண்: 1590

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1

தமிழ் விளக்கம்:

வினையின்வழி மனம் சென்றவாறே செல்லுதலால், உலகவர்மேற் செல்கின்ற அன்பின்வழியே மனம் நெகிழ்ந்து செல்லுகின்ற கீழோரைப் பாசத்தினின்றும் விடுபடச் செய்தற்கு ஞானகுரு வந்து அவர்களது தலையின்மேல் தனது கையை வைத்த வுடன் அவர்களது உள்ளமாகிய பொய்கையில் அவனது திருவடிகளா கிய தாமரை மலர்கள் மலர்ந்து பொருந்தி மலர்வனவாம்.

English Meaning:

Rise in loving praise of Lord
And having risen, in piety melt for Him;
Then the godly Guru comes
-He who had scorned Pasa\'s fetters-
And lays his hand on your head,
And lo! in you wells up
The rapturous Grace of His Holy Feet.

பாடல் எண்: 1591

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மின்றியே யாள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2

தமிழ் விளக்கம்:

தனது சத்தியை உலகுக்கு உதவ வைத்தபொழுதே, அவ்வுதவியைப்பெறும் உயிரை அந்நிலையில் வைத்த எங்கள் சிவ பிரான், பின்பு இப்பூமியில் குருவாகி வந்து பலருக்கு அருள் புரிந்தது, அஞ்ஞானமாகிய மரத்தை வெட்டி வீழ்த்தும் வாள்போல்வதாகிய ஞானத்தின் உறுதிப்பாட்டைத் தந்து, `வீட்டுலகத்தை எல்லையில் காலம் ஆள்க` என அளித்தற் பொருட்டு, மும்மலக் கட்டினின்றும் வெளிப்படுத்தி அருள் தோற்றமாகிய தனது திருவடிகளை அவரது இனிய தலையிற் சூட்டியேயாம்.

English Meaning:

Even as mine Master granted me the Grace of His Feet,
He had made me the head of all;
And investing me with the regalia-might of Jnana-sword,
He placed on my head the Crown of Grace Abounding,
And thus proclaimed:
May you forever hold sway over this Land of Deliverance
-All these He did, descending on earth, here below.

பாடல் எண்: 1592

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3

தமிழ் விளக்கம்:

ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.

English Meaning:

He assumed human form,
Discarding divine forms four,*
And Himself as exalted Guru came,
Signifying the Mudra of Jnana;
He, Nandi, my goodly Saviour
Blessed me;
It was He who of yore
Planted His Feet of Grace on me.

பாடல் எண்: 1593

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 4

தமிழ் விளக்கம்:

`இஃது இவ்வாறிருந்தது` எனச் சொல்லும் சொல்லும், `இவ்வாறிருக்கின்றது` என உணரும் உணர்வும் அற்றமை யால் உயிர் தன் பசுத்துவம் முற்றும் நீங்கி, அலையில்லாத நிலைநீர் போல அசைவற நிற்கும் சிவமாம் தன்மையை எம் குருநாதன் எமக்கு முற்றத்தந்து, நாத காரியமாகிய நால்வகை வாக்குக்களையும் கடந்த இயற்கை நிலையில் எம்மை இருக்கச் செய்தான்; அதனால் யாம் பேச்சற்று நிற்கின்றோம்.

English Meaning:

There was neither speech, nor feeling
Neither self, nor Over-self;
Like unto a sea where no wave lashes,
He made me unite in Sivam;
And he granted me the Boundless Form
That transcends the states four, Nada and rest,
And lo! it was beyond all words.

பாடல் எண்: 1594

குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்
றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5

தமிழ் விளக்கம்:

சிவகுரவன் உயிர்களுக்கு உள்ள மூன்று இயல்பு களையும் தான் கைக்கொண்டு, அவன் காட்டிய சின்முத்திரையையே அறியத் தகும் அரிய பொருளாக யான் கொண்டு, `நந்தி` என்னும் பெயருடைய பெரிய பெருமானாகிய சிவனது திருவடிக்கண் உள்ளம் உருகும்படி என்னை அப்போழுதே உய்யக்கொண்டருளினான்.

English Meaning:

My divine preceptor Nandi
Seized life\'s forms all three;
He assumed the Mudra of Jnana
And drew me to his Feet so godly;
Bereft of speech, I melted in bliss
Thus did He work my redemption eternal.

பாடல் எண்: 1595

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6

தமிழ் விளக்கம்:

குற்றம் அற்ற அறிவுருவனாகிய சிவகுரவன் மல பரிபாகம் வாய்க்கப் பெற்ற என்னைத் தன் திருவடியைச் சூட்டி, மலம் காரணமாக எனக்கு நியதியாக வந்து பொருந்திய `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இனி நிகழாவாறு தான் கைக் கொண்டு சிவமாகச் செய்து, பேச்சற்றதும், எல்லையில்லாததுமாகிய இன்பத்திலே என்னையே யான் அறியாதபடி மூழ்குவித்து, அதனால் எனக்கு வருகின்ற புகழையும் யான் எண்ணாதபடி என்னோடு உடன் இருந்து அருளுகின்றான்.

English Meaning:

He cleansed me of my blemishes,
Transformed me into Sivam Supreme,
And immersed me into His bliss infinite;
Bliss that is beyond, beyond words!
The fire of His Grace scorches not
Yet drank dry the three seas of mine impurities;
And annihilating my primal ego to its traces
He granted me His Feet of Grace;
And there does he abide, forever, in me.

பாடல் எண்: 1596

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7

தமிழ் விளக்கம்:

சிவன் குருவாகி வந்து, தனது திருவடிகளை எனது இதயத்திலும், கண்ணிலும், மனத்திலும் நீங்காது பொருந்தியிருக்கச் செய்து, அதனானே ஞானத்தை உணர்த்திய வகையும், அந்த ஞானத் தினால் மெய்ப்பொருளைத் தலைப்படுவித்த வகையையும், பின் அம் மெய்ப்பொருளை நீங்காதிருத்தற்குரிய முறைகளை உணர்த்திய வகையும் யான் சொல்லும் தரத்தன அல்ல.

English Meaning:

Into my bosom, on my eyes, over my head
He gently planted His loving Feet
Nandi, my Lord Supreme;
He laid me the Path,
He showed me the Truth,
He settled the course of my Destiny
Truly, truly, all that I can not describe.

பாடல் எண்: 1597

திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8

தமிழ் விளக்கம்:

எனது சென்னிமேல் தனது திருவடிகளைச்சூட்டி, அருளே எனக்கு வடிவாம்படிப்பார்த்து, அதனால், பின்பு பரம் பொருளை யான் பெறும்படி தந்தவரும், குருவடிவில் பலராலும் காணப் பட்ட ஞானத்தலைவரும், எங்கள் தலைவரும் ஆகிய நந்தி பெருமானை நான் எனது பிறவியின் வேர் அற்றொழியுமாறு அடைந்தேன்.

English Meaning:

He placed his haloed Feet on my head
He fixed his benign gaze on me
And he granted me the Form Mighty,
He, mine Nandi Great;
I saw him, my monarch, in Guru Form,
And saw the end of all births to come.

பாடல் எண்: 1598

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9

தமிழ் விளக்கம்:

(இதன் பொருள் வெளிப்படை)

English Meaning:

Jnana of Holy Feet makes you Siva,
Jnana of Holy Feet takes you to world of Siva,
Jnana of Holy Feet free you from imprisoned impurities,
Jnana of Holy Feet is Siddhi and Mukti too.

பாடல் எண்: 1599

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10

தமிழ் விளக்கம்:

எம் குரவர் எம் தலைமேல் தம் திருவடியைச் சூட்டிய அந்த முறைமையைச் செய்யாவிடில் அவர் அருள்செய்த பின்பும் வினைகள் தோன்றி, முன்பு மயங்கியிருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச்செய்யும். அதனால், பிறை முடித்த, பேரொளி வடிவினனாகிய சிவபெருமான், குருவாகி வந்து தனது திருவடியைச் சென்னி மேல் வைத்துததுபோலச் சிந்தையிலும் நீங்காது தங்குவித்தான்.

English Meaning:

When the Master blesses you not thus
With the grace of His Feet on your crown,
The Karma of yore shall distort your thoughts;
Only when the resplendent Lord of milk-white brow
Places his blessed Feet on you,
Only then, arr you truly instructed.

பாடல் எண்: 1600

கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்
குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11

தமிழ் விளக்கம்:

வெற்றியை யுடையனவும், தாமரை மலர்போல் வனவும் ஆகிய குருவின் திருவடி என்னும் நிழலை யான் அடையப் பெற்றேன். அதனால், நெடியோனாகிய மாயோனாலும் அறியப்படா தவனும், ஓங்கி வளர்கின்ற வேள்வித் தீயில் விளங்குபவனுமாகிய சிவபிரான், எனது உயிர்க் கூடாகிய உடம்பின் தன்மையையும் மாற்றி, எனது இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்குகின்றான்.

English Meaning:

I reached the cool umbrage of His triumphant lotus Feet,
That standing as a crimson pillar of flame,
Defied the grasp even of godly Mal;
And there, the Primal One saw
The eternal denoument of the fleshly cage
That held my soul a hoary captive.

பாடல் எண்: 1601

முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12

தமிழ் விளக்கம்:

ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன் னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.

English Meaning:

The crowned monarchs at best may sway the worlds three;
But they who reached His Holy Feet
Their joy no bounds shall know;
Know this:
The heavenly beings attired in kingly diadems
But turned his vassals;
And thus became for ever blemishless free.

பாடல் எண்: 1602

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13

தமிழ் விளக்கம்:

என்னை, மயக்குவனவாயும் கொடியனவாயும் உள்ள ஐம்பொறி களின் வழிப்போகாமல், என் மனத்துள்ளே சிவனது திருவடிகளை வைத்தேன். அதனால், இணைத்து உழலுதற்கு ஏதுவாகிய இரு வினைகள் என்னும் புதரை அழித்து வேதமாகிய மரத்தின் உச்சிக் கொம்பில் உள்ள மெய்ப் பொருளாகிய தேனை அறிவினால் அடைந்து இன்புறுகின்றேன்.

English Meaning:

I treasured His hallowed Feet
In the depths of my heart;
And so, shunned the deceitful course of scorching senses,
I swam past the dangerous swirls of twin Karma,
And I tasted the nectar of Truth
-the end of All Vedas.

பாடல் எண்: 1603

அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14

தமிழ் விளக்கம்:

முற்காலத்து ஞானிகள் பலரும் இறைவன் திரு வடியை அடையவேண்டியே குருவின் திருவடியைத் தம் தலையில் வைத்து அங்ஙனம் நலம் பெற்றனர். அதனால், உலக இன்பத்தையே தருவதாகிய இந்தப் பழைய பௌதிக உடம்பை இகழ்ந்து ஒதுக்கும் அந்த உயர்ந்தோர் கூட்டத்தை யடைதற்குரிய நெறியைப் பற்றினவர்களது கொள்கையும் இதுவே.

English Meaning:

The sages of yore bore full on their crown
The Lord\'s Feet twain;
They are blissful and hoary
This earth has known;
And the goal of the Pure Ones
That walk the Path of Truth;
May you reach those Feet.

பாடல் எண்: 1604

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15

தமிழ் விளக்கம்:

(இதன் பொருள் வெளிப்படை.)

English Meaning:

Verily are they, all mantra and all medicine;
All tantra and all giving;
All beauty and all pure way;
Mine Holy Father\'s Feet Twain.

← அட்டவணைக்குச் செல்ல