திருமந்திரம்

117. தவ நிந்தை

(பாடல்கள் 1633 முதல் 1644 வரை)

பாடல் எண்: 1633

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1

தமிழ் விளக்கம்:

அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவன் தலைப்பட்டு விடுவானாயின் அதன்பின் அவன் ஞானநூல்களை ஓதவேண்டுவதில்லை. `பர காயம்` எனப்படும் திருவருளையே ஒருவன் தனக்கு நிலைக்களமாகக் கண்டுவிட்டால், பின்பு அவன் தான் அதனின், வேறாய் நின்று அதனைப் பெற அவாவ வேண்டுவதில்லை திருவருள் கண்ணாகச் சிவத்தை அறிந்து அதிலே அழுந்தி நிற்கும் நிலை ஒருவனுக்கு இப்பொழுது கூடுமாயின், அவன் இவ்வுடல் வீழ்ந்தொழிய வேண்டும் என இதனை வெறுக்க வேண்டுவதில்லை. சிவயோக நிலையினின்று மீளுதல் இல்லாதார்க்குப் புலன்கள் வந்து பற்றும் வழிகளாகிய பொறிகள் செயற்படாது கெட வேண்டுவதில்லை.

English Meaning:

You need not pray, if the Soul of Souls enters in you;
You need not adore, if Siva abides true in you;
You need not die, if Samadhi you attain,
You need not renounce, if you go not the way of senses.

பாடல் எண்: 1634

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2

தமிழ் விளக்கம்:

உண்மை நூல்களின் கருத்தையறிந்து அதன்வழியே அடங்கி விட்டால் பின்பு அந்நூல்களைக் குரல் கம்ம ஓதவேண்டுவ தில்லை. சமாதி நிலை கைகூடிவிட்டால், துதித்தல் வேண்டுவதில்லை. அகத்தூய்மையாகிய பற்றறுதி உண்டாகி விட்டால், நீர் பலகால் மூழ்கல்l முதலிய புறத்தூய்மைக்குப் பெரிதும் முயலவேண்டுவ தில்லை. தன் முனைப்பு அற்று, எல்லாம் சிவச்செயலாக இருந்து விட்டால், ஒரு குறியைத் தியானிக்கும் தியானம் வேண்டுவதில்லை.

English Meaning:

You need no shouting
When in understanding you withdraw,
You need no speaking
When in Samadhi you are seated;
You need no baptismal rites
When you stand detached;
You need no meditation,
When you have reached actionless state.

பாடல் எண்: 1635

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3

தமிழ் விளக்கம்:

தொன்று தொட்டு அடிபட்டு வரும் தவம் வாய்மை, அறம் என்பவற்றைச் செய்வார் யாவரும், `அவற்றால் விளையும் பயன் இவை` என உணர்ந்தே செய்வர். அங்ஙனம் அறிந்து அவற்றைக் கடை போகச் செய்து அப்பயனைப் பெற்றவர்கள் விண், மண் என்னும் இரண்டுலகத்து உள்ளாரினும் மேம்பட்டவராவர்.

English Meaning:

They who perform tapas true
Shall know the fruit thereof
They who speak truth pure
Shall know its fruit thereof
They who stand in righteous way
Shall enjoy the fruit thereof
They who are great on earth
Shall reap heaven\'s fruit.

பாடல் எண்: 1636

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே. 4

தமிழ் விளக்கம்:

சிவனடியார்களோடுகூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின்கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.

English Meaning:

In oneness of mind I did tapas
And witnessed Lord\'s triumphant Feet;
In eagerness of quest I did tapas
And witnessed Siva-State;
That alone is tapas
That you perform in the yearning of heart;
What avails the tapas of those,
Who thus perform not?

பாடல் எண்: 1637

மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித்
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 5

தமிழ் விளக்கம்:

மனத்தின்கண் நிறைந்து நிற்கின்ற ஆசையாகிய பெரிய எழுகடல்களைக் கையாலே நீந்திக் கடந்து தவத்தில் நிற்பவரே தமக்கு என்றும் சார்பாகும் மெய்ப்பொருளை அடைவர். அது மாட்டாதே தவம்செய்து பிறவியில் அழுந்துவோர் மேற்குறிய அத் தவத்தோரை வழிபடுவாராயின், அவர் சிவனைத் தம் கண்முன் னாகவே காணுதலும் கூடும்.

English Meaning:

Swimming across the seven seas of the mind
The tapasvins true their heaven reached;
Let them that are tossed in the sea of births about
Listen but to their Commandments holy,
Then can they see Nandi, face to face, for sure.

பாடல் எண்: 1638

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 6

தமிழ் விளக்கம்:

உள்ளமாகிய உறையிலே உள்ள ஞானமாகிய வாளை உருவி ஐம்பொறிகளாகிய பசுக்களைப் பிணித்துள்ள ஆசை யாகிய கயிற்றை இரண்டு துண்டாய் அறும்படி அறுத்து அவைகளை ஏனைப் பசுக் கூட்டத்தினின்றும் நீக்கி, அப்பசுக்களோடு தாமும் கொல்லையிற் சென்று மேயாதபடி அவற்றை மடக்கி வைத்தல் ஒருவனுக்கு கூடுமாயின், தவத்தில் தோன்றுவனவாகிய ஆறு ஒளிகளும் அவனுக்கு உரிய ஒளிகளாகிப் பயன் தரும்.

English Meaning:

Unsheath your sword of Jnana from mind\'s scabbard,
Flash it across the bonds of pasa, hacking them twain;
And watch your Self, lest senses five run wild;
Then, shall light that is of tapas born
Become light of the Self.

பாடல் எண்: 1639

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 7

தமிழ் விளக்கம்:

அவரவரது பரிபாகநிலைக்கு ஏற்ப அவரோடு இயைந்து நீங்காது நின்று அருளுபவனாகிய இறைவனை அவனுக்கு அடியராய் நின்று வாயார வாழ்த்துதல் அவன்பால் பக்தியை மிகுவிக்கும். ஐம்பொறி யடக்கல் முதலிய நோன்புச் செயல்கள் அவர் முனிவராம் நிலையை நிலைபெறுவிக்கும். இறைவனை அடிபணிந்து தொண்டுகள் பலவும் செய்து நிற்றல் முத்தியைத் தரும்.

English Meaning:

In intimacy He stands within us;
Pray that He grant you Bhakti;
Prostrate that He grant you Mukti;
Truly, it is tapas that makes Munis divine.

பாடல் எண்: 1640

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 8

தமிழ் விளக்கம்:

தலையாய நூல்களை அறியும் முன் நான் சிவனுக் கென்று கருதியே பச்சிலையைக் கிள்ளியும், பூவைப் பறித்தும், சில மலர்களைத் தொடுத்தும் பணிபுரிந்தேன். ஆயினும் அவற்றால் யாதொரு பயனும் விளையக் காணவில்லை. அந்நூல்களை அறிந்த பின் சிவனிடத்தே என் உள்ளம் குழைந்து நின்றது அதனால், சிவத்தைத் தலைப்பட்ட அனுபவத்தை அடைந்தேன். ஆகவே, நான் தவத்தை உணர்ந்தவாறு அதுவேயாயிற்று.

English Meaning:

I gathered the tender leaves and flowers variegated
I wove a garland
All for my Father;
Yet I saw not the gushing waters of Grace;
I scanned the lofty lores of scriptures
And my heart ebbed low;
But I stood in tapas
And touched Cranium heights
Lo! met mine Lord.

பாடல் எண்: 1641

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்
உடரடை செய்வ தொருமனத் தாமே. 9

தமிழ் விளக்கம்:

விரிந்த சடைமுடியோடு பெரிய தவத்தை மேற் கொண்ட அடியவர்க்கு யாதொரு துன்பமும் வாராதவாறு இறைவன் தனது அருளை வழங்குவன். அவ்வருளைத் தெளியாது தமக்குத் துன்பம் வராமல் மணி மந்திர ஔடதங்களால் காப்புச் செய்து கொள்வ தில் காலம் போக்குவாரது தவ நிலையை நோக்கின் அது, துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக்கொள்வதோர் பித்தச் செயலாகவே முடியும்.

English Meaning:

To the devout tapasvins, who in dishevelled locks sit
Lord lets no harm happen,
He His Grace lends;
And you look at tapas
Of those that all trials overcame,
Know you, it is by their oneness of mind in tapas
They blocked the births to come.

பாடல் எண்: 1642

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 10

தமிழ் விளக்கம்:

நூல்முறைமையை அறியாதவர் பசி, வெயில், மழை முதலியவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தவத்தைச் செய்யமாட்டாராய், இல்லறத்தார் இடும் சோறு முதலிய வற்றைப் பெற்றுப் பிழைத்தற்பொருட்டுத் துறவு நிலையிற்புகுந்து தவத்தவர்போல வேடம்பூண்டு திரிதல், யாற்றில் ஒருதுறைக்கண் முதலை இருத்தலைக் கண்டு அஞ்சி அதனைவிட்டு நீங்கி, மற்றொரு துறைக்கண் குட்டிகளை ஈன்ற கரடி அக்குட்டிகளோடு குளித்துக் கொண்டிருத்தலை யறியாது அதன்கண் இறங்கி அக்கரடியினிடத்து அகப்பட்டாற்போல்வதாம்.

English Meaning:

In fear they ran from the croc\' in the river
And on the bank they fell into the embrace of the bear
Thus are they the ignorant of scriptures,
Who from austere tapas run away
For food and in hunger roam for ever.

பாடல் எண்: 1643

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 11

தமிழ் விளக்கம்:

தவ உணர்வாகிய பழம் பழுத்தற்பொருட்டும், பின் அத்தவத்தால் அனுபவம் பெறுதலாம் அப்பழத்தை உண்ணுதலைச் செய்தற் பொருட்டும், பிராணவாயுவாகிய இளங்கன்று துள்ளிச் சென்று அப்பழம் வைக்கப்பட்டுள்ள மனமாகிய அந்தக்கோணியில் புகுந்து அப்பழத்தைத் தின்றுவிடாதபடி - அஃதாவது தவ உணர்வைப் போக்கிவிடாதபடி - அதனைப் புருவ நடுவாகிய கொட்டிலில் கட்டி வைக்க வல்லவர்க்கு யாதொரு மனக் குற்றமும் உண்டாகாது; உள்ள மாகிய வயலில் ஊன்றுதற்கு ஞானமாகிய ஒப்பற்ற வித்தும் கிடைக்கும்.

English Meaning:

Inside the body-sack
The tiny calf of senses jumps about
For the fruit to ripe and for the ripened fruit to eat;
They that can tether the lusty legged calf to the yard
Shall no more have pulls within;
Their thoughts will in oneness center.

பாடல் எண்: 1644

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 12

தமிழ் விளக்கம்:

ஒருவர்க்கு அவரது உள்ளம் சிவமேயானபொழுது அவருக்குச் செய்யக் கடவ தவம் யாதும் இல்லையாம். அவரைப் போல உள்ளம் சிவமாய்ச் சிவானந்தத்திலே திளைத்திருக்கப் பெற்றோரது உறவே அவருக்கு உண்டாகும்; பிறரது உறவுகள் யாவும் அற்றொழியும். சித்தியும், வீடுபேறும் அவர்க்கு எளிதின் உளவாம். ஆகையால், உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகும்.

English Meaning:

If your thoughts be all of Siva
You need no more penance perform;
If your thoughts find a kin
With those that have Siva Bliss tasted,
Then shall you be one with Siva;
Then is truly Siddhi and Mukti;
But your thoughts shall be of all Siva
Only by tapas intense.

← அட்டவணைக்குச் செல்ல