திருமந்திரம்

128. பிண்டலிங்கம் (உடற் சிவம்)

(பாடல்கள் 1726 முதல் 1729 வரை)

பாடல் எண்: 1726

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1

தமிழ் விளக்கம்:

மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.

English Meaning:

The Human Form is unto Siva Lingam
The Human Form is unto Chidambaram
The Human Form is unto Sadasivam
The Human Form is unto the Holy Dance, forsooth.

பாடல் எண்: 1727

உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2

தமிழ் விளக்கம்:

உடம்பில் பொருந்தியுள்ள அழுக்கினை மண் குழைத்த நீர் போக்கித் தூய்மை செய்து, சிவனை அந்த உடம்பாகிய இலிங்கத்திலே வழிபடுங்கள்; இறந்த பின்னும் இறந்தவராக மாட்டீர்; என்றும் ஒரு பெற்றியை உடையிராய் வாழ்வீர்.

English Meaning:

Tired they are not;
Still they want to live
In this fleshly body,
Of earth, water and other matter made;
They seek not to adore Lord
Whom the Elements Five
Together in prayer beseech.

பாடல் எண்: 1728

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 3

தமிழ் விளக்கம்:

உடம்பை இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளியவுடன், அதனைத் தங்கள் இல்லமாகக் கொண்டு வாழ்ந்து அதில் உள்ள உயிரை அலைக்கழித்து வந்த ஐம்புல வேடர், தம் நிலைமாறி, அந்த உடம்பு தானே அதில் உள்ள உயிர்க்கு உய்யும் வழியாக உடன்பட்டு, அவ்வுயிரின் வழிநின்று அதற்குத் துணைபுரிவர். அந்த முறையில்தான் அந்த ஐம்புல வேடரை அவர் குறும்பை அடக்கி ஆளுதற்குரிய தலைவனாகிய மனம் அவர் வழிப்படுதலை விட்டு என்வழிப்பட்டது. அதனால், `அந்த உடம்பாகிய இல்லத்தைச் சிவன் தன் இல்லமாக ஏற்றுக்கொண்டு என்னை ஆட்கொள்ளுதற்கு அதன்கண் வந்து வீற்றிருக்கின்றான்` என்று உணர்கின்றேன்.

English Meaning:

The day the Lord entered this body tabernacle
The Five Senses who their places had taken
Opened the gates;
And showed you the way of redemption;
As unto the mother\'s home
He in me entered;
And taking charge of the gates, Master became.

பாடல் எண்: 1729

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4

தமிழ் விளக்கம்:

எங்கள் பெரும்பெருமான் மக்கள் உடம்பைக் கோயிலாக் கொண்ட நிலையில் புழைக்கடையாகிய மூலாதாரத்தை யும், அதற்குமேல் குய்யத்திற்கு அணித்தாயுள்ள சுவாதிட்டானத்தை யும் தன்னை அக்கோயிலிலே காண்பதற்குரிய வழிகளாகக் கொண்டும், உடம்பின் உள்ளே உள்ள நாடிகளில் தலையானவையாம் பத்து நாடிகளின் செயற்பாடுகளை அக்கோயிலில் நிகழும் வழி பாட்டுச் செயல்களாக ஏற்றும் விளங்குதல் செய்து, அதனால் புலன்கள் ஐந்தனையும் அடங்கப் பண்ணி, அவ்வுடம்பையே தான் மக்கள் உயிர்க்கு அருள் பண்ணும் வாயிலாகக் கொண்டிருக்கின்றான்.

English Meaning:

At the Feet of the Lord
Who this body as His temple chose
Lies the forest of Vedas;
At the Feet of the Lord
Who these gates made His own
Lie the Nadis ten;
He who, our adoration received
Subduing our senses five
In me entered operating the gates wide;
He, My Lord, the Nandi Great.

← அட்டவணைக்குச் செல்ல