திருமந்திரம்

137. குருபூசை

(பாடல்கள் 1847 முதல் 1856 வரை)

பாடல் எண்: 1847

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்
போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1

தமிழ் விளக்கம்:

எனக்கு இனி வேறொரு துணையின்றாகத் தாம் ஒருவரே துணையாய் நிற்கின்ற நந்தி பெருமானது திருவடிகளைப் பற்றி நின்றே உயிர்கள் பற்றி ஒழுகுதற்குரிய இறைநூல், அவற்றின்வழி இறைவனை வழிபடும் வழிபாடு, அகக்கோயில்களாகிய ஆதாரங்கள், முப்பத்தாறு தத்துவங்கள், அத்தத்துவங்களைக் கடந்து அவையனைத் திற்கும் மேலே செல்கின்ற தூய்மை ஆகிய இவைகளை நான் கருத்தாக உணர்ந்து, உலகர்க்கும் உரைப்பேனாயினேன்.

English Meaning:

Grasping the lotus feet of Nandi that blesses me,
I shall relate the way of Upadesa, (imparting divine knowledge)
That to redemption leads;
Of Puja that is performed;
And of the Way to transcend Adharas six
And to ascend beyond.

பாடல் எண்: 1848

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 2

தமிழ் விளக்கம்:

காட்டில் பொருந்தியுள்ள கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தெடுக்கப்பட்ட நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தையும், அதுபோலவே ஆகாயம் அளாவக் குவிக்கபப்ட்ட பெருமை மிக்க மலர்கலையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் உடம்பைத் தம்மின் வேறாக உணர்ந்து அதன்கண் உள்ள பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்பவர்க்கல்லது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

English Meaning:

With the sweet scented sandal
That in the forest recesses grows,
And with flowers rare
That heavenward blossom
You may adore Him;
But unless you know Him,
Your fleshly desires rid
You cannot reach His Feet
That are with honeyed flowers bedecked.

பாடல் எண்: 1849

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே. 3

தமிழ் விளக்கம்:

குருவருளால் கேள்வியாகப் பெற்ற ஞானத்தைப் பின் சிந்திதத்ல, தெளிதல் என்பவற்றின்பின் நிட்டையாக முதிரப் பெறின் அவ்விடத்தில் அந்த நிட்டையில் நிற்றலே பரசிவ பூசை யாகும். (ஆகவே அந்நிலையை அடைந்தவர்க்கு ஏனையோர்க்குக் கூறப்பட்ட சிவபூசைகள் வேண்டாவாம்) அந்நிலையை அடையாது கேள்வி முதலிய மூன்றில் நிற்போர்க்கு, ``உள்ளம் பெருங்கோயில்`` என்னும் மந்திரத்துட் கூறியவாறு செய்யும் ஞான பூசையே சாதனமும், அப்பூசையின் பயனாகத் தற்போதம் கழன்றிருத்தலே பயனும் ஆகும்.

English Meaning:

When you excell in the Path of Jnana
That leads unto the Para Supreme,
The Path of Jnana is all Archana;
Great indeed is constant worship within;
To reach the Lord\'s Feet is to still actions all.

பாடல் எண்: 1850

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 4

தமிழ் விளக்கம்:

உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.

English Meaning:

Morn, noon and eventide
Adore the Lord;
Adoring chant the word 'Nama'--(I worship)
Chanting, invoke Him in luminaries three--the Sun, Moon, and Fire;
The famed Nandi is the Lord Supreme.

பாடல் எண்: 1851

புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 5

தமிழ் விளக்கம்:

English Meaning:

A hundred times blessed
Is to perform puja in places holy;
A ten hundred times blessed
Is to worship His Presence;
A hundred, hundred times blessed
Is to feed those their thoughts have stilled;
Blessed, blessed far indeed is to see
That a Jnani is to contentment fed.

பாடல் எண்: 1852

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 6

தமிழ் விளக்கம்:

`சந்திர கலை` எனவும், `சூரிய கலை` எனவும் சொல்லப்படுகின்ற இடநாடி மூச்சும், வலநாடி மூச்சுக் காற்று இயங்கின் மனம் புறத்தே ஓடுதலல்லது அகத்தே அடங்கி நில்லாது. ஆகவே, அது பொழுது செய்யும் வழிபாடு குற்றம் உடைத்தாம் ஆதலின், ``அஃது அசுரர்க்கு வாரியாம்`` என்றும், மூச்சுக்காற்று இயங்காது அடங்கின் மனமும் புறத்தே ஓடாது அகத்தே அடங்கி நிற்கும். ஆகவே, அதுபொழுது செய்யும் வழிபாடு குற்றமில்லாதாம் ஆதலின், ``அது நந்திக்கு மாபூசையாம்`` என்றும் கூறினார். சிவ பூசையே பெரிய பூசையாதல் பற்றி, ``மாபூசை`` என்றார். மூச்சுக் காற்றை மேற்கூறிய இருவழிகளிலும் செல்லாது அடக்குதலே பிராணாயாமமாம். அம்முறையால் பிராணனை அடக்கியவழி கும்பகமாம். அப்பொழுது மூச்சுக் காற்று நடுநாடியிற் செல்லும். அங்ஙனம் செல்லும்பொழுது தியானங்கள் இனிது கைகூடும். ``எந்நிலையில் நிற்போரும் `வழிபாடு` என்பதை மேற்கொள்ளும்பொழுது பிராணாயாமம் செய்து செய்க`` என்றபடி. வாரி - வருவாய் அறவே விலக்குதற் பொருட்டு ``அசுரர்க்கு வாரியாம்`` என்றாரேனும், `பயன் அற்பமாம்` என்றலே கருத்து என்க.

English Meaning:

The Pujas that you perform
When Nadis, sun and moon, active beat
Are for Asuras meet;
The Pujas that you perform
When Nadis sun and moon are quelled
Are alone for Holy Nandi appropriate.

பாடல் எண்: 1853

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 7

தமிழ் விளக்கம்:

சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.

English Meaning:

When beyond the Spheres of Sun and Moon you ascend
There Bindu and Nada are;
Ascending (through Adharas) thus,
Your Awareness crosses
The frontiers of Waking State;
There when you continuous worship Nandi,
That verily is worship Divine.

பாடல் எண்: 1854

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 8

தமிழ் விளக்கம்:

மனத்தின் ஓட்டத்திற்குக் காரணமாயுள்ள இட ஓட்ட வல ஓட்ட மூச்சுக் காற்றுக்களை அவ்வழியே ஓட விடாது தடுத்து நடு நாடி வழியாக ஓடும்படி மாற்றி, பூத காரியமாய் நின்று அழிகின்ற உடலை அவ்வாறு அழியாது நிலைத்திருக்கின்ற உடலாகச் செய்தற் பொருட்டு அதன் காரணமாகிய பூதங்களில் ஒடுக்கி அவையாகச் செய்யுமாற்றால் போக்கி, மீண்டு அது திருவருளினின்றும் தோன்றச் செய்யுமாற்றால் திருவருள் உடம்பாக ஆக்கி அதனுள் தான் புகுந்து சிவமாகி அதனானே சிவானந்தம் மேலிட நின்ற வழிபடும் வழிபாடே ஒப்பற்ற வழிபாடாகும். அதனையே சதாசிவ மூர்த்தி ஏற்பர்.

English Meaning:

Course the Sakti Kundalini,
Transcend the successive gates of Awareness;
Reduce the perishable body to its elemental (tattva) constituents
And then discard them;
Then do you enter the Grace of the Holy One
And there you abide and adore
That indeed is the worship meet for Sadasiva.

பாடல் எண்: 1855

பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 9

தமிழ் விளக்கம்:

பகலும், இரவும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றுகின்ற பூசைகள் காலத்தைக் கடந்தவனாகிய சிவனுக்கு முற்றிலும் நேர்படும் பூசைகள் ஆகா. மற்று, அவ்வேறுபாடு தோன்றாத பூசைகளையே சிவன் முழுமையாக ஏற்பான்.

English Meaning:

The worship that you perform
By day and night
Is to the Lord an offering of flower twain;
The worship that you perform
Where neither day nor night is
Is to Him of the flowing matted locks
Acceptance full and replete indeed.

பாடல் எண்: 1856

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 10

தமிழ் விளக்கம்:

இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையேயிருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறுநினைவின்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.

English Meaning:

Seated in the sphere where neither day nor night is
The supreme honeyed bliss I imbibed;
Lost in thought to events outside
At the holy Feet of Lord
Where neither day nor night is,
I dispelled the Maya twain,
That with day and night compare.

← அட்டவணைக்குச் செல்ல