திருமந்திரம்

143. பூரணக் குகை நெறிச் சமாதி

(பாடல்கள் 1902 முதல் 1909 வரை)

பாடல் எண்: 1902

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1

தமிழ் விளக்கம்:

இயன்ற அளவு யோக நெறியில் நின்ற யோகி அந்நிலையிலே தனது புற உடலை விட்டு நீங்கினால் நீங்கின காலம வளர்பிறைக் காலமாய் இருப்பின் முன்னர்த் தேவருலகை அடைந்து சில காலம் இருந்து, பின் சூரிய மண்டலத்தில் நுட்பமாய்ப் புகுந்து, அப்பால் பிதிரர்கள் உலகத்தில் தங்கி, இறுதியில் சந்திர மண்டலத்துள் தஹ்கி அங்குள்ள இன்பத்தை நுகர்வான்.

English Meaning:

When the Yogi his mortal coil shuffles,
During the phase the Crescent moon waxes
He (the soul) shall reach the world of Devas;
There for a while abiding,
Into the Sphere of Sun he subsides;
Thence He reaches the Sphere
Where the Souls of Ancestors dwell;
And from there, finally in the Sphere of Moon, he abides.

பாடல் எண்: 1903

தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 2

தமிழ் விளக்கம்:

யோக நிலை முற்றப்பெறாது உடல்விட்ட யோகிக்கு மேற்சொல்லியன எல்லாம் பொருந்தும். அவன் அவ்வாறு மேற்சொல்லிய இடங்களிலெல்லாம் தங்கிப் பயன்களை நுகர்ந்தபின் அங்கு நின்றும் பூமியில் வந்து பிறந்து விட்ட குறையாகிய வினையைப் புசித்துத் தீர்ந்தபி திருவருளின் துணையைப் பெற்று இடைவிடாது யோகத்தின் முதிர்ந்த நிலைகளை எய்துவர்.

English Meaning:

All these of the Yogi,
This life in Samadhi ended;
When that does happen not,
He will in this world take refuge again,
And by Lord\'s Grace
Resume Yoga in practice continual
And thus complete the undertaking, unfinished.

பாடல் எண்: 1904

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 3

தமிழ் விளக்கம்:

மேற்கூறிய யோகி மேற்கூறியவாறு உலக மக்கள் நெறியிலே தானும் நின்று, அதற்கு இடையிலே யோகம் முதிரப் பெற்றுச் சிவயோகியாவான். அங்ஙனம் அவன் சிவயோகி ஆவதற்கு வழி பிராசாத மந்திரம். அந்த மந்தித்தில் நின்று சிவயோகி ஆவதற்கு முன்பு அவன் பொதுவான யோகப் பயிற்சியால் கிடைக்கும் காய சித்தியைப் பெறுதலும் உண்டு.

English Meaning:

Thus in the world they will be
And in Siva Yoga again be;
And as Siva Yogin in Bindu merge,
Many miraculous powers attain,
The Siddha-hood their fleshly body reaching.

பாடல் எண்: 1905

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 4

தமிழ் விளக்கம்:

பிராசாத யோகமாகிய சிவயோகத்தில் நின்றவன் ஞானம் பெற்றவனோடு ஒத்தவனேயாவன். அவன் ஞானம் பெறுதற்கு முன் உடலை விட்டு நீங்கினானாயினி நேரே சிவலோகத்தையே அடைந்து அங்கு இன்பம் துய்த்தபின் மீளப் பிறந்து அந்தச் சிவ யோகத்தின் வழியே பெற்ற ஞானத்தால் மேன்மை எய்தி அத்தன்மை யாரோடே இருப்பன். அவ்வாறன்றிச் சிவலோகம் முதலியவற்றிற் செல்வோர் பசு புண்ணியம் செய்தவரே யாகையால் சிவயோகி ஆங்கெல்லாம் புகான்.

English Meaning:

While in the pursuit of Yoga
If Siva Yogins, holy, die,
They reach the World of Tapas
Only to this world return
And to Yoga repair;
Blessed indeed are they,
Whom the Beings Celestial praise high.

பாடல் எண்: 1906

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 5

தமிழ் விளக்கம்:

குறைவில்லாத ஞானத்தைப் பெற்றவன் `குறை வற்ற யோகி` என்றும் சொல்லப்படுவான். (அதற்குக் காரணம், உடம்புள்ள வரையில் அவன் உடலை விட்டு நீங்கியபின் வேறோர் உடலை எடுத்தல் இன்றியே, உடம்பில் மோன சமாதி நிலையில் தான் வேறின்றி இருந்தவாறே உடனே தான் சிவமேயாவன் ஆகவே, அவன் பரமுத்த னாதலன்றி, உலகியல் உணர்வைப் பொருந்திப் பிறப்பில் மீளான்.

English Meaning:

If Sivayogi gives up life,
In mauna Samadhi he enters
To seek the state unitive;
He will not in another body be born,
Nor as Jivan Mukta return
Conscious of here below;
But with Lord get united in one.

பாடல் எண்: 1907

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 6

தமிழ் விளக்கம்:

`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறை யிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம்முறை யில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை. (என்றதில், `அவர் சிறப்பாக அடையும் பயன் வேறில்லை` என்றபடி) இனிப் பொதுவான யோகத்தைச் செய்து அதன் பயனாகச் சித்திகளைப் பெற்றவர் இறந்தாரானால், அவரது புகழ் உலகில் இறவாதிருக்கும். ஆகவே, மும்மலங்களும் கெடப்பெற்றோரே வாழ்விலும், வாழ் விற்குப் பின்னரும் சிவமாய் நிற்கும் சிறந்த பேற்றை உடையராவர்.

English Meaning:

Blessed indeed are those who die
If in death they unite one with Lord;
Then, even dead, alive are they;
They who are dead unto the Impurities Three
Are Siddhas true.
Siva they become.

பாடல் எண்: 1908

உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 7

தமிழ் விளக்கம்:

ஞானத்தைப் பெற விரும்பும் உறுதியுடையவன், `சிவனையன்றி வேறொன்றையும் நினைத்தல் கூடாது` என்னும் எண்ணமாகிய விதையை முதலிலே தனது உள்ளமாகிய நிலத்தில் ஊன்றி, (அந்த எண்ணம் சத்திநிபாதத்தால் உண்டாகும்) அங்ஙனமே சிவனையே பலகாலும் நினைத்தும், போற்றியும் வருவானாயின், அந்தச் சிவனே அவனுக்கு ஞானியர் குழாத்தை அவனுக்கு அருள் புரியும் வண்ணம் கூட்டுவிப்பான். (சேரமான் பெருமாளுக்கு வன் றொண்டரைக் கூட்டுவித்ததுபோல.) அங்ஙனம் கூட்டுவிக்கப்பட்ட பின் அவன் தானும் அக்குழாத்து ஞானியர் போல உலகத்தார் அனைவரையும் தன் மக்கள் போலக் கருதி, `அவர்களும் தான் பெற்ற பேற்றைப் பெற வேண்டும்` என விரும்புவான். அத்தகையோனுக்குச் சிவன் அவன் விரும்பியவாறெல்லாம் காட்சி தருவான்.

English Meaning:

Who intense seek the Grace of Lord Exalted
Their birth to sunder,
He himself draws them
Into the fold of His devotees dear;
Unto it, the Jnani draws unto him
His disciples, in love abounding,
In his own way subtle,
Toward Godhood, He shapes them.

பாடல் எண்: 1909

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 8

தமிழ் விளக்கம்:

ஓரோரிடத்தில் மட்டுமே உள்ளது போலக் கட்டடங் களுக்கு உள்ளதுபோலக் காணப்படுகின்ற ஆகாயம் உண்மையில் அவ்வாறின்றி எங்கும் நிறைந்திருத்தல் போல இறைவன் ஓரோ ரிடத்தில் மட்டும் இருப்பவன் போல அங்கங்குள்ள குருலிங்க சங்க மங்களிலே இருப்பினும் உண்மையில் அவன் அந்த இடங்களை யெல்லாம் கடந்து எங்கும் இருக்கின்றான். இந்த உண்மையைத் திருவருளால் உணர்ந்து அந்தத் திருவருள் வியாபகத்திலே நிற்பவனே சிவஞானியாவான். அவன் உடல் விட்டால் அவனுக்கு சிவன் தனது எங்கும நிறைந்த நிறைவு நிலையை அனுபவமாகச் செய்து எல்லை யில்லாத இன்பத்தையும் அருளுவான்.

English Meaning:

The heart of Siva Jnani overflows in Grace;
He sees Siva everywhere;
He feels His presence pervasive;
Fragmented may be the sky you see;
But all space it engulfs;
Unto it, the Jnani,
Though rid of consciousness here,
One with Siva pervasive exists.

← அட்டவணைக்குச் செல்ல