திருமந்திரம்

151. சிவாதித்தன்

(பாடல்கள் 2001 முதல் 2004 வரை)

பாடல் எண்: 2001

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1

தமிழ் விளக்கம்:

உயிர் அடைந்த ஞான ஒளியினுள்ளே வந்து எழு கின்ற சிவத்தினது ஒளியால் அக ஒளியாகிய அறிவை மறைந் திருந்த அக இருளாகிய ஆணவ மலமும், அதனால் விளைந்த அறியாமையும் இராக்காலத்திலே பொருந்தி எழுகின்ற அருணோதயத்தால் அதற்கு முன் திணிந்திருந்த இருள் நீங்குதல் போல நீங்கியொழியும்.

English Meaning:

The darkness of contending Pasa,
And the Ignorance vast
These flee fast,
Before the Jnana Light of Siva,
Even as when the luminous Sun rises,
The murky darkness, before him, flees.

பாடல் எண்: 2002

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2

தமிழ் விளக்கம்:

நில உலகின்கண் நீர் நிரம்பிய குடங்களில் ஆதித்தனை நோக்கி வாயைத் திறந்துள்ள குடங்களில் தான் ஆதித்தன் விளங்குவான். அவ்வாறின்றி ஆதித்தனை நோக்காதவாறு மூடி வைக்கப்பட்ட குடங்களில் யாதொன்றன் நீரிலும் ஆதித்தன் விளங் குதல் இல்லை. சிவன் உடல்தோறும் உள்ள உயிர்களில் விளங்குதலும் ஆதித்தன் குடத்து நீரில் விளங்குதல் போல்வதுதான்.

English Meaning:

In pot to pot the sun appears,
Well may you the pots close,
Yet in them you contain him not;
So, too, when Lord that poison swallowed
This body enters,
There can you contain Him not
He pervades all.

பாடல் எண்: 2003

தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே. 3

தமிழ் விளக்கம்:

இங்குக் கூறிவரும் சிவாதித்தன் தான் ஒருவனே யாயினும் சுடர்களை எங்கும் வீசுகின்ற ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களும் ஒன்று கூடினாற் போன்ற பேரொளியாய் இருப்பான்; தன்னை அழிப்பவனாகப் பலர் கருதினானுலும் அயனாய் நின்று படைப் பவனும், அரியாய் நின்று காப்பவனும் தானேயாகும். மேலும் அவன் உயிர்களில் மட்டுமன்றி, உடல்களிலும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்றான். இன்னும் தான் ஒருவனே ஆகாயமாயும், அதன் கண் விளங்குகின்ற ஒளிகளாயும் நிற்றலேயன்றி இருளாகவும் ஆகின்றான்.

English Meaning:

Himself as the Three Lights (Sun, Moon and Fire) in one stands;
Himself as Brahma and Vishnu stands established;
Himself as life and body indistinguishably stands
Himself Space, Light, and Darkness too.

பாடல் எண்: 2004

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4

தமிழ் விளக்கம்:

தெய்வச் சுடர் அங்கி, வேள்வித் தீ ஞாயிறுமுதல் வானகம் ஈறாயினவும் ``பல்லுயிர்`` என்றதும் வெளிப்படை. ஐவர், பிரமன் முதல் சதாசிவன் ஈறானவர். அவர்க்கு இடம் ஆவன சுவாதிட்டானம் முதல் ஆஞ்ஞை ஈறாய் உள்ள ஐந்து ஆதாரங்கள். ஆறு அங்கம் ஆஞ்ஞையிலிருந்து கீழ்நோக்கி எண்ண ஆறாவதாகும் மூலாதாரம். சைவப் பெரும்பதி - இவை யாவும் சிவத் தலங்களாகும்.

English Meaning:

The divine Fire, Sun and Moon,
The earth, water, fire, wind and space
And the creation countless
These the abodes ancient of Siva are;
The Five Gods, (Brahma, Vishnu, Rudra, Mahesa, Sadasiva)
Are in the Vedas that has Angas six.

← அட்டவணைக்குச் செல்ல