திருமந்திரம்

159. அசற்குரு நெறி

(பாடல்கள் 2044 முதல் 2048 வரை)

பாடல் எண்: 2044

உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1

தமிழ் விளக்கம்:

இதன் பொருள் வெளிப்படை.

English Meaning:

A fool he is,
Wisdom none he has;
Truth he has realized not;
Versed is he not in the way
Of Vedas and Agamas;
Humility he has none;
Of God he speaks ill;
Worldly life is his sole concern;
He, verily, is the Guru unholy.

பாடல் எண்: 2045

மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2

தமிழ் விளக்கம்:

சற்குரவராதற்கு உரியன பலவற்றை உடையோரும் தமது உபதேசத்தை உணரும் தகுதியில்லாதோர்க்கு அவர் வழியாகப் பெறப்படும் சில பயன் கருதி அவரை விலக்கமாட்டாராய் அவர்க்கு உபதேசம் செய்வாராயின், அவரும் அறியற்பாலனவற்றை அறியாத அறிவிலிகளாய், அசற்குரவராய் விடுவர்.

English Meaning:

Mantra, Tantra, Mahayoga and Jnana,
Bondage, and Mukti
--These they seek to know, the holy ones;
The Gurus unholy
Them, they seek not;
Doubts they clear not;
Food are they in search of,
Verily blind are they.

பாடல் எண்: 2046

ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 3

தமிழ் விளக்கம்:

`தக்கது இன்னது; தகாதது இன்னது` என உணரும் உணர்வில்லாதவன் மூடன்` என்பது உலகம் அறிந்தது. ஆயினும், அவ்வாறு அவற்றை அறிந்தும் காமம் முதலிய குற்றங்களின் நீங்கி, நல்லவற்றைப் பற்றியொழுகும் நல்லொழுக்கம் இல்லாதவன் அறிவுடையவன் ஆயினும் அதிமூடன் ஆவான். இனிக்குற்றங்களின் நீங்கி வல்லவற்றையே கடைப்பிடித்தொழுகும் நல்லொழுக்கம் உடையனாயினும் நல்லனவற்றை மதித்து உவந்து ஏற்கும் பண்பின்றி அவற்றை உணர்த்துவோரையும் இகழ்கின்ற கீழ்மக்கட்கு நல்லுபதேசத்தைச் செய்வானாயின் அவனும் அறிவிலியேயாவான். ஆகையால் அத்தகையோனும் சற்குருவாகாது, அசற்குருவாயாவன்.

English Meaning:

Fool is he,
A big fool is he;
The Way of Becoming he knows not;
A vile fellow that is not of passions rid,
To vile men he teaches things vile;
Bereft of knowledge,
He no teacher exalted is;
--the Guru unholy.

பாடல் எண்: 2047

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4

தமிழ் விளக்கம்:

சற்குருவாவான் தன்னை அடைந்த மாணாக்க னிடத்தில் உள்ள குற்றங்களை முதலில் நல்லனவற்றைக் கூறும் முறையால் நீக்கி அதன் பின்பே ஞானத்தை உணர்த்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாமலே ஞானத்தை உணர்த்தினால் தனது ஆசிரியத் தன்மையுங் கெட்டுத் தனது செய்கையே தனக்குத் தீங்காய் முடியும். அதனால் நாட்டில் புல்லரே தலையெடுப்பர் ஆதலின் அரசு நல்லரசாய் இருப்பினும் அதற்கும் கேடு விளையும். நாடும் தீய நாடாகி விடும். இதனைப் படைப்புக் காலத்திற்றானே சிவன் தனது ஆகமங்களில் சொல்லி வைத்துள்ளான்.

English Meaning:

If without driving away
The illusory thoughts
That imagination breeds,
A teacher teaches,
He will in divinity lose faith;
Unto his own self an enemy be;
For the king and the kingdom an evil be;
--Thus has Nandi of yore declared.

பாடல் எண்: 2048

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5

தமிழ் விளக்கம்:

குருடர் சிலர், வேறு சில குருடருடனே சேர்ந்து வழிச் செல்வார்களாயின் எல்லோருமாக `முன், பின்` என்பதின்றி ஒருங்கே குழியில் விழுவதைத் தவிர வேறு என்ன நிகழும்! ஆகையால், சில குருடர்கள் வேறுசில குருடர்களுக்கு `நாங்கள் உங்கட்கு வழிகாட்டு கின்றோம்` என்றுசொல்லி அவர்கள் கையில் கோலைக் கொடுத்துத் தாங்கள் அக்கோலைப் பற்றிக் கொண்டு முன்னே செல்வாராயின், முதலில் வழிகாட்டும் குருடர் பாழ்ங்குழியில் வீழ்வர். பின்பு அவர்களால் அழைத்துவரப்பட்ட அந்தக் குருடர்களும் அந்தக் குழியிலே வீழ்வார்கள், (அது தான் நிகழும்.)

English Meaning:

The blind (the unholy Guru), who lead the blind (foolish disciples)
Will into the eternal pit first fall;
Then the foolish disciples too fall;
And in the end in disorder together they fall,
--The blind that lead and the blind that are led--
Indistinguishably, jumbled in one.

← அட்டவணைக்குச் செல்ல