திருமந்திரம்

160. சற்குரு நெறி

(பாடல்கள் 2049 முதல் 2066 வரை)

பாடல் எண்: 2049

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1

தமிழ் விளக்கம்:

சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திரு வருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தை யாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்துவிடுவான்.

English Meaning:

Placing his feet on my head
The Master blesses me;
He is Guru Holy;
He, my self-realization, works;
He takes the Jiva to the State beyond Tattvas;
He subdues my Pasas,
All these he performs
--He That is truth itself.

பாடல் எண்: 2050

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 2

தமிழ் விளக்கம்:

(சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.

English Meaning:

From their Karmas, he extricated his disciples
Blessing them with his feet on their head,
He drove away their evil stars;
The messengers of Death
He kept at bay from them;
The miseries of unending birth
He ended for them.

பாடல் எண்: 2051

கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 3

தமிழ் விளக்கம்:

இதன் பொருள் வெளிப்படை.

English Meaning:

Not
The black iron, transmuted into gold,
To black iron returns not;
Even unto it,
He who once the Guru\'s grace received
Does not to birth return.

பாடல் எண்: 2052

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4

தமிழ் விளக்கம்:

உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.

English Meaning:

He liberates you from Pasas;
He removes your Malas, entire;
He makes you seek the Lord in love;
--Such are the Gurus Holy, blemishless;
They who in contention exult
Are no Gurus enlightened.

பாடல் எண்: 2053

நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5

தமிழ் விளக்கம்:

நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன்பினை மேலும் மேலும் பெருக்க வல்லவ னாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.

English Meaning:

He is a pure being
He is so endearing;
He can give you love,
That is from Malas free;
He is immortal,
He is holy;
He assesses the worth of his disciples;
And on those who are impurity rid,
He bestows his grace;
He, the Master High.

பாடல் எண்: 2054

பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6

தமிழ் விளக்கம்:

இதன் பொருள் வெளிப்படை.

English Meaning:

All that the alchemist touches
Turns into gold;
Even, unto it,
The Jivas blessed by Guru
Siva become,
Freed from Malas Triple.

பாடல் எண்: 2055

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7

தமிழ் விளக்கம்:

`யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்து கின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றா லேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந் தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.

English Meaning:

The Holy Guru
As Siva Himself stands;
In his presence
Jiva, his self-realization attains
If you, your self-realization seek,
Think of him, within,
As Siva in fleshly body.

பாடல் எண்: 2056

வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே. 8

தமிழ் விளக்கம்:

பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறு பாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.

English Meaning:

The Way of birth,
The Way of death,
The Way of Maya;
The Way they have not seen
Who the birth\'s Way saw;
The Great Way that Nandi speaks of
That Way you can reach
If your Holy Guru you follow.

பாடல் எண்: 2057

குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9

தமிழ் விளக்கம்:

`குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.

English Meaning:

He is Guru Holy,
Who, entranced in bliss
The Vedas and Agamas speaks of,
Enters into Siva Yoga;
And all thoughts stilled,
Removes the bondage of Pasa
And leads you to Lord.

பாடல் எண்: 2058

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10

தமிழ் விளக்கம்:

சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியா பகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.

English Meaning:

He reveals the Real (Sat), the Unreal (Asat) and the Real-Unreal (Sat-Asat);
He takes Chit (Jiva) and Achit (Tattvas) into Siva-Para;
The words the blessed Guru speak
Are blissful,
Beyond Pure (Suddha) and (Asuddha) Impure.

பாடல் எண்: 2059

ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11

தமிழ் விளக்கம்:

பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டி யுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.

English Meaning:

By Pasa\'s sensations, the Five Malas arise;
Adoring feet of Guru in love intense,
Purified in Turiya Awareness Three
They the Supreme State attain;
They alone are Sadhakas true.

பாடல் எண்: 2060

எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 12

தமிழ் விளக்கம்:

ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.

English Meaning:

State
Powerful are the senses,
From them arise pleasure sensations;
If Jiva, in silence, subsides in Self
And ascends high,
It shall reach Siva-State;
All, but play of Siva and Sakti.

பாடல் எண்: 2061

ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13

தமிழ் விளக்கம்:

இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன் றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.

English Meaning:

Work
Consigning Jiva to birth\'s sorrows,
Rescuing it by ministrations gentle,
Assigning it positions appropriate,
Baptising it in Jnana,
Redeeming it,
And in Mukti establishing it,
And in the end,
Placing it in Mystic Silentness (Mauna)
--All these are but Lord\'s work.

பாடல் எண்: 2062

அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 14

தமிழ் விளக்கம்:

சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத் தொழில்களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயை யினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.

English Meaning:

The fleshly body is arena of Lord\'s Play,
He imparts to Jiva,
Knowledge clear of Chit and Achit,
Purifies him,
Wipes off the Malas
And consigns him to the Sat (Real),
Unto Himself the Five Acts to perform;
--These the Play of Lord\'s Grace.

பாடல் எண்: 2063

ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15

தமிழ் விளக்கம்:

உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத் தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டி னான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.

English Meaning:

Beyond the state of Isatva (Siva State)
Nothing there is;
Realizing this,
Continue ever, in love intense, for Lord;
My Lord is the Pure One
Who in love abides;
He it is,
Who illumined directions all.

பாடல் எண்: 2064

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16

தமிழ் விளக்கம்:

மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங் கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வ தொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.

English Meaning:

In the sphere (of cranium)
Where the garland of scarlet rubies glows,
He the unalloyed Gold,
There stood;
The divine nectar welled up there;
They who swilled it,
Ended their birth\'s cycle;
They who did not
Remained but to gormandize.

பாடல் எண்: 2065

அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே
அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17

தமிழ் விளக்கம்:

சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.

English Meaning:

Knowledge
478
The Sat, Asat, and the Sat-Asat to free,
The Pasa\'s bonds here to sunder,
He activated Mayas Two--Suddha and Asuddha--
And to Jiva, He them attached,
And imparted the peerless Light of Knowledge, too,
He, the Lord.

பாடல் எண்: 2066

ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே. 18

தமிழ் விளக்கம்:

சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உப தேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.

English Meaning:

The way of Adhara ascending scorches Malas,
The endless chanting of His name dispells Darkness (of Ignorance)
Harass the Pasa, Jiva a heir to,
Thus do you liberation seek;
The Lord, forsooth, is the Guru Supreme.

← அட்டவணைக்குச் செல்ல