திருமந்திரம்

162. கேடு கண்டு இரங்கல்

(பாடல்கள் 2084 முதல் 2101 வரை)

பாடல் எண்: 2084

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1

தமிழ் விளக்கம்:

மக்கள் தமக்கு வரையறுக்கப்பட்டு அமைந்த வாழ் நாள் இத்துணையது என்று அறியமாட்டாதவராய் அன்றாடம் உண்டு வாழ்வதேயன்றி, அடுத்துவரும் ஆண்டிற்கும் உணவின் பொருட்டான முயற்சிகளை ஓயாமற் செய்வதிலேயே மனம் அமைதியுற்று விடுகின்றனர். இஃது அவர் பிரார்த்த வினைவிளைவாகிய துன்ப நிலையே என்பதையும் அவர் சிறிதும் அறிவதில்லை. இந்தப் பொய்யான இன்பத்திலே அவர் வீழ்ந்து கெடுதல் ஓங்கி எரியும் விளக்கை இனிய உணவென்று கருதிச்சென்று அதில் வீழ்ந்து மடிகின்ற விட்டிற் பூச்சியின் செயலோடு ஒப்பதாகும். அந்தோ? இஃது அவர் ஓர் அறியாமை இருந்தவாறு!.

English Meaning:

They germinate the seed;
They plant the seedlings;
They think not of their own fleeting life;
Poor are they in spirit;
They know nothing of Karmaic sorrows;
They perish in the blazing fire,
Verily are they such.

பாடல் எண்: 2085

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே. 2

தமிழ் விளக்கம்:

நாள்கள் மிக விரைவாக வந்து வந்து போவதை அறிந்திருந்தும் பலர் அந்நாள்களை வாது செய்வதிலே கழித்து விடு கின்றனர். ஒழுக்கத்தில் நில்லாமல் வாதுசெய்வதனால் அவர் என்ன பயனை அடையப் போகின்றனர்! ஒரு பயனும் இல்லை. ஒழுக்கத்தில் நின்றும், இறைவன் திருவடியை வணங்கியும் வருவராயின் நாளடைவில் இறையன்பு தோன்றி வளர அவனை அவர்நேரே அறிந்து இன்புறுவர். அதனை அவர் அறிகின்றாரில்லையே!

English Meaning:

Well do they see
Life in a trice fleets away;
Yet do they in contention stand;
What though these men get?
They stand not in ways righteous,
They adore not His Holy Feet
They know not the Primal One
In love endearing.

பாடல் எண்: 2086

கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3

தமிழ் விளக்கம்:

நெல்லைக் கடனாகவேனும் வாங்கிக் குற்றி, குற்றிய அரிசியைக் கொண்டு ஒரு சாண் வயிற்றினுள் இருக்கும் சிறு கருவி களின் வேகத்தைத் தணிக்கும் முகத்தால் உடம்பைப் பாது காக்கின்றவர்களும் தங்களை `உயிர்` என்று சொல்லிக்கொண்டு திரி கின்றார்கள். அவ்வாறு திரிகின்றவர் தம்மைப்போன்றோர் பலரது உடம்புகளும் முடிவில், மலைச்சாரலில் பற்றி எரிகின்ற தீப்போன்ற பெரிய தீயை உடைய முருட்டணையில் ஏறிப் பின் அதினின்றும் இறங் காமல் அதனையே இடமாகக்கொண்டு கிடந்து ஒழிந்துபோதலைப் பல முறை கண்டிருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்துதல் இல்லை.

English Meaning:

They borrow grain;
They pound it hard,
Feed the base (senses),
And nourish the body;
Thus they wander
Their lives to live;
But in the valley broad
A prey to raging flames
The body finally lies;
This they realize not.

பாடல் எண்: 2087

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4

தமிழ் விளக்கம்:

தனக்கு உண்மையிடமாகிய திருக்கயிலையின் பாங்கர் நிலவுலகத்து மக்கள் பொருட்டாகத்தான் நிலைநிறுத்திய கல்லால மர நிழலின்கண் இருந்து சிவன் படைப்புக் காலத்திலே முனிவர் நால்வர்க்கு அவர் விரும்பிய உடனே அருளிச் செய்த முதல் மொழிகள் அம்முனிவரிடமிருந்து நல்லோரால் வழிவழியாகப் பெறப் பட்டு உலகில் வழங்கா நிற்கவும் அவற்றைக் கேளாது பழித்து ஒதுக்கத் தக்கனவாகச் சிற்றறிவுடையரால் சொல்லப்பட்டு வழங்கும் மொழிகளைக் கேட்டு நிற்போர் அக்கேள்வியின் பயனாகத் தமது வன்மையையே மெய்ம்மையாகத் துணிந்து இடர்ப்படுகின்றார்களே!. இஃதென்ன அறியாமை!.

English Meaning:

In days of yore, the Sages Four
Sought the Holy One in Kailas;
There, under the wild banyan tree
The Supreme One His teachings imparted;
They are of evil speech
Who think not of Him;
Ready to march to the burial heap
They stand in wait.

பாடல் எண்: 2088

நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5

தமிழ் விளக்கம்:

அனைத்திற்கும் முதல்வனாகிய எங்கள் சிவ பெருமான் உலகியலில் நிலைத்த புகழையும், நிரம்பிய மேலான தவத்தையும், அதன் பயனாகிய உண்மை ஞானத்தையும் தன்னை யடைந்த அடியார்களுக்கே அளித்தருள்வான் ஆகையால், உலகர் அவற்றை இழத்தற்குக் காரணம் அவ்வடியவரோடு மாறுபட்டு, `அது கடவுள், இது கடவுள்` எனத் தத்தமக்கு எட்டிய பொருள்களைத் தனித்தனி கூறித் தம்முள் கலாய்த்துக்கொண்டு, ஞானம் குறை கையாலேயாம். இஃது இரங்கத்தக்கது.

English Meaning:

Imperishable fame,
And truthful fruit of Tapas full,
The Lord ever bestows
Only on those who endear Him;
Yet the world think
This the God, That the God;
Thus distracted
Bruised they fall, hands hitting on rocks.

பாடல் எண்: 2089

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6

தமிழ் விளக்கம்:

மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து இன்பத்திலே திளைக்கின்றவர்களே யாயினும் சிலர் இதனையறியாது தாங்கள் துன்பத்திலே மூழ்கியிருப்பதாகக் கருதிக்கொண்டு அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியாக, `உணவு` என்றும், `உடை` என்றும் அவாவி, அவற்றைப் பெறவேண்டி அல்லற்பட்டு, அவ்வல்லலை விட்டு நீங்க நினையாமல் அதிலேயே செயலற்றிருக்கின்றார்கள்; இஃது இரங்கத் தக்கது.

English Meaning:

Born in bliss, grown in bliss
Steeped in thoughts of bliss
This way, they forget;
Instead,
Hankering after food and raiment
In sorrow steeped they are;
And in sorrow steeped, they insensible slumber.

பாடல் எண்: 2090

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7

தமிழ் விளக்கம்:

பெறுதற்கரிய பிராணிகள் ஞானத்தையும், அது வழியாக வீட்டையும் பெற இயலாத பிராணிகள். அவை மக்களை யொழித்து ஏனைய உயிர்கள். அவைகளால் பெறுதற்கரிய பேறு இறைவன் திருவடி. ``பெறார் பேறிழந்தார்`` என்க, ஏனைய வெளிப்படை.

English Meaning:

Rare is human birth,
Yet they seek not Lord\'s Feet,
So rare to reach;
They attained the rare human birth,
Yet missed this Treasure Rare,
They are but crawling creatures, indeed.

பாடல் எண்: 2091

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8

தமிழ் விளக்கம்:

யாவரிடத்தும் நட்பையே பாராட்டும் மனமும், எச் செயலிலும் சோர்வடையாத ஊக்கமும், கிளைஞர் எல்லோரிடத்திலும் செல்லுகின்ற ஈரமும் குறைவின்றியிருத்தலால் தாமும், பிறரும் `இது மிக நல்லதாகிய பருவம்` என மகிழ்ச்சியுறுவதாகிய இளமைப் பருவத்திலே அந்நல்லவற்றை யெல்லாம் உமையொருபாகனுக்குப் பணி செய்வதில் பயன்படுத்தாது, அவனது இன்பத்தைப் பெறாமல் மறந்து, அந்நல்லனவெல்லாம் விரையக் கெடுதற்கு ஏதுவாகிய சிற்றின்பச் செயலிலே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே; ஈதென்ன அறியாமை!

English Meaning:

Ardour of mind, ever fresh youth, and endearment of heart
These considering good,
They in pleasure indulged,
And in acts of love diverse sported;
Lo! They forgot the heavenly bliss
The Lord bestows
And for ever, for ever missed it.

பாடல் எண்: 2092

இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. 9

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்தில் கூறிய உமாதவனாகிய சிவன் தன் அடியவர் முன் புறத்தே தோன்றிக் காட்சி வழங்குமிடத்துக் காலையில் தோன்றுகின்ற இளஞாயிற்றைப் போலும் உருவுடையனாய் விளங்குவான். [அது ``காலையே போன்றிலங்கும் மேனி`` (தி.11) என்பது முதலிய திருமொழிகளான் உணரப்படும்] இனி அவர்க்கு இவ்வாறு புறத்துத் தோன்றுதல் போலவே அகத்துத் தோன்றுங்கால் உள்ளக் கமலத்தை இடமாகக்கொண்டு என்றும் இருப்பவனாய் விளங்குவான். இவ்விரண்டும் இன்றிக் கரந்து நின்று அருள்புரியுமிடத்துச் சிறிதும், பெரிதுமாய தீப்பிழம்புகளின் உள்ளிருந்து அருள்புரிவான். [இவ் வுண்மைகள் எல்லாம் அவனை அறிந்து இன்புறும் பெரியோரை அடுத்துக் கேட்பின் விளங்கும்]. அவ்வாறு கேட்டுணராது நாளை வீணாகக் கழிக்கின்றோமே; இஃது அறியாமையன்றோ!

English Meaning:

Thus He is,
Unto the rising sun, His Form;
That He is,
Within the Fire Kundalini resides;
There He is,
In the Lotus of Heart seated;
The True He is,
The Lord, we sought not.

பாடல் எண்: 2093

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 10

தமிழ் விளக்கம்:

சிலர் பெரியோரைக் குரவராக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந்தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குரவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும்வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!

English Meaning:

They unite in Him not,
The Way Guru showed;
They seek Him not,
In aimless talk indulging;
They sing Him not,
His benevolent deeds realizing;
What will they get,
They who dance and wastes away?

பாடல் எண்: 2094

நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11

தமிழ் விளக்கம்:

சிவபெருமானை, `ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து அங்கு ஒளிவிட்டும் விளங்குகின்ற அணையா விளக்கு` என்றும், `உயிர்கட்கெல்லாம் உண்மையான முதற் கடவுள்` என்றும் உணர்ந்து நாள்தோறும் வழிபடுங்கள். இறக்குமளவும் வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித் திருப்பின் உங்களுடைய ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த அத்தன்மையை உடைய யானைகளாய் விடும்.

English Meaning:

He is the Great Light
That fills my heart;
Melting in love
Daily adore Him,
Unto the end of your days;
If you adore not,
The Five senses havoc cause
Unto the elephants that roam loose.

பாடல் எண்: 2095

மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 12

தமிழ் விளக்கம்:

விலங்குகள், மக்கள், தேவர்கள், பறவைகள், மற்றும் இவர்கள்போல் உள்ள இனத்தவர் ஆகியோரில் ஓரினத்தவரும் சிவபிரானிடத்தில் அன்பு வைத்து, அதனை மேலும் மேலும் பெருக்கி வழிபடாமையில்லை. அதனை அறிந்தவர்கள் அப்பெருமானது திரு வருளைப் பெறுதற்குரிய பெரிய தவத்தைச் செய்து, அதன் பயனாக விளைந்த அன்பினால் சிவபெருமானைக் கண்டால் இனிய பாலைப் போலப் பருகிவிடுவார் போல்வார்; `அவன் வெளிப்படும் இடம் எது` என்று தேடிப்பல திசைகளிலும் ஓடுவர். அதனால், தாம் மண்ணில் மக்களாய்ப் பிறந்த பயனை எய்துவர்.

English Meaning:

The birds, beasts, and the humans several,
They all, all, in endearment seek Him not;
They who in Tapas intense realized Him
Drink and run in rapture surpassing;
They indeed are the beings
Who have reaped the fruit of their birth here below.

பாடல் எண்: 2096

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13

தமிழ் விளக்கம்:

அற உணர்வு இல்லாதார் பொன்னைப் பெற்றால் அதனது பயனை யறிந்து அப்பயனை எய்தாது பொன்னை வாளா வைத்திருந்தே இறந்தது போலச் சிலர் சிவனை அறிந்தும் அவனால் அடையத் தக்க பயனை அறிந்து அம்முறையில் அவனை வழிபட்டு அப்பயனைப் பெறுகின்றவர் யாரும் இல்லை. ஆயினும் யான் உலகத்தைச் செயற்படுத்துதற்கு, `படைப்புக் கடவுளாகிய பிரமன்` என்றும், மற்றும் `தேவேந்திரன்` என்றும் இப்படிப் பல தேவரைத் தக்க வாறு சிவன் நியமித்திருக்கின்ற பெருஞ்செயலை நினைந்து அவனால் அடையத்தக்க பயனை அடைகின்றேன்.

English Meaning:

They seek not His Light
In unbroken continuity;
They are unto those
Who cherish not Him that is gold,
The Unrighteous they are;
O! Lord, the Primal One!
You the Fruit of Wisdom!
The Lord of Celestial Beings!
My Sole Refuge!
Thus I seek Him, ever and ever.

பாடல் எண்: 2097

இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14

தமிழ் விளக்கம்:

வண்டுகள்தாம் இன்புற வேண்டும் என்றுதான் மிகுந்த தேன் உள்ள மலர்களை அறிந்து அவற்றினுட்புகுந்து கிண்டிச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து மிகுந்த தேனைச் சேர்க்கின்றன. ஆயினும் அத்தேனில் ஒருசிறிதையும் அவை பருகுவதில்லை. அதனை எண்ணிப் பாராதவர்களாய், அவற்றினும் கீழ்மையராக, தானாகவே வாயில் ஒழுகுவதும், எவ்வுலகத்திலும் கிடைத்தற்கரியதும் ஆகிய தேனை மக்களில் ஒருவரும் அறிந்து பருகுகின்றார்களில்லை. ஆயினும் யான் அவர்களைப்போல அத்தேனை நுகராமல் விட்டு வருந்தமாட்டேன்.

English Meaning:

The bees flit from flower to flower
And in rapture incessant gather
The honey sweet;
Of this they think not;
There is a Honey Pure sweeter far
That in their mouth wells up (in Yoga)
None knows that Honey Rare.

பாடல் எண்: 2098

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15

தமிழ் விளக்கம்:

தன்னிடத்துச் செலுத்துகின்ற அன்பு உடையாரது அன்பிலே விளங்கி நிற்பவனும், தேவர்கட்கும் தேவனுமாய் உள்ள ஒருவனே அனைத்துயிர்கட்கும் ஒப்பற்ற தலைவன். அடங்காது ஓடுகின்ற மனத்தை வருத்தியாயினும் அடக்கி அவனை நினைந்து நில்லாமையால் பலர் அவனைப் பெறத் தவறுகின்றார்கள். அதனால் அவர்களது காலங்கள் உண்மையை உணராமலே கழிந்தொழியும்.

English Meaning:

Seeking Him not,
I wasted my life away;
In my love
Is the Lord of Celestial Beings;
He is the One Being,
For the worlds all;
Yet in their thoughts
They praise Him not,
Low down they slip.

பாடல் எண்: 2099

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16

தமிழ் விளக்கம்:

உலகீர், உங்களுக்கு இவ்வுடம்போடு கூடி வாழ்தற்கு வரையறுத்த நாள்கள் யாவும் தவம் செய்யாமையால் அவமே கழிந்தொழிந்தன. ஆகவே, உங்களை இவ்வுடம்பினின்றும் பிரித்தெடுத்துக் கொண்டு துள்ளி ஓடுபவனாகிய கூற்றுவனும் வந்துவிட்டான். இப்போது நடுங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் அமைதியுற வேண்டின் கொதிக்கின்ற கூழில் கையை யிடாமல் அகப்பையை இட்டு அள்ளி ஆற்றி உண்பதுபோலும் செயலைச் செய்தலே தக்கது.

English Meaning:

The God of Death leaps forward,
Agreeable to him
The fated days too roll away;
You tremble and shake,
What, though, that comes of it?
If Peace you seek,
Dip the ladle of your heart
In the boiling broth of love.

பாடல் எண்: 2100

கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 17

தமிழ் விளக்கம்:

ஆற்றங் கரையை அடுத்து ஒரு கழனி உண்டு. அதில் உண்டாகின்ற விளைவை உடையவன் பெறுதல் அரிது ஏனெனில், ஆற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் பெருகி வந்து விளைவை அழித்துவிடும். அதனை உணர்ந்து நீவிர் விழிப்பாய் இருந்து வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னே விளைவிற்குப் பாதுகாப்புச் செய்து விளைவின் பயனை எய்துங்கள். [இஃது ஒட்டணி. ஆறு - வினைவிளைவின் தொடர்ச்சி. ஆற்றங்கரை - அத்தொடர்ச்சியைச் சார்ந்திருக்கின்ற உடம்பு. கழனி - உடம்பில் உள்ள உயிர்; என்றது அதன் உணர்வை, அதில் விளைவது சிவபுண்ணியத்தின் பயனாக விளங்கிய சிவஞானம், அதனை எப்பொழுதும் வந்து அழிக்க இருப்பது உயிருணர்வை வேறுபடுத்தும் வினைவிளைவு. அருகாமுன்னம் - நெருங்குதற்குமுன்னே, இவற்றை இங்ஙனம் அணிவகையால் உணர்த்திய பின்பு அப்பயனைப் பெறுமாற்றைப் பின்னிரண்டடிகளால் நேராகவே உணர்த்தினார். அஃதாவது] மலைமுழை முதலிய தனியிடங்களில் இருந்து செய்வதனால் வளர்ந்து முதிர்கின்ற தவத்தில் உணர்வு செல்லுமாயின் நரை, திரை, மூப்பு இவற்றோடுகூடி வருகின்ற நாட்கள் உங்கட்கு இல்லையாகும்.

English Meaning:

Along the banks of the river (of Life)
The field ripened;
Before the floods (of age) swell,
Seek the Bliss Divine;
Practise Yoga
That takes you to the Mountain top
Where the ambrosial waters flow;
Then no more does greying age seize you.

பாடல் எண்: 2101

வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18

தமிழ் விளக்கம்:

பகலும், இரவும்கலந்து நிற்கின்ற உலகத்தில் உயிர்கள் தோன்றுதல், மறைதல் ஆகியவற்றின் வழிமுறைகள் முழுவதையும் நன்குணர்ந்து அவைகளை ஏற்றபெற்றியால் செய்விக் கின்றவனும், முடிவில் அவ்வுயிர்கள் இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கும்படி வைத்து அவைகட்கு என்றும் விளக்கத்தைத் தந்தும் விளங்கியும் நிற்கின்ற, சுடர்விடுகின்ற பெருவிளக்காய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானை, `நுண்ணறிவாளர் திரிபின்றி உணர்கின்ற ஒப்பற்ற முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து அவனை அடைந்து உய்ய அறியாமையால் பலர்வேறு வேறு தெய்வங்களை முதற் கடவுளாகக் கருதி இடருள் அழுந்துதல் இரங்கத்தக்கது.

English Meaning:

He who knows the Origin of all,
He who knows the Night (end)
That envelops worlds all,
The Luminous Light that self-rises,
He whom the Enlightened held aloft
As the One God Supreme,
Him they know not;
And thus on this world their thoughts still stand.

← அட்டவணைக்குச் செல்ல