திருமந்திரம்

164. உடலிற் பஞ்சபேதம்

(பாடல்கள் 2122 முதல் 2138 வரை)

பாடல் எண்: 2122

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1

தமிழ் விளக்கம்:

ஒரு பையில் பல பண்டங்களை அடைத்து வைத்தல் போல, யாவராலும் நன்கு அறியப்படும் உடம்பாகிய ஒரு பை ஒவ்வோர் உயிர்க்கும் கிடைத்திருத்தல் கண்கூடாக, அதன்கண் அடைக்கப்பட்டுள்ள பண்டங்களோ பல உள்ளன. (அவற்றை ஆராய் கின்றார் ஒருவரும் இல்லை) இனி, அந்தப் பை மாயம்போலக் கட்புல னாகி, விரைவில் மறைவதாகும். என்றாலும், அந்தப் பைக்குள்ளே மற்றொரு பையும் உண்டு; (அதனை அறிந்தோர் சிலரே.) யாவரும் அறிந்த அந்தப் பைக்குள் அதற்கு வேறாகிய ஒன்று உள்ளதோ, இல்லதோ` என ஐயுறுமாறு ஒளிந்து நிற்கின்ற உயிர் அதனை விட்டு வெளியே போய்விடுமானால், தோன்றியழிவதாகிய அந்த உடம்பு மண்ணோடு மண்ணாய்ப்போக, அதனை நிலையானதாகக் கருதி, அதனைத் தமக்கு உறவாகத் தெளிந்திருந்தோர் திகைப்புற்று நிற்கும் நிலை இரங்கத்தக்கதாகும்.

English Meaning:

The body is a bag
Many the ingredients it holds;
There is yet another bag within;
It is the Maya bag;
When the Thief (Jiva)
The body bag leaves,
The Maya bag
Unto dust becomes.

பாடல் எண்: 2123

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. 2

தமிழ் விளக்கம்:

இறைவன் உயிர்கட்காக அமைத்துக் கொடுத்த, `தூலம், சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின் இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம் நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடிய தாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும் சொல்லப்படும்.

English Meaning:

Of the body thus God shaped,
In parts two,
Sukshma (Subtle) is One;
That a body of constituents eight is;
--Sound, touch, shape, taste and smell
Buddhi (Intellect), Man (Mind) and Ahankhara (Egoity)
That the Puriashta body is (subtle).

பாடல் எண்: 2124

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. 3

தமிழ் விளக்கம்:

எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும் தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும சரீரத்தில் உள்ள அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில் அவை கரணங்களேயாம். அறிவுக்குத் துணையாதல்பற்றி ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப் பட்டு நிற்கின்ற அவற்றைக் கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்க ளினின்றும் பிரித்துவிடுவான்.

English Meaning:

Of the organs eight thus stated,
First Five are Indriyas (External Sense Organs)
The rest three are Karanas (Internal Sense Organs)
To these attached is primordial Pasa\'s sentience,
Thus He binds them
And unbinds them,
He, the Lord of Forehead-Eye.

பாடல் எண்: 2125

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே. 4

தமிழ் விளக்கம்:

நிலையாய் இராமல் நிலையழிந்து ஒழிந்து போவன வாகியகுருதி, இறைச்சி முதலிய அழுக்குப்பொருள்களாம் பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும்?

English Meaning:

495
Lymph, blood, flesh, skin, and tendons,
Bones, marrow, fat, brain and semen,
--of these into one shape made
Is the body gross,
By sorrow harassed.

பாடல் எண்: 2126

ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. 5

தமிழ் விளக்கம்:

மேல், `அத்தன் அமைத்த உடல்` என்றபடி உயிர்களின் தகுதியை அறிந்து அத்தகுதிக்கேற்பப் பல்வேறு வகையான உடம்புகளை அமைத்துத் தருகின்ற இறைவனது அருள் மிகுதியையும் ஆற்றலின் மிகுதியையும் அறிய வல்லுநர் யாவர்; அந்நிலையில் `மக்களாய்ப் பிறந்தோர் அவ்வுடம்பைப் பெறுதற்குப் பல பிறவிகளில் தாம் செய்த நல்வினை இவை` என்பதை அறிய வல்லுநர் யாவர்; மக்களுடம்பு அசுத்த உலகத்து உளது ஆதலின் அஃது அவ்வுலகத்திற்கு மேல் உள்ள மிச்சிர உலகம், சுத்த உலகம் என்பவற்றில் உள்ளோரது உடம்புகளில் உள்ள கருவிகட்குமேல் அறுபத்தெட்டுக் கருவிகள் கூடியது என்பதை அறிபவர் யாவர்! மூவகை உலகத்து உயிர்கட்கும் திருவருளே முதற்காவலாய் உள்ளது என்பதை அறிகின்றவர் யாவர்! ஒருவரும் இல்லை.

English Meaning:

Who knows the greatness of His Holy Feet
Who knows
There within the body He stood!
Who knows this body
Of Tattvas six and ten and eight!
Who knows that
He is its Yeoman Guard!

பாடல் எண்: 2127

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. 6

தமிழ் விளக்கம்:

உடம்பை `எண்சாண் உடம்பு` என்றல் யாவரும் அறிந்தது. `அவரவர் கையால் எண்சாணேயாகும்` என்பது இதன் பொருள். `எறும்பும் தன் கையால் எண்சாண்` (தனிப்பாடல் திரட்டு, என்றார் ஔவையார். இந்த அளவு யாவராலும் நன்கறியப்பட்ட தூல தேகத்தைப் பற்றியதே. அந்த உடம்பிற்றானே கண் முதலிய ஞானேந்திரியங்களும், கால் முதலிய கன்மேந்திரியங்களும் ஆற்றல் வடிவாய்ச் சூக்குமமாய்த் தோன்றாது நிற்கின்றன. எவ்வாற்றா லேனும், எவ்விடத்திலேனும் ஊறு உண்டாகுமாயின் அவ்விடம் புண்ணாகிக் குருதியையும், சீழையும் ஒழுக விடுகின்ற தூல தேகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டு மேற்கூறிய அறுபத்தெட்டுக் கருவிகளைத் தக்கவாற்றால் திருவருள் ஒன்று சேர்க்கின்ற சேர்க்கையால் ஓர் உடம்பிலிருந்து மற்றோர் உடம்பு தோன்றுவதாகும்.

English Meaning:

The body eight spans* measures
With eyes, legs and hands
That serve to cover it;
In that body of pores and sores
He conjoins Tattvas twenty and four
In love divine;
Thus this body He fashions,
That has four more to speak of.

பாடல் எண்: 2128

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே. 7

தமிழ் விளக்கம்:

தூல உடம்புக்குள் சூக்கும உடம்பாய் நிற்கின்ற அந்தக்கரணங்கள் நான்கிற்கும், மேலும் நுண்ணிதான அதிசூக்கும உடம்பைக் கொண்டு இயக்கும் முதற்பொருளாய் உள்ள சீவான்மாத் தான் பரமான்மாவாகிய சிவத்தில் வியாப்பியமாய் நிற்கும். ஆகவே, எப்பொருளிலும் எஞ்சாது நிறைந்து நிற்கும் பிரமப் பொருளாகிய சிவம், தான் ஒன்றேயாயினும் பல சீவான்மாக்களிலும் வியாபித்து அதனதன் தன்மைக்கேற்ப ஏகதேசமாயும் நின்று, பின் சீவான்மா சீவத்துவம் (பசுத்துவம்) நீங்கிய பொழுது தன்னைப் போலவே வியாபகமாகிவிடுதலால் அவ்வேகதேசத் தன்மை நீங்கி வியாபகமாகி விடுகின்ற தன்மை, ஞாயிறு ஒன்றேயாய் வியாபகமாயினும் பல குடங் களில் உள்ள நீரில் எல்லாம் அதனதன் அளவிற்கேற்ப வேறு வேறு அளவில் பலவாய்த் தோன்றி, அக்குடங்களில் நீர் நீங்கிய பொழுது முன்பு நின்ற சிறு நிலையின் நீங்கி வியாபகமாகிவிடுகின்ற தன்மையை ஒக்கும் என்னும் உண்மையை அறிந்தனர் எத்துணைப் பேர்!

English Meaning:

The Jiva that as experient spirit stood (in Avastas)
In all bodies, this and four rest (Jagra, Swapna, Sushupti, Turiya and Turiyatita)
Will in Para merge;
Who knows the way it merges
Into Param that pervades all
As unto space in every pot,
Inside and out!

பாடல் எண்: 2129

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. 8

தமிழ் விளக்கம்:

யோகமுறையால் ஆறு ஆதாரங்களும் கீழாகி யதனால், அவற்றிற்குமேல் உள்ள பிரமரந்திரத்தை அடைந்தால், அங்ஙனம் அடைந்தவருடைய தூல உடம்பு விரையில் அழிந் தொழியாது உறுதி பெற்று நெடுநாள் இருக்கும். அந்நிலையில் சூக்கும உடம்பும் அதற்கு சார்பாய் உறுதிப்பட்டு நின்று, அதனை என்றுமே உயிர் உள்ள உடம்பாகச் செய்யும்.

English Meaning:

If through Adharas six
You unite through central Sushumna,
496
The nine orifices tightly controlled will be;
The body within of Kalas eighteen formed* will be;
That the body of Jiva will be.

பாடல் எண்: 2130

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. 9

தமிழ் விளக்கம்:

`தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்றுடம்பு களையும் ஒருங்குசேர்த்து ஓர் உடம்பிற்கு உவமித்தால், தூல உடம்பு முகத்தையும், சூக்கும உடம்பு கழுத்திற்குக் கீழும், காலுக்கு மேலும் உள்ள உடலையும், பர உடம்பு கைகால்களையும் ஒத்து நிற்கும் அவ்வாறு அமைந்த அந்தப் பேருடம்பு சிவனது திருவருளில் அடங்கும்.

English Meaning:

The Gross body with presence prominent,
The Subtle body that invisible takes shape,
And the Causal body that by inference is,
--All these bodies are
That in Lord\'s Feet merge.

பாடல் எண்: 2131

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. 10

தமிழ் விளக்கம்:

பகைவரைச் சினக்கின்ற வேகம் பொருந்திய போர்க் குதிரை அண்மை, சேய்மை என்னும் இடங்கட்குத் தக்கபடி முன்கால்களை எட்டி வைத்துப் பின் கால்களை வாங்கிக்கொண்டு தடையின்றி ஓடுதல் போலச் சூக்கும உடல் அண்மை சேய்மைகளுக்கு ஏற்ப விரைந்து செல்ல வல்லது. அதனால், உயிர் அவ்வுடலைப் பற்றிக் கொண்டு, அத்தன்மையில்லாத தூல உடம்புகளுள் ஒன்றை விட்டு நீங்கி மற்றொன்றை எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளும். தூல சரீரம் சூக்கும சரீரத்தின் மேல் போர்வைபோலவே உள்ளதாகும். அதனால், உயிர் தூல உடம்பில் ஒன்றை நீக்கி விட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் மக்கள் தமது போர்வை ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை எடுத்துப் போர்த்துக் கொள்ளுதல் போல்வதே.

English Meaning:

As unto the prancing steed
That forward leaps
The Jiva, too, traverses near and far;
As unto those who doff one garment
And another
The Jiva, too, from one to the other body moves.

பாடல் எண்: 2132

நாகம் உடல்உரி போலும்நல் அண்டச
மாக நனாவில் கானாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. 11

தமிழ் விளக்கம்:

இவ்வுலகில் ஓர் உடம்பை விட்டு நீங்கிய உயிர் இறைவனது அருளாணையின்படி வேறோர் உடலில் சென்று, அவ் வுடலுக்குரிய இடத்தை அடைந்து, முன்பு இருந்து இடத்தில் அனுபவித்த அனுபவங்களை மறந்து அவ்விடத்து வரும் இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் அவை எவை போல எனின், பாம்பு முன்பிருந்த உடம்பாகிய தோலை நீக்கிவிட்டுப் புதிய உடம்பைப் பெறுதல் போல்வதும், முட்டையிற் பிறக்கும் உயிர்கள் முன்பு முட்டைக்குள் இருந்து பின்பு வெளிவந்து வேறு இடத்தை அடைதல் போல்வதும், கனவில், முன்பு நனவில் நிகழ்ந்தவற்றை மறத்தல் போல்வதுமாகும்.

English Meaning:

So it is Through Successive Lives
Even as the snake sloughs off its skin
And another assumes;
Even as the bird its shell leaves
And another life pursues;
In its waking state the Jiva forgets
Happenings of the dream state;
Thus does Jiva from one body to another migrate;
Until with Grace of Hara
It reaches where it is destined to be;
And there experiences
The Karmas two, good and evil.

பாடல் எண்: 2133

உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன
கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. 12

தமிழ் விளக்கம்:

ஓர் உயிர் நிலத்தில் இறந்தபின் சூக்கும சரீரம் பற்றாகச் சென்று நரக சுவர்க்கங்களை அடைந்து அங்கு உள்ளவைகளைப் பார்த்து அவற்றால் வரும் துன்ப இன்பங்களை நுகர்ந்து, அந்த உலகங்களை விடுத்துத் தான் செய்த வினையில் மேற் கூறிய உலகங்களில் நுகரப்பட்டு எஞ்சி நிற்கின்ற வினைகள் தொடர்த லால், யோக சித்தர் ஓர் உடம்பை விட்டும் மற்றோர் உடம்பில் புகுதல் போல வேறு பிறப்பை அடைந்து மீண்டு நிலவுலகத்தில் அப்பிறப்பிற் குரிய உடம்பை எடுத்துக் கொள்ளும்.

English Meaning:

Having experienced hell and heaven,
Jiva leaves Subtle body;
Entering Causal body its course continues;
And unto the Yogi that transmigrates
Enters yet another body;
Thus entangled in cycle of birth and death.

பாடல் எண்: 2134

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 13

தமிழ் விளக்கம்:

தான் சிவனேயாய் நிற்கின்ற சிவ யோகி, அது காறும் தான் அடைந்திருந்த நிலைகளை யெல்லாம் போக்கி, உடல் நீங்கினபின் அந்நிலைக்கு அப்பாற்பட்ட முடிநிலைப்பேற்றை அடைவான். அந்நிலையை அடையாது தாமேயாய் நிற்கின்ற மற்ற உயிர்கள் தாம் செய்த வினைக்கீடாகக் கிடைக்கின்ற இடங்களில் செல்வனவாய், விண்ணுலகிலும், மண்ணுலகிலும் புகுந்து துன்புறும்.

English Meaning:

The Jiva that realized
I and 'You' are one,
Is in Tatpara state;
Its course inherent diverting
Will reach Param;
The rest of Jivas
Reaching their destined abodes
In heaven and earth
Will in sorrow wallow.

பாடல் எண்: 2135

ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்
ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்
மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. 14

தமிழ் விளக்கம்:

மெய்ஞ்ஞானிக்கு உடம்பாவது சிவனது அரு ளாகிய உடம்பேயாம், அஞ்ஞானிக்கு உடம்பாவது புலாலால் ஆகிய அந்த உடம்பேயாம். அஞ்ஞானிக்குமேல் நிற்பவனாகிய யோகிக்குப் பைசந்தி வாக்கும் அதற்கு மேல் உள்ள சூக்குமை வாக்கும் தக்கபடி உடம்பாகும். ஞானத்தின் மேல் எல்லையாகிய மோன நிலையை எய்தியவன் முப்பாழையும் கடந்த முத்தி நிலையையே உடம்பாகக் கொண்டிருப்பான்.

English Meaning:

Siva is the ground (Dhanu) of Jnani\'s body,
Jnani\'s body is Siva\'s body,
Yogi\'s body is Nada and Bindu,
Mauni\'s body is Mukti
Beyond Voids Three.

பாடல் எண்: 2136

விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 15

தமிழ் விளக்கம்:

மூவகை ஆன்ம வர்க்கத்தினருள் விஞ்ஞானகலர் நிலையை ஆணவமே சூக்கும தேகமாய் நிற்கும். இனி அந்த விஞ்ஞானகலர்க்கு அடைய இருப்பவராகிய பிரளயாகலருக்கு அசுத்த மாயையே எல்லா உடம்புமாய் இருக்கும். `ஞானம் இல்லாதவர்` எனப் படுகின்ற சகலர்க்குக் கன்மத்திற்கு ஈடாக வருகின்ற பிராகிருதங்களே உடம்பாகும். ஆகவே, அருள் உடம்பு மெய்ஞ்ஞானைத்தை எய்தினவர்கட்கே வாய்ப்பதாம்.

English Meaning:

Anava (Egoity) is the (Dhanu) ground of Vijnanis
Maya is the ground of Pralayakalas
Karma is the ground of Sakalas
Siva is the ground of Jnanis True.

பாடல் எண்: 2137

மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. 16

தமிழ் விளக்கம்:

அறிவுடையீர், தம் உடம்பை அருவருத்து நீக்கத் தக்கதாக அறிவும் அறிவையில்லாதவர் அதனையே தாம், என்றும் இருக்கும் இடமாகக் கருதி, அதன்கண் தனியான ஒருபற்று வைத்துப் போற்றிவருதலைக் கண்டீரன்றோ! அவர் நிலையை அடைந்திருக்கும் உயிர்கள் அதன் பயனாகப் பற்பல தூல தேகங்களை எடுத்து உலகங்களிலேயே உழலும்.

English Meaning:

Dumb fools are they
Who as Mala (Impurity) despise the body;
Other places as holy
They go about seeking;
They who consider 'Good this is'
And in it seek the Lord,
Shall experience macrocosm entire,
In their body tenacious
(That microcosm is.)

பாடல் எண்: 2138

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. 17

தமிழ் விளக்கம்:

நல்ல சொற்களையே பேசுகின்ற வாக்கிலும், நல்ல நினைவுகளையே நினைக்கின்ற மனம் முதலிய அகக்கருவிகளிலும் இறைவன் மெல்ல மெல்ல வெளிப்பட்டு விளையாடுவான். நல்லன அல்லாத சொற்களையே கேட்க விரும்புகின்ற செவியையும், அவ்வாறே, அறியத் தகாத தம் தம் புலன்களையே அறிய விரும்புகின்ற கண் முதலிய ஏனைப் பொறிகளையும், நல்லன அல்லாதவற்றையே நினைக்கின்ற உட்கருவிகளையும் உடைய மக்கள் இவ்வுலகில் வறுமையால் பசி மிக்கவராய் வருந்துவர்.

English Meaning:

Those who are
Of goodly speech, deed and thought,
In their hearts
The Pure One gently sports;
Those who are
Of evil ears, speech, and mind
Emaciated they live, their faces in hunger drawn.

← அட்டவணைக்குச் செல்ல