திருமந்திரம்

166. கீழால் அவத்தை

(பாடல்கள் 2142 முதல் 2166 வரை)

பாடல் எண்: 2142

ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை
மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 1

தமிழ் விளக்கம்:

மேற்கூறிய அவத்தைகளில் மத்தியாலவத்தை ஐந்தும், கீழாலவத்தைச் சாக்கிரமும் நிகழும் இடம்புருவநடு, அவற்றுள் மத்தியா லவத்தைச் சாக்கிரமும் ஒன்றிலேதான் எல்லாக் கருவிகளும் குறை வின்றிச் செயற்படும். மற்றையவற்றில் சிற்சில கருவிகள் செயற்படாது நிற்கும். அவற்றைப் பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளாகக் கூறுவர். மத்தியாலவத்தையை விட்டு, ஆன்மாக் கீழாலவத்தையில் சாக்கிரத்தை அடைதற்குக் காரணம் ஆன்ம தத்துவங்களில் சிலவும், தாத்துவிகங் களில் சிலவும் குறைதலேயாகும். அந்நிலையில், கீழாலவத்தைச் சாக்கிரத்தில் செயற்படும் கருவிகள் முப்பத்தைந்து` என்று சொல்லப் படுகின்றது. `சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்` என்பது சிவஞான சித்தியார்.3 முப்பத்தைந்தில் தத்துவம் பதினைந்து; தாத்துவிகம் இருபது. ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று. இவை தத்துவங்கள், ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன் மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து. இவை தாத்து விகங்கள். `முப்பத் தைந்து` எனத் தொகை கூறி வரையறுத்தது பிரிந்தும், கூடியும் வரும் நிலைமையுடைய கருவிகளை நோக்கியேயாம். ஆகவே, பிரிவின்றி எஞ்ஞான்றும் கூடியே நிற்கும் கருவிகள் இந்த அவத்தை பேதங்களில் நீங்குவன அல்ல. அவை வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாம். `புருடன்` என்பது ஒரு தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஐந்தும் கூடிய நிலையேயாம். இவை ஐந்திற்குக் காரணம் `மாயை` என்னும் தத்துவம். எனவே, புருடன்` என்றதனால், மேற்கூறியவற்றோடு சிவ தத்துவமும் பெறப்படும். ஆகையால் `முப்பத்தைந்து` எனச் சுருக்கமாகக் கூறியபோதிலும் `நாற்பத்தாறு` என்பதே உண்மையாம். எனவே, கீழாலவத்தை தொடங் குங்கால், தொண்ணூற்றாறு கருவிகளில், நீங்குவன ஐம்பதே` என்பது விளங்கும். ஐம்பதில் தத்துவம் பத்தும், தாத்துவிகம் நாற்பதும் ஆகும். தத்துவம் பத்தாவன மாபூதங்கள் ஐந்து; தன்மாத்திரை ஐந்து, தாத்துவிகம் நாற்பதவான. மேற்கூறிய சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து ஆகிய இருபது தவிர மற்றவையாம்.

English Meaning:

Awareness
In the Waking State (Jagra)
The Tattvas twenty and five
In Eye-Brow Center their position take;
In the Dream State (Swapna)
Tattvas ten and four
In Throat Center their hold take;
In Deep Sleep state (Sushupti)
The Purusha (Soul) stands
Alone in Heart Center;
In Turiya State (Fourth)
He (Purusha) stands
In Center that is Navel.

பாடல் எண்: 2143

முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. 2

தமிழ் விளக்கம்:

முப்பத்தாறு தத்துவங்களாலும் (எனவே, தாத்து விகம் அறுபதும் உளவாம் ஆதலின் தொண்ணூற்றாறு கருவிகளாலும்) நிரம்பிய அறிவாய்க் கீழாலவத்தைக்கு முன்னே உள்ள மத்தியா லவத்தையில் சாக்கிரம் நிகழும். அதுபொழுது சிவதத்துவம் ஐந்து உள்ளனவாம். அதன் பின் மத்திய சொப்பனம், மத்திய சுழுத்தி, மத்திய துரியம், மத்திய துரியாதீதம் - என்பவை முறையே சிவ தத்துவங்களில் ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு குறைய நிற்கும் தத்துவங்கள் நான்கு, மூன்று, ஒன்று, ஆகுமாற்றால் நிகழும் நீங்குவன சுத்த வித்தை முதலாகவாம் ஆதலின், இறுதியில் நிற்பது `சிவம்` என்பதொன்றுமே யாம். தத்துவங்கள் செலுத்துவனவும், கலை முதலிய ஐந்தும் செலுத்தப் படுவனவும் ஆதலின், செலுத்துவன நான்கும் நீங்கிய பொழுது செலுத்தப்படுவனவற்றிலும் நான்கும் நீங்கும். அவை, `அராகம், வித்தை, கலை, நியதி - என்பன. எனவே, எப்பொழுதும் நீங்காது நிற்பன `சிவம்` என்னும் தத்துவமும், அதனால், செலுத்தப்படுகின்ற காலமும் ஆம். ஆகவே, மத்திய துரியாதீதத்தில் நிற்பன அவை மட்டுமேயாம். இவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

English Meaning:

Of the Five Avastas Jagra commencing
That to Tattvas six and thirty pertain,
The Fourth is the luminous Turiya;
Passing beyond to Turiyatita
The Two in One inseparate merge
The Jiva himself Siva becoming;
This the Order do know,
The Siva that stands in the Beginning
Becomes verily in End of Experience all.

பாடல் எண்: 2144

இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. 3

தமிழ் விளக்கம்:

கேவலம் வருமாறு செய்கின்ற அந்தச் சாக்கிரா வத்தையானது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அவற்றின் விடயங்கள் பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று - என்னும் முப்பத்தைந்து கருவிகளால் நிகழும்.

English Meaning:

Indriyas ten (five sensory organs and five motor organs)
Their Tanmatras ten (Subtle potent elements of Indriyas)
The Vayus ten (winds) that secret work,
The Antakaranas four (inner seats of thought)
And Purusha, the Experient Jiva,
--All these (instruments of experience)
Are again and again entangled
In the cycle of life\'s awareness.

பாடல் எண்: 2145

பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4

தமிழ் விளக்கம்:

(அவத்தைக்குக் காரணமான கருவிகளுள் மிக எளிதில் விளங்குவனவாகிய ஐம்பெரும் பூதங்களில்) நிலம் பசும் பொன்னிறத்தையும், நீர் வெண்மை நிறத்தையும், நெருப்புச் சிவப்பு நிறத்தையும், காற்றுக் கருப்பு நிறத்தையும், வானம் புகை நிறத்தையும் உடையன. இவற்றின் அதிதேவர்கள் இவைபோலப் புலனாகாது மறைந்து நிற்பார்கள்.

English Meaning:

Earth is of color, gold pure;
Water is white;
Fire red;
Wind dark;
Space smoky;
Thus the five elements concealed stand within.

பாடல் எண்: 2146

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. 5

தமிழ் விளக்கம்:

தத்துவம் முப்பத்தாறனுள் பூதம் ஐந்து, ஞானேந் திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப்பதினைந்தும் புறக்குற்றங் களில் மூழ்கச் செய்கின்ற புறக்கருவிகளாம். ஆறு ஆதாரங்களும், ஒரு வகை மாயையாகச் சொல்லப்படுகின்ற பிரகிருதிகுணங்களும் அவத் தைக்கு ஏதுவாகும். அந்நிலையில் ஐந்தவத்தைகளுள் முதலாவதாகிய சாக்கிராவத்தையில் தொண்ணூற்றாறு கருவிகளும் தொழிற்படுவன வாம்.

English Meaning:

The elements five, too,
To sense organs additional function;
The five permeating each of Malas three,
Gunas three, and Adharas six;
Together with Tattvas thirty and six,
The organs of Avastas
Are six and ninety, in all.

பாடல் எண்: 2147

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 6

தமிழ் விளக்கம்:

மேற்கூறிய மத்தியலாவத்தையின் இயல்பைக் கூறுமிடத்து உயிரினது செயற்பாடு, அனைத்துச் சுற்றங்களும் சூழ அரசன் உலாவருதல் போன்றதாகும். யானை இருபத்தைந்து, (இவை ஆன்மதத்துவங்கள்) குதிரை ஐந்து, (இவை காமம், வெகுளி, உலோபம், யோகம், மதம், என்னும் உணர்ச்சிகள்) அமைச்சர் நால்வர். (இவை நால்வகை வாக்குக்கள்) புறஞ் சூழ்ந்து வரும் சேனைகள் காலாட்படைகள் (இவை வித்தியா தத்துவங்களும், சிவ தத்துவங்களும்) சென்று சென்று நிற்கும் வாயில்கள் ஒன்பது. (இவை நவத் துவாரங்கள்) இங்ஙனமாக அறிக.

English Meaning:

In Jagra State
The Jiva of Tattvas five and twenty
Its position takes
In Eye-Brow center;
With elephants Five, (sensory organs)
Infantry Five (motor organs)
Cavalry Five (internal sense potencies)
And Elements Five,
Inside Soldiery Four (the Antakaranas)
He with Tattvas twenty and four
Stands at the Gate of Waking (Jagra) state;
Thus, Tattvas stand in centers respective.

பாடல் எண்: 2148

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7

தமிழ் விளக்கம்:

அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம்மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` எனமயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியன வாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.

English Meaning:

The bodies (Causal, Subtle and Gross) embrace one another,
But the Jiva within body stood,
They know not;
They who the kinship between body and Jiva
Understood not,
Are verily bewildered
Unto the dog that into a kitchen abrupt strays.

பாடல் எண்: 2149

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. 8

தமிழ் விளக்கம்:

அறிவில்லாதவர்கள், `உலகத்தில் நாம் எவ் வாற்றால் உயிர் வாழ்கின்றோம்` என்பதைச் சிறிதும் உணர மாட்டார்கள். (உள்வாங்கியும், வெளிப்போக்கியும் பிராண வாயுவை ஓய்வின்றி இயக்குதலால்தான் அவர்கள் வாழ்கின்றனர். ஆகையால் அதனையறிந்து) பிறவியை அறுக்கின்ற அசபா மந்திரத்தால் பிராண வாயுவை மேற்சொல்லியவாறு இயக்கிப் பயின்று தூயராய்ப் பின் அவ்வாயுவை உள்ளே நிறுத்தி` அம்மந்திரத்தை, `சிவன் நான்` எனப் பொருள்படும் வகையில் மாற்றி நினைந்து அவ்வாற்றால், காமனை அழித்தோனாகிய சிவன் தம்மிடத்தில் பதிந்து பின் நீங்காது விளங்கும் படி செய்தலாகிய இம்முறையை உணர்ந்து, அதனால் அவன் அருளே தமது உடம்பாகச் செய்து கொள்வார்க்கு, அங்ஙனம் அமைந்த உடம்பு அழிந்தொழியாது; நிலைத்திருக்கும்.

English Meaning:

They know not how To-Be;
Poor are they in Spirit;
Those, who,
Course upward the vital Ajapa*
(Through breathing in Yoga way)
And sublimate the Bindu,
They meet the Lord
That destroyed Kama, the God of Love;
Comely their body becomes
And indestructible here remains.

பாடல் எண்: 2150

ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. 9

தமிழ் விளக்கம்:

அறிவுப் பொருளேயாயினும் ஆணவ மறைப் பால் அவ்வறிவை இழந்து நின்ற உயிரை இறைவன் கருவிக் கூட்டத்துள் மறைந்து நிற்கும்படி செய்தான். (பின்பு அவ்வுயிர் பக்குவம் எய்திய காலத்தில்) குருவாகி வந்து எனக்கு உபதேசித்த நூல்கள் வழியாக என் உடம்பினுள்ளே மறைந்திருந்த பிராசாத கலைகள் பதினாறையும் விளக்கினான்.

English Meaning:

and the Fourteen Inner Tattvas
The Tattvas four and ten*
That in me lay concealed,
The Pure One appeared
And in bounty revealed;
The Kalas six and ten
That to me lend grace,
He placed, to none beknown,
My thoughts in Him to center.

பாடல் எண்: 2151

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 10

தமிழ் விளக்கம்:

மண்ணிலிருந்து தோன்றிய பல மலர்களை உடைத் தாய் விளங்குகின்ற நீர், பொன்னிறத்தை உடைத்தாகிய தீயினின்றும் அதற்குப்பின் தோன்றியதாம். இனி அத்தீக் காற்றி லிருந்தும், காற்று ஆகாயத்திலிருந்தும் தோன்றினவாம். புத்தியினின்றும் தோன்றிய தாகிய அகங்காரத்திலிருந்து தோன்றியது மனம். இவ்வாறு தூல சூக்கும தேகங்களின் உற்பத்தியைப் பகுத்துப் பகுத்து உணர்ந்தால், அவற்றை ஒடுக்கி, ஆன்மாத் தூய்மை அடைகின்ற நிலை கைகூடும்.

English Meaning:

The Earth and Water expanses;
The Fire that blazes in color gold,
The Wind and Space
The Mind, Will, Intellect and Egoity
On their quintessence,
You in succession contemplate;
Then victorious you stand, the elements vanquishing.

பாடல் எண்: 2152

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே. 11

தமிழ் விளக்கம்:

ஐவர் சத்திகளில் முன்னவளாகிய மனோன் மணிக்கு மகன் ஒருவன்தான். அவளிடத்தினின்றும் தோன்றிய மகேசுரனுக்கு மக்கள் இருவர். நெருப்புப்போலும் உருவத்தையுடைய உருத்திரனுக்கு மக்கள் மூவர். மணமகள் போல அழகு மிக உடைய திருமகளுக்கு மக்கள் நால்வர். கணவனது இயல்பு நோக்கிக் கன்னி யாகச் சொல்லத்தக்க வாணிக்கு மக்கள் ஐவர். இவையெல்லாம் அநாதியில் யில்லை. ஆயினும் அநாதியாகிய சிவன் அவ்வாறாகிய தனது சத்தியை அநாதியே தாய்மை அடையுமாறு கருதினான்.

English Meaning:

One the child for Space--Sound
Two for Wind--Sound and Touch
Three for Fire--Sound, Touch and Light
Four for Water--Sound, Touch, Light and Taste
Five for Earth--Sound, Touch, Light, Taste and Smell
This was not of yore there, before creation began
Before the Virgin Sakti (Spirit), the Virgin Maya (Matter) loved.

பாடல் எண்: 2153

கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 12

தமிழ் விளக்கம்:

சுழுத்திக்குப் பின் கண்ட கனவிலே செயற்பட்ட ஓசை முதலிய புலன்கள் ஐந்தும், பின்னர்ச் சென்று கலந்த பொறிகள் ஐந்தோடும் கூடியிருக்கும் நிலையில் அப்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அந்தக்கரணங்கள் நான்கும் உணர்வுறும் நிலைமையை ஒருங்கே அடைந்தபின் புருடன் முன்னை நிலையை அடைந்து, விரிந்த பரந்த சிறந்த சாக்கிராவத்தையையுடையனாய், உலகமே தானாயது போன்ற வியாபக நிலையைப் பெற்று, வினைகளை நுகர்தலும் ஈட்டலும் செய்திருப்பான்.

English Meaning:

In Dream State
The Senses Five experienced;
The Tanmatras Five too;
And Antakaranas Four as well;
Having experienced thus in Dream State
The Jiva returned to Jagra State to experience;
There he stood in full knowledge of world.

பாடல் எண்: 2154

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 13

தமிழ் விளக்கம்:

ஞானேந்திரியமும், கன்மேந்திரியமும், அந்தக் கரணங்களும் ஆகிய பதினான்கு கருவிகளோடு கூடிச் சாக்கிரா வத்தையில் நின்ற புருடன், அவ்வாறு நிற்கும் நிலையிற்றானே இரு வகை இந்திரியங்களாகிய பத்துக் கருவிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய நான்காகிய அந்தக்கரணங்களோடு மட்டும் அழுத்தமான கண்டத் தானத்தில் சென்று, முன்பு சாக்கிரத்தில் புருவ நடுவில் நின்று நுகர்ந்த உலக நுகர்ச்சிகளின் வாசனையைக் கனவாகக் காண்பான்.

English Meaning:

Dream Vision
Thus it is, Jiva with Tattvas four and ten
In Dream State stands;
But with the ten sense organs uninvolved
With Antahkaranas Four alone,
And aided by the memory
Of earthly life here below,
He (Jiva) in the Throat-Center,
Dreams visioned.

பாடல் எண்: 2155

தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து கழுத்தியது ஆமே. 14

தமிழ் விளக்கம்:

மேற்கூறிய கண்டமாகிய தானத்தை (இடத்தை) விட்டுப்புருடன் கீழ் இறங்கி, அங்ஙனம் இறங்கும் நிலையில், முன்பு இருந்த அந்தக்கரணங்களுள் மானமாகிய அகங்காரத்தையும், மதியாகிய புத்தியையும் விடுத்து, யாதொன்றையும், பற்றிநினைக்க மாட்டாத நிலையையடைந்து, இருதயத்தில் தனியேசென்று, புலன் உணர்வையிழந்து இழப்பு நிலையில் உயிரினது சொரூபமே காணப் படாது கிடக்கும் நிலையே சுழுத்தியவத்தையாம்.

English Meaning:

Leaving the Throat Center there,
Alone, he (Jiva) enters the Heart\'s-Center
There, Egoity (Ahamkara) lost, Intellect (Buddhi) lost,
Cognition (Mind) lost
In the State that discerns not world,
Consciousness of body bereft,
He (Jiva) reached the Deep Sleep State of Sushupti.

பாடல் எண்: 2156

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15

தமிழ் விளக்கம்:

சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்கநிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்துகொண்டிருப்பான்.

English Meaning:

Having reached Deep Sleep State of Sushupti,
He with three there remains;
--Chitta (Will), Prana (Vital Breath) and Sentience of Self,
Thus into the Herat-Center Jiva enters
There one with the Subtle Object he stands
(In the state of Sushupti Deep.)

பாடல் எண்: 2157

தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 16

தமிழ் விளக்கம்:

உயர் தனக்குச் சிறப்பிடமாகிய இருதயத்தினின் றும் புறப்பட்டவழி அதற்குத் தரப்படும் துரியத்தானத்தில் நின்று பின்பு அதனையும் விட்டு அப்பாற் சென்று, உலகத்தைப் பின் தள்ளிவிட்டு, நாதத்தால் உணர்வு விளங்குமாறு நிற்கின்ற குண்டலினி சத்தியின் தலைபொருந்தியுள்ள மூலாதாரத்தை அடைந்து, அவ்விடத்தில் பொருள்களை மயங்கியறிதலாகிய அந்த அறிவும் இன்றி அறிவே யில்லாதது போலக் கிடக்கும்.

English Meaning:

From Sushupti Center,
He further moves continuing,
Into Turiya Expanse
Leaving thoughts of world below;
On to peaks of Nada (in navel center) he ascends;
There rid of primordial ignorance,
He remains in Mauna (Silentless).

பாடல் எண்: 2158

Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17

தமிழ் விளக்கம்:

[நால்வகை வாக்குக்களில் மிகவும் தூலமாகிய வைகரிவாக்குச் சகல ஐந்தவத்தையிலும் தூலமாகிய மத்திமை வாக்கு கேவல ஐந்தவத்தையிலும், சூக்குமமாகிய பைசந்தி வாக்கு யோகா லவத்தையிலும், மிகவும் சூக்குமமாகிய சூக்குமை வாக்கு சுத்த ஐந்த வத்தையிலும் செயற்படும். அதுபற்றித்தான் வாக்குக்கள் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகளாக எண்ணப்படவில்லை.]
மேற்கூறிய நால்வகை ஐந்தவத்தைகளில் மேற்கூறியவாறு நால்வகை வாக்குக்கள் செயற்படுங்கால், சாக்கிரம் முதலிய ஐந்திலும் முறையே, தூலதமம், தூலதரம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம்` என்னும் நிலையில் செயற்படும் அதிசூக்குமமே ``ஊமையெழுத்து`` என்றும் ஏனையவை ``பேசும் எழுத்து`` என்றும் மறைபொருட் கூற்றாகக் கூறப்பட்டன. அதிகாரம் கீழாலவத்தையாதலின் இங்குக் கூறப்பட்ட, `பேசும் எழுத்து, ஊமையெழுத்து` - என்பன கீழாலவத் தையில் செயற்படுவ தாகிய மத்திமை வாக்கின் `அதிசூக்குமம், சூக்குமம்` என்பவற்றை யாம். தூலதமம், தூலதரத்திலும், தூலதரம் தூலத்திலும், தூலம் சூக்குமத்திலும் ஒடுங்கிவிடப்பின்பு சூக்குமமும் அதிசூக்குமத்தில் ஒடுங்கிவிட்டால் பெத்தநிலையில் உள்ள உயிர் புறப்பொருள்களில் யாதொன்றையும் அறியமாட்டாது உணர்வை முற்றிலுமாக இழந்து, பிரகிருதிமயமாகியே கிடக்கும். இதுவே கீழாலவத்தையில் துரியா தீதத்தின் நிலைமை. இதனையே,
``ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்``
என்றார். `ஆமை` என்றது உயிரை. இஃது உருவகம். அஞ்சு - ஐம் புலன்கள்மேல் சென்று அவற்றைக் கவர்கின்ற உணர்வு. அவ்வுணர்வு சிறிதும் வெளிச்செல்லாது உயிரோடு உயிராய் ஒட்டிக் கிடத்தல், ஆமையின் ஐந்து உறுப்புக்கள் அதனது ஓட்டிற்குள்ளே அடங்கி வெளித் தோன்றாதிருத்தலோடு ஒத்திருத்தல் பற்றி, உயிர் ஆமையாக உருவகம் செய்யப்பட்டது. சுழுத்தி துரியங்களிலும் அஞ்சும் அடங்கி யிருப்பினும் சித்தமும், பிராணனும் செயற்படுதலால் `அவற்றின் வாசனை சிறிதாயினும் இருக்கும்` என எண்ண இடம் உண்டு. உயிர்ப்பு அடங்கி விட்டமையால் அதீதத்தில் அவ்வாறு எண்ணச் சிறிதும் இடம் இல்லாமை பற்றி, இவ்விடத்திற்றானே ``அஞ்சும் அடங்கிடும்`` எனக் கூறினார். `தமோமாய்` (இருள்மயமாய்) நிற்கும் அதீத நிலையை சிவத்தில் அழுந்தி ஒளிமயமாய் நிற்கும் நிலையாகக் கூறுபவர் யாதும் அறியாதவர்` என்பதை உணர்த்துதற்குப் பின்னிரண்டடிகளைக் கூறினார். அவற்றுள் `ஓம்` என்றது அதன் உண்மைப் பொருளாய் நிற்கும் சிவத்தை.
`சுத்த துரியாதீதத்தில் சிவத்தை அடைந்த சிவமயமான உயிர், இருள் முழுவதும் நீங்கி ஒளிமயமானதாகும். அதனால் அது `நாம்` என்னும் சீவபோதமும் இல்லாததாகும். அந்த நிலையை நாம் அறிந்திலோம் என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

English Meaning:

When with silent letter 'M'
The articulate letters 'A' and 'U' conjoins,
The Five Senses are withdrawn,
As limbs within the tortoise;
Then Jiva is by 'Aum' pervaded;
The light Divine beams from within;
The Self its sentience loses;
--This we know not.

பாடல் எண்: 2159

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே. 18

தமிழ் விளக்கம்:

சுழுத்தியைக் கடந்து உள்ள `துரியம், துரியாதீதம்` - என்னும் இரண்டனுள் துரியம், `எவ்வாறு இருந்தது` என வினாவு பவர்க்கு, `இவ்வாறு இருந்தது` என விடையிறுக்கக் கூடியதாகும். துரியா தீதமோ எனில், அவ்வாறு வினாவுவார்க்கு இவ்வாறு இருந்தது` எனச் சொல்லவாராத நிலையாகும். ஏனெனில், சாக்கிராவத்தையில் அடக்கினும் அடங்காது, யாதானும் ஓர் ஆற்றால்தப்பிப் புறத்தே ஓடுதலால், `நரிகள்` என்று சொல்லத்தக்கனவாகிய ஞானேந்திரியம், கன்மேந் திரியம், அந்தக்கரணம் என்னும் பதினான்கு பொறிகளும் (கரணங்களும்) பிரகிருதியின் தமோ குணமாகிய விடத்தை உண்டமையால் இறந்து போய்விட்டன. அப்பொறிகளின் வழிச் செல்லும் உணர்விற்கு ஊர்தியாகிய `பிராணன்` என்னும் குதிரையும் தனது ஓட்டம் அடங்கி ஒழிந்தது.

English Meaning:

Turiya is in Jagrat experienced;
The foxes fourteen* (Indriyas etc.) of themselves die;
The swiftly steed of Prana flees,
How that State beyond Turiya (Turiyatita) is,
Impossible to state, indeed.

பாடல் எண்: 2160

மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 19

தமிழ் விளக்கம்:

முத்தி பெறுங்காறும் விட்டு நீங்காதிருக்கின்ற ஐந்து மலங்களால் நிலைபெறுவதாகிய சகலாவத்தையில் தனியொரு சிறப்பினையுடைய மாயேயமாகிய தனு, கரணம் முதலியவற்றிற்கு இந்தச் சகல நிலையில் முடிவேயில்லாமையால், எல்லாவகையான உயிர்களும் ஒரு பிறப்பின் பிறந்து, பின் அதனை விட்டு நீங்கி, வேறொரு பிறப்பை அடைந்து அலமரும். அதற்குக் காரணம் தனது ஆற்றல் குன்றப்பெறாத வினையே.

English Meaning:

Contaminated by Primordial Mala (Impurities) Five,
Jivas, all, the Five States of Awareness experience;
Endless indeed are the bodies and organs
That Maya endows;
All Souls, caught in birth and death,
Are by Karma alike struck.

பாடல் எண்: 2161

உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20

தமிழ் விளக்கம்:

இன்ப துன்பங்களை வினைக்கு ஏற்றவாறு விளைவித்து நிற்கின்ற மாயேயமாகிய உலகம், அந்த இன்பத் துன்பங்கள் தன்கண் வாதியாதபடி புளியம் பழத்தின் ஓடுபோல ஒட்டற்றுக் கழிய, இறைவனது திருவருளில் தோய்ந்து நிற்றலே முத்தியாகும். (என்றது, சீவன் முத்தி நிலையை, அதுவே சகலத்தில் சுத்தம் - என்க. இந்நிலைமுற்றாகக் கைகூடுதற்கு முன் பிராரத்த மாயினும் நீங்கிவிடுமாயின் அந்த உயிர் மற்றொரு பிறப்பை அடையும்) அத்தகைய உயிர் மற்றொரு பிறப்பை அடையுமாயினும் முன்னை ஞானத்தோடே பிறந்து, அது வழியாக அப்பிறப்பில் அது சீவன் முத்திநிலை முற்றாகக் கைகூடப் பெற்றுப்பின் முடிநிலையாகிய பரமுத்தியை அடையும்.

English Meaning:

Attain;
Jnanis Reach Mukti Direct
Maya feeds Jiva with Avasta experiences unbroken,
For the Jiva by Lord\'s Grace
To attain Mukti;
But the Jivas in Jnana born
Them Maya nears not;
And contemplating in Jnana
They direct attain Mukti.

பாடல் எண்: 2162

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
நிதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாகா ஐஅவத் தைப்படு வானே. 21

தமிழ் விளக்கம்:

அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத்தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம் போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.

English Meaning:

In the Primordial Slumber State of Jivas (Kevala State)
Devoid of Awareness,
Egoity is activated;
Then Consciousness springs,
And actions diverse Jiva pursues;
From the State of Kevala
Thus passing out,
He the Five States (Avastas) experiences,
Until he becomes Para Supreme.

பாடல் எண்: 2163

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22

தமிழ் விளக்கம்:

அநாதியே பற்றி, இறுதியற்றிருக்கும் ஆணவ மலத்தால் அறிவிழந்து கிடக்கும் உயிர்களைக் கருணையே உருவாய் உள்ள இறைவன் எவ்வாறு அறிவை மறைத்தல் இன்றி, அதனை விளங்கச் செய்வதாகிய மாயையாகிய பணிப்பெண்ணை விட்டு ஆணவ உறக்கத்தினின்று தட்டி எழுப்பும்படி செய்வான். இது நல்லாசிரியன் ஒருவன் முன்னைநிலையில் சோம்பலால் உறங்கி விடுகின்ற சில மாணவர்களை அவ்வாசிரியன் மாணவர்களது அறிவை வளர்க்கத் தனது கையில் கொண்டுள்ள பிரம்பால் தட்டியெழுப்புதல் போல்வது.

English Meaning:

As with his staff the teacher rouses the pupil
Who in his presence slumbers,
Even unto it,
The benevolent Lord with Maya awakens
The Soul that in prolonged Egoity slumbers.

பாடல் எண்: 2164

மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 23

தமிழ் விளக்கம்:

`காலம், இடம், கருவி, கரணம் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றினாலும் உட்படுத்தப்பட்டு, ஏகதேசப்படுதலை ஒரு ஞான்றும் எய்தாத பேரறிவாகிய அந்தப் பரப்பிரமந்தான் இந்த உயிர்` என ஏகான்மவாதி கூறும் அக்கூற்று, `ஒரு குடத்துள் அடங்கியுள்ள நீரைச்சுட்டி, - மேகம் - என்பதும் இதுதான்; - தான் கங்கா நதி - என்பதும் இதுதான் எனக் கூறுகின்ற மிக்க அறிவில்லாதவன் மிக்க அறிவுடையான் போன்று கூறுகின்ற கூற்றோடு ஒப்பதாய்ப் போக, இந்த உடம்பிற்குத் தலைவனாகிய உயிர் இதைவிட்டு நீங்கும் நாள் வருகின்ற வரையில் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகளை இந்த உடம்பின்கண் எய்தி, ஏகதேசப்பட்டுத் துன்பன் உறும்.

English Meaning:

They who say: 'After death nothing left;
The Jiva the five states experienced
Forever fled;'
They are verily unenlightened surpassing;
They might as well say:
The heavenly Ganga Mandakini
That from clouds aloft streams forth
Ends as an empty pot.

பாடல் எண்: 2165

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24

தமிழ் விளக்கம்:

இம்மந்திரம் ஒட்டணியாய் நின்று பொருளைத் தருகின்றது. படி - நாடு; என்றது புற உலகத்தை. அதனை இறைவன் ஆணையால் தனதாகக் கொண்டு இன்பத்துன்பங்களை எய்திவரும் உயிரையே, `உடை மன்னவன்` என்றார். வடிவு - பல உள்ளமைப் புக்கள். மாநகர் - கோநகர்; என்றது உடம்பை. வருதல் - உலாவருதல். என்றது, எல்லா இடங்களிலும் வியாபித்து, எல்லாப் புலன்களையும் உணர்ந்தும் அவற்றிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் செய்தும் வரும் சாக்கிராவத்தையை. அடியுடை ஐவர் - அணுக்கமாய் நிற்கும் அமைச்சர்கள். என்றது, ஞானேந்திரியங்கள் ஐந்தையும், அவற்றால் உணரப்படும் பொருள்கள் அந்தக்கரணங்களாலே தெளிவுபடும் ஆதலின், அந்த அந்தக்கரணங்களும் `ஐவர்` என்றதிலே அடங்கின. அங்கு உறைவோர் - அமைச்சர்களுக்குக் கீழாய் அரசனது உலாவில் பலவகைப் பணிகளையும் செய்துநிற்கும் பல பணியாளர்கள் என்றது பிறகருவிகளை. இம்முறையை, `கால்கொடுத்து இருகை மூட்டி` என்னும் ஞானாமிர்த அகவலிலும் காண்க. (அகவல் - 9) இச்சாக்கிர நிலை, ``படைகொடு பவனிபோதும் பார் மன்னன்`` எனச் சித்தியாரிலும் கூறப்பட்டது. (சுபக். சூ. 4)

English Meaning:

When the Earthly King, that is Jiva,
Mounting the steeds swift (of consciousness),
At the Lovely City (of Turiyatita) arrives,
The Senses Five
And Tattvas rest that remained behind,
But slept in the body,
That vibrant once was.

பாடல் எண்: 2166

நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25

தமிழ் விளக்கம்:

சகலத்திற் கேவலமாகவும், சகலத்திற் சகலமாகவும் இயல்பாக நிகழ்ந்து வருகின்ற அஞ்சவத்தைகளிலே பாகம் (பக்குவம்) எய்தாத ஆணவமலத்தைச் சகலத்தில் சுத்தமாய் நிகழும் சாக்கிரா வத்தையில் பாகம் எய்தியதாக அறிந்து, அதனானே பஞ்ச மலங்களும் பாகமெய்தியவற்றையும் நன்கு கண்டு, எஞ்ஞான்றும் தனது செம்மை யினின்றும் திரிதல் இல்லாத மேலான பொருளோடுகூடி நிற்பதே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

English Meaning:

In the States Five,
In purity, vision Malas Five
That pure are not;
See, in the Waking State
They trouble you not;
Straight confront them;
Then shall you with Para direct,
Forever and ever be.

← அட்டவணைக்குச் செல்ல