திருமந்திரம்

170. கேவல சகல சுத்தம்

(பாடல்கள் 2227 முதல் 2268 வரை)

பாடல் எண்: 2227

தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே. 1

தமிழ் விளக்கம்:

தத்துவங்களையும், அவற்றின் நீங்கியவழித் தன்னையும் அறிதலை விடுத்துச் சிவத்தை அறிகின்ற சுத்த நிலையை அடைந்தவனும், அவ்வாறின்றி, `தத்துவம், சிவம்` என்ற இரண்டையும் அறியாது, ஆணவம் ஒன்றிலே மட்டும் அழுந்தி யிருக்கின்ற, தனது அநாதியியல்பை உடையவனும், இவ்விருவரின் வேறாய்த் தத்துவங் -களை அறிந்து நிற்பவனும் தம்தம் ஆற்றலுக்கு ஏற்ப முறையே, சத்து, அசத்து, சதசத்து ஆகிய பொருள்களில் பொருந்தியிருப்பர்.

English Meaning:

States
He who cognises the Self
Is in Suddha State;
He who is not
Is in Kevala;
He who cognises in distracting differences
Is in Sakala;
In Sat (Real), Asat (Unreal) and Sat-Asat (Real-Unreal)
They respective conjoin;
Each according to his cognising state.

பாடல் எண்: 2228

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. 2

தமிழ் விளக்கம்:

(இதன் பொருள் வெளிப்படை.)

English Meaning:

Himself unto himself
Is foe and friend;
Himself unto himself
Is the here and hereafter;
Himself his Karmas
He experiences;
Himself unto himself
His master be.

பாடல் எண்: 2229

ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்உறு பாசம் சகலத்து ஆமே. 3

தமிழ் விளக்கம்:

உயிர் மாயை கன்மங்களோடு கூடாது ஆணவத்தோடு மட்டும் இருந்த நிலை கேவலாவத்தை. (இதுவே உயிர்களின் அநாதி நிலை). பின்பு இறைவன் மாயா காரியங்களைக் கூட்டுவிக்க, அவற்றால்சிறிது அறிவைப்பெற்று வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும் நிலை சகலாவத்தை.

English Meaning:

The Soul in Kevala State
Inert reposes;
On it the Mamaya (Asuddha Maya) acts;
By the action
The Soul receives powers of cognition;
And then mixing with Desire (Kamiyam)
And the Objects of Desire (Mayeyam)
In Pasa it full enters;
That the State of Sakala is.

பாடல் எண்: 2230

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே. 4

தமிழ் விளக்கம்:

ஆன்மதத்துவங்கள் கூடுதல் குறைதல்களால் நிகழும் அவத்தைகளே சகலாவத்தைகள் ஆதலின், அவைகளை அடைந்தோர் யாவரும் சகல வருக்கத்தினரே. ஏனெனில், அவர்களே முக்குண வடிவாகிய பிரகிருதியுட்பட்டு, மும்மலங்களை உடையவர் -களாய் இருத்தலின். எழுவகைப் பிறவியும் எய்தும் உயிர்கள் யாவும் சகல வருக்கத்தினவாதல் தெளிவு. இனி அவ் உயிர்களின் மேம்பட்டவர்களாக எண்ணப்படுகின்ற `அயன் மால்` என்பவர்களும் பிரகிருதி புவனத்துள் பிறந்து இறந்தமை புராண இதிகாசங்களில் கேட்கப்படுதலால், அவர்களும் சகல வருக்கத்தினரே.

English Meaning:

Sakalas are those
Who in Sakala State are;
Steeped they are in Pasas three;
The peerless Brahma, Hari,
The Celestials numerous,
The humans here below
And all lives unto the tiny worm,
All, all, are Sakalas verily.

பாடல் எண்: 2231

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. 5

தமிழ் விளக்கம்:

மாயை ஒழிந்த ஏனை இரு மலங்களையுடைய `பிரளயாகலர்` என்போர் பிரகிருதியைக் கடந்த மாயாதத்துவத்தில் இருப்பர். அதனால் இவர்களது தனு கரணாதிகள் பிராகிருதம் ஆகாது. மாயேயமேயாம். (எனவே, `மாயையின் நீங்கினார்` என்பது, `பிரகிருதியின் நீங்கினார்` என்பதேயாம். ஆகவே, இவர்கள் சகலரினும் மேம்பட்டவர்கள், சிவனை ஒரு போதும் அறியாது மயங்குவாரல்லர்.) மாயையின் நீங்கினாராயினும் கன்மம் நீங்கப் பெறாதவர்கள். (இவர்களுக்கு உள்ள கன்மம் சூக்கும கன்மமே.) அனந்த தேவர் வழிநின்று குணமூர்த்திகளை ஏவிப் பிரகிருதி மாயையில் காரியங்களைச் செய்விக்கும் சீகண்ட ருத்திரர், மற்றும் பிரகிருதி தத்துவத்தில் உள்ள நூற்றெட்டுப் புவன ருத்திரர்கள் ஆகியோர் இப்பிரளயாகலர் வருக்கத்தைச் சேர்ந்தவர்களே.

English Meaning:

Pralayakalas in Maya (Asuddha) world abide;
Of Maya their bodies are in main;
Of comeliness eternal are they;
The Srikanta
And the eight and hundred Rudras;
--(these the Pralayakalas are.)

பாடல் எண்: 2232

ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. 6

தமிழ் விளக்கம்:

எல்லார்க்கும் உரித்தாகின்ற கேவலாவத்தையைத் தாங்களும் உடையவர்களாய், ஆயினும் கன்மமும், மாயையும் இன்றி, ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்களில் பக்குவம் பெற்றோர் அனந்தர் முதலிய அட்ட வித்தியேசுரர்களும், சத்த கோடி மகாமந்திரேசுரர்களும் ஆவர். அபக்குவரோஅநேகர்.

English Meaning:

Vijnanakalas are souls, other numerous,
They reside in the State of Kevala;
They are possessed of Anava (mala)--alone;
The eight Vidyesvaras beginning with Ananta
The (Maha) Mantraresvaras that seven crore number,
--(these the Vijnanakalas are.)

பாடல் எண்: 2233

ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. 7

தமிழ் விளக்கம்:

மேல், `ஒருமலம் உடையார்` எனக் கூறப்பட்ட -வர்களில், பெறுதற்கரிய சிவனது திருவருளை நிரம்பப் பெற்ற சிலர் அதிகார மல வாசனை, போக மல வாசனை ஆகியவைகள் நீங்கப் பெற்று, இலய மல வாசனை மட்டுமே உடையவர் ஆவர். ஆகவே, அவர்கள் மலம் முற்றும் நீங்கிய முத்தர்களாகவே கருதப்படுவர். (அதனால் அவர்கட்குக் கேவல நிலை உள்ளதாகவும் கருதுதல் கூடாது. அவர்கள் வாழ்வது அபர விந்து அபர நாதங்களைக் கடந்த பரவிந்து பர நாதங்களிலாம். ஆகவே, அவர்கள் சூக்குமை வாக்கு ஒன்றை மட்டுமே உடையவர் ஆவர். அவ்வாற்றால் அவர்கள், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவராகக் கருதப்படுவர்.

English Meaning:

Of them,
Those who receive Siva\'s Grace
From Anava mala get liberated;
Transcending the states of Bindu (light) and Nada (sound)
As Aum (Pranava) they become;
And in Siva Pure they merge;
That verily is the Suddha (Pure) State (Avasta).

பாடல் எண்: 2234

ஒரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. 8

தமிழ் விளக்கம்:

Not available

English Meaning:

When you think of it,
Of these Souls in gradation three,
Vijnanakalas have divisions four.
They are shrouded in Kevala (Asuddha) Maya;
Inclined are they to be gripped by Desire,
Yet, of themselves they leave all;
When the Lord His Grace bestows;
And together the Malas sunders.

பாடல் எண்: 2235

பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. 9

தமிழ் விளக்கம்:

உண்மையான சுத்தாவத்தையாவது, விபரீத ஞானத்தையே தருகின்றவைகளாகிய கருவிகள் முப்பத்தாறினின்றும் விடுபட்டு அப்பாற்போய், அங்ஙனம் போயதனால் அறியா -மையையே தருவதாகிய ஆணவமலம் வந்து பற்றுதலாகிய அந் நிலையும் தோன்றாதொழிய, யாதொன்றனையும் உண்மையாகவே அறியும் அறிவை யுடையவனாய், அந்த அறிவால் சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஒருகாலத்திலே ஒருங்கே உணரும் நிலையை உடையனாய், அத்தன்மைத்தாய் விளங்கும் பராகாயமாகிய அருள் வெளியுட் பகுந்து, அவ்வெளிக்குள் உள்ள சிவனை, அடையாமல் அடைந்திருப்பதாகும்.

English Meaning:

Abandoning the illusory Tattvas
Six times six;
Rid of ignorance
The Jiva becomes Siva Himself;
And pervading all Creation
He enters the Void true;
This the Suddha State,
That of himself the Jiva reaches.

பாடல் எண்: 2236

அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே. 10

தமிழ் விளக்கம்:

அனாதியே பாசத்துட்பட்டுப் பசுத்தன்மை எய்தி நின்ற இந்த உயிரை, அனாதியாயும், ஆதியாயும் வந்த ஐந்து மலங்களால் ஆட்டிப் படைப்பவன் சிவன். அவன் அனாதியில் கேவல நிலையிலிருந்த உயிரை சகல நிலையில் கொணர்ந்துவைத்துப் பின்பு அனாதியாய பிறப்பு ஒழியும்படி சுத்தாவத்தையில் சேர்ப்பான்.

English Meaning:

Eternal is he, Jiva; pervasive too is he;
Immersing him in Eternal Malas five,
The Lord lifts him
From the Primordial Kevala State
And consigns to Sakala State;
Thence,
Freed from unceasing whirl of birth
The Jiva, Suddha State reaches.

பாடல் எண்: 2237

அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே. 11

தமிழ் விளக்கம்:

எல்லாவற்றினும் மேலாய், நிறைவாய் உள்ள உண்மைச் சுத்த துரியாதீதமே, `சுத்தாவத்தை` என்றற்குப் பெரிதும் ஏற்புடையது. அஃது `அருட்கேவலம்` எனப்படும் தத்துவ சுத்திக்குப் பின் வாய்ப்பதாகும். அதனை அவ்வாற்றால் சிவனால் தரப்பட்டவர் தனித்த ஒரு சுத்தமாகிய அந்த அதீத நிலையில் யாதொரு பற்றும் இல்லாத சிவமேயாய் இருப்பர். (இதில், `யான், எனது` என்னும் உணர்வு இல்லையாம்.) இனி அதற்குக் கீழ்நிலையில் உள்ள துரிய நிலையில் ஆன்ம அறிவு சிறிதே நிகழ்தலால், ஆன்மாச் சிவனை அறியும் முகத்தால் தன்னை அறிபவனாக உணரும் நிலை உள்ளதாம்.

English Meaning:

The Suddha State is the ultimate;
The Jiva that passes through Kevala
When it reachs Turiya
Receives knowledge of Tatpara,
--Who beyond States, Kevala and Suddha, exists--
Thus realizing the Self within.

பாடல் எண்: 2238

ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. 12

தமிழ் விளக்கம்:

Not available

English Meaning:

The Tattvas five times five
Will into the Soul involute;
The Soul, having realized Suddha State,
Will in Suddha Vidya Tattva merge;
The first three of this category
(Suddha Vidya, Isvaram and Sadakyam)
Will in Sakti involute;
Beyond the Sakti is Siva
(Of the Siva Tattva)
Thus involuting, the Soul returns to the Beginning;
This the order (in reverse) of evoluting too.

பாடல் எண்: 2239

ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. 13

தமிழ் விளக்கம்:

(மேல், `நாலாறுடன் புருடன்` - என்னும் மந்திரத்தில் `வேதாந்தி தத்துவம்`-எனக் கூறப்பட்ட இருபத்தெட்டுத் தத்துவங்களில்) ஒடுக்க முறையில் முதல் இருபத்தைந்து தத்துவங்கள் சீவனில் அடங்கும். இருபத்தாறாம் தத்துவமாகிய ஈசுரன் உட்பட மற்றைய மூன்று தத்துவங்களும் மெயப்பொருளாகிய பரப்பிரமத்தில் சீவன் ஒன்றாகும் பொழுது அதில் அடங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், `விவகாரத்திற்குக் காரண சத்தியாகிய மாயை, அதற்கு அதிட்டானமாம் பாரமார்த்திகப் பொருளாகிய பரப்பிரமம் என்னும் அவ்விரண்டிலே எல்லாம் தோன்றுதலால், எல்லாம் ஒடுங்குதலும் அவற்றிலேதான்` எனலாம்.

English Meaning:

The Tattvvas five times five of Purusha
Into the Six (Vidya Tattvas) involute;
They into the three Siva Tattvas higher above involute,
Who in turn merges into Sakti Bindu
Who with Siva (Nada) stands;
--Thus is the ultimate of involution reached
Into Tattvas four and seven.

பாடல் எண்: 2240

ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே. 14

தமிழ் விளக்கம்:

ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். இரு மலம் உடையவராகிய பிரளயாகலர் கேவலா வத்தையை அடையும் பொழுது வித்தியாதத்துவத்தின் முடிவாகிய மாயாதத்துவம் அவர்கட்கு அனுபவப்பொருளாகும். போக்கிய காண்டமாய்த் தூலமாய் உள்ள பிரகிருதிக் காரியங்களை உடைய சகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது காரணமாகிய பிர கிருதியையே பற்றிக்கொண்டு, அதன் காரியப் பொருள்களில் ஒன்றையும் அனுபவித்தல் இன்றியிருப்பர், இனிச்சகலாவத்தை சகலர்கட்கே உளதாகும்.

English Meaning:

Sakalas
According to the Number of Malas They Possess
The Kevalas (Vijnanakalas) are inert
With Anava alone possessed;
The Pralayakalas have Maya
In addition;
They see with form unseen;
The Sakalas are Souls
In all three Malas steeped.

பாடல் எண்: 2241

ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே 15

தமிழ் விளக்கம்:

Not available

English Meaning:

The Vijnanakalas possess Anava mala alone;
The Pralayakalas have Maya too;
Anava, Maya, and Karma
--All three the Sakalas have
These their Malas are.

பாடல் எண்: 2242

கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. 16

தமிழ் விளக்கம்:

(ஒன்று இடையிட்டு முன்னை மந்திரத்தில் கூறிய கேவல வகைகளில்) தமக்குரிய கேவலநிலை அடைபவராகக் கூறப்பட்ட விஞ்ஞானகலர், அக்கேவல நிலையினின்றும் எழுச்சி பெறுதல் `விந்து` எனப்படும் சத்தி தத்துவத்தினாலாம். (எனவே, கேவல நிலையில் அவர்கள்` நாதம்` எனப்படும் சிவதத்துவத்தைப் பற்றியிருந் -தமை பெறப்படும். ) அந்த விந்து சத்தியோடு பிற சுத்த மாயா தத்துவங் -களைப் பற்றிச் செயற்படுதலே அவர்களது சகல நிலை யாகும். (ஆகவே சகலருக்குப் போலப் பிரகிருதி தத்துவங்களைப் பற்றும் சகல நிலை அவர்கட்கு இல்லையாம்.) அந்தச் சகல நிலையில் அவர்களுடைய தனு கரணங்கள், மந்திர வடிவாகிய சுத்த மாயையால் ஆயினவேயாம்.

English Meaning:

The Vijnanakalas
Who stand in Kevala (inert State)
By the power of Bindu,
That in Kevala is,
Become activated as Sakalas within Kevala;
And so attain the truth of Mamaya
Who the power of Mantra holds.

பாடல் எண்: 2243

மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. 17

தமிழ் விளக்கம்:

வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் மட்டுமே செயற்பட்டு நிற்கும் நிலையில் பிரளயாகலர்பால் அந்த மாயா தத்துவ மும் மெத்தெனவே செயற்படுதலால் ஆணவம் மேற்பட்டு நிற்கும். (அஃதே அவர்க்குக் கேவல நிலையாகும்.) இனி, அவர்கட் குரிய சகலா வத்தைக்கண் சுத்த தத்துவங்கள் செயற்படுதலானே கன்ம மலங் காரியப் படுவதாகும். இந்நிலையில் நிற்பவர்கள், மேல், ``தாவிய மாயை``- என்னும் மந்திரத்தில் (2199) குறிப்பிடப்பட்ட நூற்றெட்டுருத்திரராவர்.

English Meaning:

The Pralayakalas in Maya (Suddha) reside;
Yet that Maya affects them not;
They stand with Anava;
With Mamaya\'s (Asuddha) Kamya desires that Sakalas possess;
They verily are the Rudras One Hundred and Eight.

பாடல் எண்: 2244

மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. 18

தமிழ் விளக்கம்:

`மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.

English Meaning:

They who in Malas three enveloped
In worldly life wallow,
Are the Sakalas per se;
Thus are the Devas, the humans,
And the rest of Brahma\'s creation numerous
Unto the very worm
That life\'s womb enters;
--All these are Sakalas That crowd the world.

பாடல் எண்: 2245

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. 19

தமிழ் விளக்கம்:

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சுத்தவத்தையில் மூழ்கினவர்களே, `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களும் செயல் ஒழிந்து, உண்மை மாத்திரையாய் நிற்றலாலும், அம்மலங்களைச் செயற்படுத்தித் தனியாகி அவறறிற்குத் தலைமை பூண்டு நின்ற திரோதான சத்தியாகிய மலமும் சிவசூரியனது கிரணமாம் அருட் சத்தியால் சற்று விட்டு நீங்குதலாலும் உண்மையில், `சுத்தர்` எனத் தக்கவர் ஆவர்.

English Meaning:

They who Suddha State reach,
By luminous Grace of Siva
Stand dispelled of Malas triple,
That Sat-Asat are;
And of dark Pasas, one by one;
Having thus rid them entire,
They become Suddhas ever.

பாடல் எண்: 2246

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. 20

தமிழ் விளக்கம்:

உயிர் சிவத்தோடு மட்டுமே பொருந்தி நிற்கின்ற அந்தத் தனிநிலையே பரமுத்தி நிலையாகும். அதுவே உண்மையில் தூய்மை யாகும். (இதனைச் `சிவகேவலம்` என்றும். `பர கேவலம்` என்றும் கூறலாம்.) இதற்குக் கீழ்ப்பட்டன எல்லாம் சகலங்களே. (அஃதாவது, மாசொடுபட்டனவே.) அந்நிலையில், சகல வருக்கத்து ஆன்மாக்கள் கலை முதல் மண் ஈறாய் உள்ள தத்துவங்களின் நீங்கி நிற்றல். அவற்றிற்கு மெய்ந்நூல்களில்சொல்லப்படுகின்ற சுத்த கேவல மாகும். (இஃது, `அருட் கேவலம்` என்பதாகத் துகளறு போதத்தில் சொல்லப்பட்டது. வெண்பா-25) புருவ நடுவிலே நிகழ்வதாகிய சாக்கிராவத்தையிலே புறப்பொருளில் தோய்தல் இன்றி, அறிவுக் கறிவாய் உள்ள சிவத்திலே தோய்ந்திருத்தல் சகலத்தில் சுத்தமாம். (இதுவே, `சாக்கிரத்தில் அதீதம்` - என்க.)

English Meaning:

Sakala,
Suddha-Jagra, and Suddha-Suddha
In Suddha-Kevala-Mukti State
The Jiva stands alone;
When afterward
The Kalas leave,
Then is Suddha-Sakala-Mukti;
When in sound Aum
The Soul as one stands,
Then is Suddha (Kevala) Jagra Mukti;
Still beyond,
The Soul Itself within Itself stands
Then is Suddha-within-Suddha-Mukti State.

பாடல் எண்: 2247

அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி
செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே. 21

தமிழ் விளக்கம்:

சிவஞான சித்தியாரில்,
``அறிவிலன்; அமூர்த்தன்; நித்தன்;
அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன்; கலாதி யோடும்
சேர்விலன்; செயல்க ளில்லான்;
குறியிலன்; கருத்தா அல்லன்;
போகத்திற் கொள்கை யில்லான்;
பிறிவிலன் மலத்தி னோடும்
வியாபி - கேவலத்தில் ஆன்மா``l
எனப் போந்த செய்யுளின் உரையை நோக்கி இம்மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொள்க.

English Meaning:

Inert without knowledge,
Unaffected by desires,
Goal-less, everlasting,
Unattached to Kalas,
Actionless,
Incapable of daily experiences,
By Malas deceitful infused,
--Thus is Jiva in Kevala-Mukti State.

பாடல் எண்: 2248

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. 22

தமிழ் விளக்கம்:

பிரளயாகலர், சகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை யினராய் விளங்கும் ஆன்மாக்கட்கும் முறையே அசுத்த மாயை, பிரகிருதி மாயை, சுத்த மாயை என்பவற்றால் அவ்வப் புவனங்களில் தனு கரண போகங்கள் உளவாகும். எல்லா உயிர்கட்கும் சுத்த மாயை -யின் காரியமாகிய வாக்குக்களால்தான் சவிகற்ப உணர்வு உண்டாகும்.

English Meaning:

Bindu, Maya and Kriya
They possess;
The power of interminable Jnana Sakti
Is their substrate (Dhanu);
In Bindu they attain Divine Knowledge;
Thus are the Pralayakalas of this world;
Albeit Sakalas,
They are Suddhas here below.

பாடல் எண்: 2249

கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே. 23

தமிழ் விளக்கம்:

காரண அவத்தைகள் `கேவலம்` முதல் மூன்றாகச் சொல்லப்பட்டாலும் அவற்றுள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து `கேவலத்திற் கேவலம், கேவலத்திற் சகலம், கேவலத்திற் சுத்தம்` என்று மூன்றும், `சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தம்` என மூன்றும், `சுத்தத்திற் கேவலம், சுத்தத்திற் சகலம், சுத்தத்திற் சுத்தம்` என மூன்றும் ஆக ஒன்பதாம். இவ்வேறுபாடுகள் நுண்ணுணர்வுடையார்க்கே விளங்கும்.

English Meaning:

Kevala, Sakala and Suddha
To speak of the subtle divisions
In the three States--Kevala, Sakala and Suddha
It is like this:
Kevala-Kevala, Kevala-Sakala, and Kevala-Suddha,
Sakala-Kevala, Sakala-Sakala, and Sakala-Suddha,
Suddha-Kevala, Suddha-Sakala, and Suddha-Suddha
--Thus are the combinations nine in All
For those in depth see.

பாடல் எண்: 2250

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. 24

தமிழ் விளக்கம்:

உயிர்கட்கு ஆணவ மல மறைப்பைச் சிறிதே நீக்கிச் சிறிதே அறிவைத் தருவன மாயா கருவிகள். அதனால், அவை ஒடுங்கிய விடத்து ஆணவம் மேற்படுவதே கேவல நிலை. கீழா லவத்தை மத்தியாலவத்தைகளில் எல்லாக் கருவிகளும் நீங்காது, தலை யாய கருவிகள் நீங்கியதே `அதீதம்` எனப்படுகின்றது. கீழா லவத்தையில் நிகழும் அதீதம் முக்குண வடிவான பிரகிருதி மேம் பட்ட நிலை. மத்தியாலவத்தையில் நிகழும் அதீதத்திலும் சிவ தத்துவமும், கால தத்துவமும் ஒடுங்காதே நிற்க, உயிருக்குப் புலன்கள் மிக்கு நிகழும். இதுவும் அதீதமேயாகும். இவ்விரண்டும் சகலாதீதமாகும்.
சருவ சங்கார காலத்தில் இறைவன் எல்லாக்கருவிகளையும் அழித்துவிட்டு, உயிர்களுக்கு முழு ஒய்வைத் தருதலால், அது பொழுது உயிர், உணர்வு சிறிதுமின்றி, முழுமூடமாய், ஆணவ இருளில் மூழ்கிக் கிடக்கும். இது கேவலாதீதமாகும். இதனையே `விஞ்ஞான கேவலம்` என்பர். இந்நிலையில், ஒடுக்கிய உயிர்களை இறைவன் மீளத் தோற்றுவிக்க முயலும் நிலையும் கேவலந்தான். அதனையும் `சகல கேவலம்` - என்றே கூறுவர். அதற்குக் காரணம் அந் நிலையில் இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்வான் என்பதே. இவை முதலான அவத்தைகள் பலவற்றுள் ஒன்றும் இல்லாது ஆன்மா ஆணவ இருளில் மூழ்கிக் கிடந்த நிலை அனாதி கேவலமாகும். இதனை, `மருட் கேவலம்` - என்பர். இவற்றுள் இரு சகலாதீதத்திற்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான கேவலத்தையே, `அதீதாதீதமாகிய கேவலத்தில் கேவலம்` என்றார். அதீதாதீதம் - அப்பாலைக்கு அப்பால்.
மேற்கூறியவாறு இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்யும் நிலையாகிய சகல கேவலமே கேவலத்தில் சகலமாம். சூக்கும ஐந் தொழிலாவது சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும் தோற்று விக்கும் முகத்தால் உயிர்கட்கு உணர்வைப் பொதுவாக நிகழ்வித்தல். சிவதத்துவங்கள், வித்தியா தத்துவங்களைச் செலுத்தியவழியே உயிர் கட்கு அறிவு இச்சை செயல்கள் சிறப்பாக விளங்கும். அஃது இந்நிலை -யில் இல்லாமையாலும், நால்வகை வாக்குக்களும் சுத்த மாயையில் காரியமேயாதலாலும், `கேவலத்தில் சகலங்கள் வயிந் தவம்` என்றார். வயிந்தவம் (வைந்தவம்) - விந்துவின் காரியம். விந்து- சுத்த மாயை. வாக்குக்கள் பலவாதலால் அவற்றால் தோன்றும் உணர்வுகளும் பலவாதல் பற்றிச் `சகலங்கள்` எனப் பன்மையாகக் கூறினார்.
சகலரும், பிரளயாகலரும், `விஞ்ஞானகலர்` என்னும் நிலையை அடைதலே, கேவலத்தில் சுத்தமாகும். அஃதாவது` சகலர் மண் ணாதி கலையந்தம் முப்பத்தொரு தத்துவங்களைக் கடந்து சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலும், பிரளயாகலர் வித்தியா தத்துவங் -களைக் கடந்து, சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலுமாம்.
இந்நிலையை அடைந்த பிரளயாகலர் சகலர்கட்கும் இறைவன் இயற்கை விஞ்ஞானகலர்க்குப் பக்குவ காலத்தில் உள்நின்றே ஞானத்தை உணர்த்தி, வீடு தந்தருள்வது போலவே அருள்தருவான்.

English Meaning:

Kevala-in-Kevala is atita-atita state,
Kevala-Sakala is the Vaindava manifestations in Suddha Maya State;
Kevala-Suddha is the State of holy Vijanankalas,
That State leads Soul to Grace Embodied.

பாடல் எண்: 2251

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. 25

தமிழ் விளக்கம்:

மத்தியாலவத்தையில் நிகழும் அதீதமே சகலத்திற் கேவலமாகும். மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரமே சகலத்திற் சகலமாகும். சகலத்தில் சுத்தாவத்தையே சகலத்தில் சுத்தமாகும்.

English Meaning:

Sakala-Kevala is the Jagrat-atita State;
Sakala-Sakala is the Jagrat-within-Jagrat State
Sakala-Suddha is the State of Tat-para (self-illumined)
All these in the state of Sakala occur.

பாடல் எண்: 2252

சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. 26

தமிழ் விளக்கம்:

பரமசிவனோடு இரண்டறக் கலந்த நிலையே சுத்தத்தில் சுத்தம். சீவன் முத்தி நிலையில் பிராரத்தத்தால் விளையும் இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பற்றிருக்கும் நிலையே சுத்தத்தில் கேவலம். சீவன் முத்தி நிலையில் உலகர்பால் இரக்கம் மிக்கு அவர்கட்கு உய்தியை வலிந்து சென்றும் உணர்வித்தலும், அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி இவைகளை அடைந்து அவ்வந் நிலையில் விளையும் சுத்த போகங்களை நுகர்தலும் சுத்தத்தில் சகலம்.

English Meaning:

Suddha-Kevala is State of Upasantha
Suddha-Sakala is Turiya expansive state;
Suddha-Suddha is State of Siva-Becoming;
These three belong to Suddha State.

பாடல் எண்: 2253

சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. 27

தமிழ் விளக்கம்:

மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்திலும் சொல்லுலகம் முதலாகச் சொல்லப்படுகின்ற ஐந்து மலங்க ளாகிய பாசங்களே உயிருக்கு உலக அனுபவங்களையே தந்து நிற்கும்.

English Meaning:

Jagrat-In-Jagrat, Dream-in-Jagrat;
Sushupti-in-Jagrat and the Turiya-in-Jagrat,
Transcending these states all,
Is Jagratatita that confers Bliss Divine;
The Malas primordial that five are,
Away vanish ever and ever.

பாடல் எண்: 2254

சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
ஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தை
நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. 28

தமிழ் விளக்கம்:

(`சாக்கிராதீதம்`-என்ற பெயர் சொல்லப்படுவன இரண்டு. ஒன்று ஆணவம் நீங்கிய சாக்கிராதீதம்; மற்றொன்று, ஆணவம் நீங்காத சாக்கிராதீதம்.) அவற்றுள் ஆணவம் நீங்கிய சாக்கிராதீதமும் பராவத்தையில் உயிர் சென்று தங்காதபடி பரோ பாதியை உண்டாக்கும் ஆகையால், பராவத்தையாகிய உபாதியற்ற நிலையை நோக்கியே செல். ஏனெனில், `உபாதியாயினும் பரோபாதி தானே` என நினைப்பனவெல்லாம் பாசத்தோடு கூடியிருக்க நினைப்பனவேயாகும்.

English Meaning:

In the state of Jagratatita
Anava is rooted entire;
Jagratatita, Para-Avasta (Siva) state is not;
But sure it confers Upasantha
That by Para caused;
Will Jiva, thereafter,
Ever look at Malas and Gunas?

பாடல் எண்: 2255

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. 29

தமிழ் விளக்கம்:

`பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற் படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.

English Meaning:

The states of Bondage (Boddha), of Liberation (Mukti)
Of Turiya, and Suddha-atita
--All these, the Jiva will subtle experience;
By Lord\'s Grace they come;
And when that knowledge by Grace dawns,
Neither thought nor action
The Jiva any more has.

பாடல் எண்: 2256

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ டு
எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. 30

தமிழ் விளக்கம்:

உயிர்கள் அனாதியே அடைந்துள்ள பெத்த நிலையும், பின்பு முடிவில் அடையும் முத்தி நிலையும் சிவன் தனக்கு ஒரு விளையாட்டைப் போல மிக எளிதிற் செய்யும் அருட்செயலே யாகும். `அச்செயல்களில் அகப்பட்டு வருகின்ற உயிர்கள், இறுதியில் மாசு நீங்கிய நிலையில் இடப்படும்` என்று சொல்லப்படுவதால், அந்நிலையில் அவை சிவனையே அடைந்திருக்கும். அப்பொழுது அவை அறிவே முடிவாய் இருக்கும்.

English Meaning:

The states of Bondage and Liberation
Of Hara\'s Grace, they come
It is His play
To take Jiva to Suddha goal;
That it might God-Knowledge receive.

பாடல் எண்: 2257

ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 31

தமிழ் விளக்கம்:

ஐந்து மலங்களையுடையவர்களாகச் சொல்லப் படுவோர் யாவரும் அதிகமான மாயைத் தொடக்கு உடையவர்கள். அவர்கள் அசுத்த வினையிலும் நீக்குதற்கரிய தூல வினைத் தொடக்குடையவர்கள். அத்தன்மைத்தான வினைத்தொடக்கால் சுவர்க்க நரகங்களை அடைந்து உழல்பவர்கள். ஆகையால், அவர்கள் சிவனை எளிதில் அறியும் அறிவுடையராவாரோ! `ஆகார்`.

English Meaning:

They of Five Malas are Sakalas,
They of Five Malas are Pasa bound
They of Five Malas rule
The Celestial world of Svarga
They of Five Malas can (ultimate) attain God-Knowledge.

பாடல் எண்: 2258

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்துலம் அந்தன வாமே. 32

தமிழ் விளக்கம்:

(உயிர்கள் யாதானும் ஓர்யோனியிற்புக்குப் பிறந்த பின்பு தான் சாக்கிரம் முதலிய அவத்தைகளை அடையும்` எனக் கருத வேண்டா. அவ்வவ் யோனியிற் புக்கிருக்கும் நிலையிலு ஐந்தவத்தை -களை அடையும். அவை கருவளர் அவத்தைகளாம்.)
வித்தில் நின்ற உயிரை முளையாகிய உடம்போடு முதற்கண் கலக்கச் செய்வதாகிய `காரண சரீரம்`, அல்லது, `ஆனந்தமயகோசம்` எனப்படுகின்ற மாயா தத்துவத்தோடு உயிர்தொடர்பு கொள்வதே கருவினில் துரியாதீதம். பின்பு `கஞ்சுக சரீரம்` அல்லது, `விஞ்ஞானமய கோசம்` - எனப்படுகின்ற, அராகம் முதலிய ஐந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் துரியம். பின்பு, `குணசரீரம்`, அல்லது, `மனோமய கோசம்` எனப்படுகின்ற மூலப் பிரகிருதியோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சுழுத்தி. பின்பு, `சூக்கும சரீரம்`, அல்லது `பிராணமய கோசம்` எனப்படுகின்ற சித்தம் ஒழிந்த அந்தக்கரணம் மூன்று, தன்மாத்திரை ஐந்து ஆக எட்டுத் தத்துவங் களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சொப்பனம். (சித்தம் பிரகிருதியில் அடங்கும்.) பின்பு, `தூல சரீரம்`, அல்லது அன்னமய கோசம்` எனப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மாபூதம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சாக்கிரம்.

English Meaning:

In Jiva\'s Atita State
Anava is;
In Turiya State
Maya permeates;
In Sushupti State,
Are desires for Maya experiences planted;
In Dream State
Functions the Subtle Body with Tattvas eight;
In the Waking State
Activated is the Body Gross.

பாடல் எண்: 2259

ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணும் கனவும் மாமாயை திரோதாயி
காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. 33

தமிழ் விளக்கம்:

துரியாதீத நிலையில் உயிருக்கு ஆணவ மலம் மட்டுமே இருக்கும். அதற்குமேலே உள்ள தான துரிய நிலையில் அதனோடு வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் முதலிலே உள்ள மாயா தத்துவம் வந்து பற்றும். அடுத்து நிகழும் சுழுத்திய வத்தையில் நல்லனவும் தீயனவும் ஆகரிய காரிய கன்மங்கள் வந்து பற்றும். (இதனால், கால தத்துவமும், நியதி தத்துவமும் பற்றுதல் பெறப்படும்) அடுத்து நிகழும் சொப்பனத்தில் மேற்கூறிய கன்மங் களுக்கு ஏற்பமாயா காரியங்களான கலை முதல் நிலம் ஈறான ஏனை எல்லாத் தத்துவங்களும் வந்து பற்றும். (ஆகவே, சுத்த தத்துவங்கள் வந்து பற்றுதலும் தானே அமைந்தது.) இறுதியாக நிகழும் சாக்கிரத்தில், முன்பு நான்கு மலங்களும் பற்றிக்கொண்டதனால் அவை அனைத் -தையும் செலுத்துகின்ற திரோதான மலம் வந்து பற்றும். (என்றது, `அனைத்தையும் முழுமையாக நடத்தும்` என்றபடி.) ஐந்தவத்தை -களிலும் ஐந்து மலங்கள் இம்முறையில் உயிரை வந்து பற்றுவனவாம்.

English Meaning:

In (Kevala) Atita State
Anava is;
In Turiya State
Maya too is;
In Sushupti State
Seed of Karma,
Kamya; an addition is;
In Dream State
Mamaya (Illusory perception) also is;
In Waking State
Tirodayi joins (Obfuscations);
Thus are the Five Malas
To Jiva in Sakala State attached.

பாடல் எண்: 2260

அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோ ர்
அருளும் அறைவார் சகலத்துற் றாரே. 34

தமிழ் விளக்கம்:

`ஆணவம் அதீதத்தில் பற்றும்` என முன் மந்திரத்தில் கூறினமையால், அந்நிலையை மட்டும் உடையராய் அதிலே நிற்பவர்கள், `சிவபெருமான் முதல்வன்` என உணரும் உணர்வை இழவார். (இவர்கள் விஞ்ஞான கலரே.)
`மாயா தத்துவம் துரியத்தில் வந்து பற்றும்` என்றும், `வித்தியா தத்துவங்களில் காலமும், நியதியும் வந்து பற்றும்` என்றும் முன் மந்திரத்தில் கூறினமையால், அந்த இரண்டில் நிற்பவர்களும் மேற் கூறப்பட்டவர்போல, `சிவபெருமானே முதல்வன்` என்னும் உணர்வை இழத்தல் இல்லை. (இவர்கள் இருதிறத்தினரும் தம்முட் சிறிது வேறுபாடுடைய பிரளயாகலரே. இவர்களில் பின்னவர் புருட தத்துவத்திற்குச் சிறப்பு ஏதுவாய் நிற்கும் கலை, வித்தை, அராகங்களைப் பொதுமையாக அன்றிச் சிறப்பாக உடையராகார் என்பது நாயனார் கருத்து - என்க. `கருவில் அதீதம்` என்னும் மந்திரத்திற் கூறியவற்றிற்கும், அடுத்து முன் மந்திரத்திற் கூறிய வற்றிற்கும் சிறிது வேறுபாடு உண்டென்க.)
`கலை முதலிய ஏனை எல்லாத் தத்துவங்களும் சொப்பனத்தில் வந்து பற்றும்` - என்று முன் மந்திரத்தில் கூறப் பட்டமையால், அவர்கள், `தமக்கொரு தலைவன் உளன்` என்பதையே அறியார். இவர்கள் சகல வருக்கத்தினரே.

English Meaning:

The Jiva in Atita State,
Realizes Primal Para;
The Jiva in Turiya stands in Maya (Suddha),
That has its beginning in Hara;
In Sushupti Karma Mala comes in;
In Dream State Mamaya (Asuddha) envelops,
In Waking State comes Tirodayi, that obfuscates
Thus the Jiva in Sakala State stands.

பாடல் எண்: 2261

உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று
மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி
வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. 35

தமிழ் விளக்கம்:

`கருவில் அதீதம்`l என்னும் மந்திரத்திற் கூறியபடி கருவிலேயே பல அவத்தைகளை அடைந்த உயிர், பின்பு பலருங்காணப் பிறந்து, சகலாவத்தையில் பூதம் முதலிய புறக் கருவிகளாலும், மனம் முதலிய அகக் கருவிகளாலும் செய்தற் குரிய செயல்களை மேற்கொண்டு, பல போக்கியப் பொருள்களில் பொருந்தி, ஓசை முதலிய புலன்களில் மூழ்கிப் பலவகை அனுபவங்களை அனுபவிப்பதாய்க் காணப்படும்.

English Meaning:

They get body-form
And experience enjoyments diverse;
They are by elements pervaded
And conjoined to Mind and rest of cognitive organs;
They get attached to Karmas
They abide in Tanmatras
Thus are they born
--these Jivas in Sakala State.

பாடல் எண்: 2262

இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 36

தமிழ் விளக்கம்:

உயிர்கள் தமக்கு இருவினையொப்பு வாய்க்கப் பெற்ற பொழுது சிவனது சத்தி முன்பு பிறவித் துன்பத்தைத் தரும் திரோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, வீட்டின்பத்தைத் தரும் அருட்சத்தியாகித் தங்கள் அறிவில் பதியப் பெற்று, அதனானே மெய்யுணர்வு வேட்கை நிலைத்து நிற்க அவ்வேட்கை மிகுதியால் ஞான குருவை அடைந்து அவர் உபதேசித்த முறைப்படி தம்மைச் சிவனது அருட்சத்தியின் வழிப்படுத்திக் கொண்டு, அதனாலே எல்லா மலங்களும் நீங்கப் பெற்று, மீட்டும் பிறவா நிலையில் நிற்பதே சுத்தாவத்தையாம்.

English Meaning:

They reach the State
When deeds good and bad
Equable become (Iruvinai Oppu);
When Sakti\'s Grace
On them descends (Sathini Padam);
When on the pedestal of Grace
They thus get seated,
Then with the aid of Guru Holy
They reach the Presence of Sakti\'s Grace;
Finally rid of the Primordial Mala (Anava)
They reach the State of Suddha
That no birth thereafter gives.

பாடல் எண்: 2263

ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. 37

தமிழ் விளக்கம்:

முப்பத்தாறாகச் சொல்லப்படுகின்ற கருவிகளே அவத்தை வேறுபாடுகட்குக் காரணம். அந்தக் காரணத்தின்வழிக் காரியமாய் நிகழும் அவத்தைகள் இருபத்தைந்து. (கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் சுத்தம், நின்மலம் ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றிலும் சாக்கிரம் முதலிய ஐந்து.) அந்த இருபத்தைந்தில் முடிவாய் உள்ளது சுத்த துரியாதீதம். அதனை உயிர் அடைந்த பொழுது, ஐந்தொழில் தலைவர்களாகிய ஐவரும் அதனைத் தடை செய்யாது இருக்க, அவ்விடத்து மிக்கு விளங்கும் அருள் ஞான ஒளியினால், அனைத்துயிர்கட்கும் முடிவான புகலிடமாய் உள்ள பரசிவனது பேரின்பம் அதன் அறிவினுள்ளே பொங்கித் ததும்பும்.

English Meaning:

With Tattvas six times six
And Avastas of ten states
He, Jiva, enters the final state
Of Turiyatita,
Then will the Divine Gift be (Mukti);
And Jiva merges into the Light Resplendent;
Which the Five Gods reach;
There, the Siva of Holy Ashes,
Jiva\'s Refuge Final are.

பாடல் எண்: 2264

தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே. 38

தமிழ் விளக்கம்:

சகலாவத்தையில் தன்னை உடம்பின் வேறாக உணராமல், உடம்பையே ``தான்`` என உணர்ந்து நின்றவன், சுத்தா வத்தையை ஓரளவேனும் அடைந்த பின்பே தன்னை உடம்பின் வேறு பட்ட பொருளாக உணர்ந்தான். பின்பு சுத்தத்தில் துரிய நிலையை அடைந்து, சிவனது அருளை உணர்ந்தான். ஆயினும் அதனையும் கடந்த சுத்த துரியாதீதத்தை அடைந்து சிவனை உணர்ந்து அவனோடு இரண்டறக் கலவாது, துரியத்திலேயே அவன் இருந்துவிடுவானாயின், உடம்பு நீங்கிய பின், மீளவேறோர் உடம்பை எடுத்தலும் கூடும்.

English Meaning:

Knowing not the Self,
Jiva deemed body as the Self;
When he saw the Real Self;
He attained Turiya State;
But even in that Turiya State,
If he, Jiva, with Lord united not,
He will again born be, here below.

பாடல் எண்: 2265

சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. 39

தமிழ் விளக்கம்:

புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப் படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,

English Meaning:

If in Waking State
The Jiva realizes the Atita State
The Vaindavas (the Tattvas) that Maya caused
Will their malevolence shed;
The birth\'s whirl will cease;
Goodly Mukti and Siddhi then attained;
Speech and thought cease to be.

பாடல் எண்: 2266

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. 40

தமிழ் விளக்கம்:

`இன்பம், துன்பம்` என்னும் இரண்டும் உலக உணர்வே நிகழும் சகலாவத்தையில் நிலையின்றி, மாறி மாறித் தோன்றும். அகலாவத்தையாகிய சுத்தாவத்தையில் அவை தோன்றவேமாட்டா. `சகலாவத்தையில் அவை தோன்றுதல் ஏன்` எனில், இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் சகலாவத்தை.

English Meaning:

In the void beyond the Atita State,
Sakti (Water) and Siva (Fire) will appear,
Water and Fire do not together in space appear,
How then does Water and Fire in Void appear?
That way are they mingled
Sakti (Water) and Siva (Fire), there.

பாடல் எண்: 2267

அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. 41

தமிழ் விளக்கம்:

முப்பத்தாறு தத்துவங்களில் கீழ் உள் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்களாகும். அவை அவ் வியத்தமாகிய மூலப்பிரகிருதியினின்றும் நோறி ஒடுங்கும். இடையில் உள்ள வித்தியா தத்துவம் ஏழும் மிச்சிர தத்துதவமாகும். அவை அசுத்த மாயையினின்றும் தோன்றி ஓடுங்கும். மேலே உள்ள சிவ தத்துவம் ஐந்தும் சுத்த தத்துவங்களாகும். அவை சுத்த மாயை யினின்றும் தோன்றி ஒடுங்கும். இம் மூவகைத் தத்துவங்களும் மூன்று காண்டங்களாய்ப் பிரிந்து ஆன்மாவோடு கூடி, அதற்கு அறிவிச்சை செயல்கள் நிகழக் கருவிகளாய் நிற்கும்.

English Meaning:

Impure
Of Tattvas,
Six times four are Asuddha (Impure)
Seven are Suddha-Asuddha (Misra or Pure-Impure)
Five with Pure Maya are Suddha (Pure)
These in three divisions are thus parted
As Suddha (Pure), Suddha-Asuddha (Pure-Impure), and Asuddha (Impure)
All these with Jiva at appropriate stages stand.

பாடல் எண்: 2268

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. 42

தமிழ் விளக்கம்:

சிவனே எல்லாம் செய்பவன் ஆகையால், உலக மாகிய மகவிற்கு அவனை, `தந்தை` எனலாம். உலகிற்கு முதற் காரணமான `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளுள் சுத்த மாயையையே சிவன் தான் நேரே பற்றிச் செயற்படுத்துதலால் அதனைச் சிவனோடு புணர்ந்து உலகமாகிய மகவை ஈன்ற, `நற்றாய்` எனலாம்; அசுத்த மாயையைச் சிவன் தான் நேரே பற்றிச் செயற் படுத்தாமல், அனந்த தேவரைக் கொண்டும், அவர்வழியாகச் சீகண்ட உருத்திரரைக் கொண்டும் செயற்படுத்துதலால் அதனை, உலகமாகிய மகவை வளர்க்கும் `செவிலித் தாய்` எனலாம். எனவே, சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு முதற் காரணங்களாலும், சிவனாகிய கருத்தாவினாலும் உலகம் தோன்றி நிலை பெற, உயிர்கள் அவ் வுலகத்தைப் பற்றி நின்று, `சகலம், கேவலம்` என்னும் இருநிலைகளில் மாறி மாறி உழன்று, முடிவில் சிவனது அருளாலே ஞானத்தைப் பெற்று, அவற்றினினின்றும் விடுதலை அடைந்து சுத்த நிலையை அடையும்.

English Meaning:

States Helped by
Siva as Father, Maya (Pure) as Mother and Mamaya (Impure) as Nurse
Parasiva for father;
Maya (Pure) for mother;
Mamaya (Impure) for nurse;
Thus does Jiva
Its birth take,
And journeying the states of Kevala, and Sakala
Final reaches the Suddha State.

← அட்டவணைக்குச் செல்ல