திருமந்திரம்

174. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்

(பாடல்கள் 2299 முதல் 2301 வரை)

பாடல் எண்: 2299

அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. 1

தமிழ் விளக்கம்:

கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பனி -ரண்டில் `அ, உ, ம, விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப் படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாத கலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந் தத்தைத்தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` 3 என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற்குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் - தேக்கிடச் செய்து``8 (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.

English Meaning:

In the Fifth State (Jiva Turiyatita) is Ambrosia;

Above in Ninth State (ParaTuriya-Sushupti) is Aum;
In the Eleventh State (Siva Turiya)
Illumined the Jiva standeth;
Abiding there He the (Divine) Body, attains;
Listen damsel that is red-mouthed as parrot!
--these the attainments of the Higher States (of Jiva) are.

பாடல் எண்: 2300

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. 2

தமிழ் விளக்கம்:

[சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பரா வத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]
புருடதத்துவமும், அதற்குக்கீழேபொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக் கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).

English Meaning:

Even in the Atita Turiya State
Six Tattvas formless abide
--The Purusha cum Chitta, and Five formless Tattvas;
In the Sushupti State of Atita Turiya,
The rest eight are;
Only in the Eleventh State, nothing of Tattvas is.

பாடல் எண்: 2301

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. 3

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபடி சிவாகமங்கள் கூறுகின்ற அந்தத்தானங்கள் பதினொன்றிலும் சென்று நின்றால் உடம்பு விரைவில் அழியாது நெடுங்காலத்திற்கு நிலைபெறும் வகையில் உறுதியடையும். அந்நிலையில் அவ்வுடலில் உள்ள உயிருக்குச் சிவனைத் தவிரத் துணையாவார் வேறு ஒருவரும் இலராவர். (அஃதாவது, `அவ்வுண்மை அவ்வுயிருக்கு நன்கு விளங்கி நிற்கும்` என்பதாம்) அதனால் உனது மனம்போனபடி நீ போய் அலைந்துகொண்டிருந்த அலைவுகளையெல்லாம் விடுத்து அமைதியுற்றிருந்த அந்த அமைதியே வழியாகச் சிவன் தன் அடியார்களோடு கூட்டுதல் உறுதி. இந்த உறுதியும் உனக்கு அந்நிலையில் விளங்குவதாகும்.

English Meaning:

When the eleven States are thus cognised,
And the Jiva fixes firm in the Jnana Body
There is none but Nandi;
That Being Immutable
Contemplate in order;
Sure believe, you can the Goal reach.

← அட்டவணைக்குச் செல்ல