திருமந்திரம்

183. பரலட்சணம்

(பாடல்கள் 2452 முதல் 2465 வரை)

பாடல் எண்: 2452

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1

தமிழ் விளக்கம்:

சிவன் நின்மல துரியாதீதத்தில் ஞேயமாய் வெளிப் பட்டுப் பின்பு அதனையும் நீங்கி நிற்பான். (அஃதாவது, `போக்கியப் பொருளாகாது நிற்பான்` என்றபடி. அவன் போக்கியப் பொருளாதல் பராவத்தைகளிலாம்) அந்நிலையில் உயிர் தற்போதத்தை இழந்து நிற்கும். ஞானத்தைப் பெற்று, அஞ்ஞானத்தினின்றும் நீங்கிய உயிரே, ஒன்றாகிய பதிப்பொருளில் அழுந்தி அதுவாகும். அங்ஙனம் ஆய பொழுது அந்த உயிரே `பரமான்மா` என்னும் பெயரைப் பெறும்.

English Meaning:

Siva Himself
He, Nandi, is within Atita
And Beyond it;
He, Jiva that had Para-Jiva become
Is within Atita
Yet Jnana (Full) without;
The Para Jiva attaining Jnana
And rid of dark Ignorance
Will with God (Pati) One be.

பாடல் எண்: 2453

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. 2

தமிழ் விளக்கம்:

பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் மி நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.

English Meaning:

The Pati (Lord) has
Neither Beginning nor End;
He is Divine Light Resplendent;
He is seen and yet unseen;
Those who attain Jnana
Of that Para
Are Holy indeed.

பாடல் எண்: 2454

துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3

தமிழ் விளக்கம்:

யோகாவத்தையில், அனாகதம், விசுத்தி ஆஞ்ஞை, பிரமரந்திரம், துவாதசாந்தம் என்பன முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகட்குரிய தானங்க -ளாகும். அவற்றுள் துரியத்தானமாகிய பிரமரந்திரத்தையும் கடந்து, அதீதத் தானமாகிய துவாத சாந்தத்தில், அரிதாகிய அம்பலத்தில் பொருந்தி ஆடுபவன் பெரிய பெருமான்; மகாதேவன் அந் நடனத்தைக் காணுதல் பிரணவ கலைகளின் வழியாகவே கூடும் ஆகையால், அவ்வழியால் அக்கூத்தில் அவனைக் காணவல்லவர்க்கு மலக்குற்றங்கள் இல்லையாகும்.

English Meaning:

Pranava
Transcending Turiya
And entering Turiyatita,
Is the endless Void;
There vision the mighty Lord
That dances eternal;
They who can peer
Into the deep well of Pranava (Aum) within,
And glimpse Him
Will no more birth have.

பாடல் எண்: 2455

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4

தமிழ் விளக்கம்:

மாணிக்க மணியின் செந்நிறம் முன் வந்து நின்ற போது, பளிங்கின் வெண்ணிறம் அந்தச் செந்நிறமாகவே திரிந்து காணப்படுதல் போல, வெளிப்பட்டு நின்ற அந்த நிலையான பரம் பொருள் முன்வந்து நின்றபொழுது ஆன்மாத் தன்வண்ணம் அப்பரம்பொருள் வண்ணமேயாக, அதனுள் அடங்கி நிற்கும் அப்பொழுது அதுகாறும் நிலையற்ற பிரபஞ்சத்தை நுகர்ந்து வந்த ஆன்ம ஞானம் பாச ஞானமாய் இருந்த நிலை அற்றொழியும். அவ்வொழிவில் சிவம் மேருமலையாய் நிற்க. ஆன்மா அந்த மேருமலையை அடுத்த காக்கையாய் இருக்கும்.

English Meaning:

In contact with color red
White, too, becomes red;
Unto it it is,
When Jiva purified (white)
Reaches Siva (that is red);
In Jnana\'s Void
That absorbs universes so unreal,
Siva stands high aloft
As a flag planted on Meru Mountain top.

பாடல் எண்: 2456

வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. 5

தமிழ் விளக்கம்:

எனக்குக் குருவாகிய நந்திபெருமான் சிவபெருமானால் எனக்கென என்னோடு கூட்டி வைத்த கலை முதல் நிலம் ஈறாக வருகின்ற தத்துவங்கள் எல்லாம் தம்தன்மை கெட்டுச் சிவ கரணங்களாகும் படியும், பின்பு அத்தத்துவங்கட்கு முதலாகிய அசுத்தமாயை. அதன் காரியங்களைச் செலுத்தி நிற்கின்ற கருவிகட்கு முதலாகிய சுத்தமாயை ஆகிய துன்பத்தைத் தரும் இருமாயைகளும் என்னைப் பொறுத்த மட்டில் காரண மாதற்றன்மை அடியோடு கெடும்படியும் செய்து, அதனால், யான் தடத்தசிவத்திற்கு மேலேயுள்ள சொரூபசிவத்தைத் தலைப்படும்படி. `இனியும் பிறவி வருமோ` என்னும் அச்சம் நிகழாதவாறு என்னை ஆட்கொண்டருளினார்.

English Meaning:

Faded have they,
Kalas and other Tattvas (below);
Sundered were they,
The Mayas two, left behind;
And after taking me into the baptismal font of Jnana,
He made me in Him unite;
Dispelling my fears
He accepted me in His Grace,
He, Nandi Holy.

பாடல் எண்: 2457

என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே. 6

தமிழ் விளக்கம்:

எனக்குக் குருவாகிய நந்திபெருமான், முதலில் என்னை யான் அறியுமாறு அறிவித்தருளினார். (கருவிக் கூட்டத்தி -னின்றும் என்னை வேறாக யான் உணரும்படி செய்தார்.) அதனால், என்னை யான் அறிந்தபின்பு, என்னையான் அறியாது நிற்கின்ற ஓர் இடத்திலே என்னைச் செலுத்தினார். (சிவபோத மிகுதியால் சீவ போதம் தோன்றாது நிற்கின்ற திருவருள் நிலையிலே செலுத்தினார்.) பின்னர் அங்ஙனம் நின்ற அந்த ஒளியினாலே அவ்வொளிக்கு முதலாகிய பொருள் புலப்பட்டது. புலப்பட்டபின் யான் அந்த மேலான பொருளே ஆகும்படி அதனை என் கைக்குள் வருமாறு அளித்தார்.

English Meaning:

Realize the Self,
--So taught my Nandi;
When I realized the Self,
He placed me in place where the Self is unknown;
There the Light-Form arose,
And He granted me Himself,
Tat-Para I became.

பாடல் எண்: 2458

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. 7

தமிழ் விளக்கம்:

சிவன்,
``நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலாப், பகலோன்,
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்``3
எனவும்,
``இருநிலனாய்த், தீயாகி, நீரு மாகி,
இயமான னாய், எறியும் காற்றா மாகி,
அருநிலைய திங்களாய், ஞாயி றாகி,
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி
... ... ... எம்மடிகள் நின்ற வாறே``l
எனவும் அருளிச் செய்தவாறு, ஐம்பெரும்பூதங்களும், `ஞாயிறு` திங்கள், என்னும் இரு சுடர்களும், ஆன்மாவும் ஆகிய எட்டினையும் தனக்குத் திருமேனியாகும்படி அவைகளில் வேறின்றிக் கலந்து நிற்கின்றான்.

English Meaning:

Expanding and contracting,
Earth, water, space and wind,
Sun and Moon,
Pervasive and immanent,
Hara stood;
Supporting the firmament vast.

பாடல் எண்: 2459

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. 8

தமிழ் விளக்கம்:

`தத்` பதப் பொருளாகிய சிவன், தனது உண்மை நிலையில் உள்ள பொழுது அவனின் வேறாகாது அவனோடு ஒன்றாகியே நிற்கும் சத்தியும், `பரை` என நிற்கும். அஃதாவது யாதொன்றனையும் பற்றாது, தான் தனியே மேலானதாய் நிற்கும் என்பதாம். ``சத்தியும்`` என்னும் உம்மையால், சத்தியையுடைய சத்திமானாகிய சிவனும் அப்பொழுது `பரன்` என நிற்றல் பெறப்பட்டது. `பரசிவனாய் நிற்பன்` என்க. அந்தச் சத்தியே சிவனுக்கு வடிவம். என்றது, `சிவம் சத்தியே மயமானது` என்றபடி. இனி அந்தச் சத்தி, அருள் காரணமாக உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலாகிய நாடகத்தை மேற்கொண்டு செய்யும் பொழுது, தன்னிச்சையாகவே இச்சை, ஞானம், கிரியை முதலிய வகைகளாய்ப் பலவாகி, அவ்வைந் தொழிலை இடையறாது நடத்தும்.

English Meaning:

From Sat (Siva) arose of Herself, Sakti,
In that State She as Tat-Parai stands;
In the Ichcha (Desire) State
She Para\'s Form materiality is;
Then Jnana Sakti and other forms
She assumes;
Thus acting in love surpassing
She daily, daily moves this world.

பாடல் எண்: 2460

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே. 9

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்தில் கூறிய சத்தி மேல், கீழ், புடை என்னும் இடங்களையும், மெய், வாய், கண், நா, மூக்கு என்னும் ஐம் பொறிகளையும், விந்து, நாதம், பர நாதம் என்னும் வாக்குகளையும், அவைகட்குப் பற்றுக் கோடாய் நின்று அவற்றின் பெயர்களையே தாமும் பெற்று நிற்கின்ற சுத்த தத்துவங்களையும் இங்ஙனம் பாகுபட்ட பல பொருள்களை உண்டாக்கி அவற்றால் எல்லாம் சரியை முதலிய நான்கினாலும் ஞானத்தை வருவித்து, இவ்வாறெல்லாம் அஞ் ஞானத்திற் கிடக்கின்ற உயிர்களை ஈடேற்றுதலாகிய செயல்களை உடையதாய் நிற்கும்.

English Meaning:

From within Parai
Expanded Bindu Sakti;
From above descending, to here below,
It imparted sentience to the cognitive Organs four,
--This the story of Jivas,
That inherent no sentience has.

பாடல் எண்: 2461

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. 10

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்தில், `அணு` எனக் கூறப்பட்ட உயிரின் தன்மை தனியானது. ஆகவே, காணப்படாது நிற்கின்ற அந்த உயிருக்குக் காணப்படுகின்ற இந்த உடம்பில் உள்ள ஆறு அத்துவாக் -களும் உபாதிகளேயாம். அஃதாவது, அதனை மாசுபடுத்துகின்ற வேற்றுப் பொருள்களேயாம். அதனால், முப்பத்தாறு தத்துவங்களும் உயிர் தான் பெறுதற்குரிய மேலான ஒளியை அடைதற்குத் தூண்டு கின்ற சிறிய ஒளியாய் உதவுவதால், மாயையாலே உயிர் உறுதல், உயிர்த்தல், உண்டல் முதலியவைகளைச் செய்து, பின் அதிலிருந்து நீங்கியும் நிற்கும்.

English Meaning:

Then separate arose Maya from Parai
And the Caused Tattvas and experiences six
The body is an heir to;
Feeling, breathing, eating, and sleeping
Are all enjoyments that Maya gives;
She is the little light within,
That kindles the Great Light to reach.

பாடல் எண்: 2462

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. 11

தமிழ் விளக்கம்:

`தத்` பதப் பொருளாகிய பதி, தன்னிலையில், நிலையான ஒப்பற்ற, முதன்மை வாய்ந்த பேரறிவே எனினும், அதுவே உயிர்களை நோக்கி இயங்கும் பொதுநிலையில் உயிர்களை உலகத்தை நுகரும்படி செய்கின்ற பாச அறிவாய் நிற்கும். (`திரோதான சத்தியாய் நிற்கும்` என்றாம். ) அந்தப் பாச அறிவால் உயிர் உலகத்தை நுகர்ந்து வருங்காலத்தில் அந்தப் பாச அறிவும், அதன் அறிவாகிய பசு அறிவும் நீங்கப் பெற்ற பொழுது, முன்சொன்ன பேரொளியிற்கலந்து, அதற்கு அப்பாலும்போய், முன்னை நிலையெல்லாம் நீங்கப்பெற்று நிற்கும். அப்பொழுது அதற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லாத ஓர் உயர்வை அஃது அடையும்.

English Meaning:

The Primal Lord that is Tat-Para
Is Light Resplendent
He is Chit-Para, (Divine Jnana filled)
He is the Divine Sentience
That engrosses universe;
Enter in the Splendorous Light,
In the Void that is beyond words,
No more is there anything to compare.

பாடல் எண்: 2463

பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. 12

தமிழ் விளக்கம்:

முதல் நூல்களாகிய வேதாகமங்கள், சில இடங்களில் சுத்த மாயையை, `சிவனுக்குத் திருமேனி` எனக் கூறும். அஃது உபசாரமே.
[``சுத்ததத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவ மாகும்;
நித்தம்என் றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே``*
என்னும் சிவஞான சித்தியையும், அதன் உரையையும் காண்க.] ஏனெனில், சிவன் துரியத்தையும் கடந்து அதீதமூர்த்தி. (நின்மல துரியம் வரையிலே சுத்தமாயை உள்ளது) தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஆகியவற்றைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற்ற ஆன்மாவும் சிவ தரிசன சிவயோகங்களால் ஆன்ம சுத்தியை எய்தாது, காரணோபாதி யாகிய சுத்தமாயையில் இருப்பானாயின் அவனது நிலையை நன்கு ஆராயுமிடத்து அவன் தூய்மை எய்தியவன் ஆகான்.

English Meaning:

The hoary scriptures say,
The expanding Space is His Body;
He wears the crescent moon;
Even after reaching the Turiyatita State,
If Jiva a victim to Causal Experiences (of Suddha Maya) falls.
He will Suddha (Pure) per se not be,
When you ask me.

பாடல் எண்: 2464

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே. 13

தமிழ் விளக்கம்:

`மாயா காரியமாகிய உலகப்பொருள் அனைத்திலுமே பரமசிவன் அருள் காரணமாக நிறைந்திருக்கின்றான்` என வேதாகமங்கள் கூறும். அவ்வாறு கூறுவதற்கும், `அவனது சத்தியே அவ்வாறு நிறைந்துள்ளது` என்பதே கருத்து. பூதாகாயம் ஏனைப் பூதங்களில் எல்லாம் நிறைந்திருத்தல் போல அனைத்துலகங் களிலும் நிறைந்திருத்தல் பற்றி அச்சத்தி, `பரவெளி - பராகாயம்` எனக் கூறப்படுகின்றது. அந்தச்சத்தியே, உண்மையில் பரமனுக்கு திருமேனியாகும்.

English Meaning:

Space, air, fire, water and earth
He pervasive fills
He is Tat-Para of love infinite;
Sakti that is manifested
In space, air, fire, water and earth
Is but of His Form Divine.

பாடல் எண்: 2465

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14

தமிழ் விளக்கம்:

இடைகலை பிங்கலைகளை, `சந்திர சூரியர் வழி` எனக் கூறுதலால், அவ்வழியாக இயங்கும் பிராண வாயும் வலம் வரும் சுழுமுனை நாடியை, `மகாமேரு` என்றலும், அந்தச் சுழுமுனை நாடியின் நடுப் பாகமாகிய அநாகத விசுத்தி ஆதாரங்களை, `சூரிய மண்டலம்` என்றலும் யோக நூல் வழக்கு. அனாகதமாகிய இருதயம் பூசைத் தானமாகக் கொள்ளப்படும். அதனால், சுழுமுனை வழியாகச் சென்று இருதயத்தில் சிவபெருமானை நன்றாக நினைந்து வழிபடு பவனை, `மேருவினோடே சென்று விரிகதிர் மண்டிலத்தில் (சிவனை) ஆரநினையும் அருந்தவயோகி` (`சென்று`) என ஒரு சொல் வருவித்து, `விரிகதிர் மண்டிலத்தில்` என உருபு விரித்து கொள்க.) ``செய்யின்`` என்பது `செய்வதனால்` எனப் பொருள்தந்து நின்றது. ஆகவே, `அந்த அருந்தவ யோகிக்குச் சிவனருள் தானாகவே கிடைக்கும்` என்றும், `அவன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் வேறொன்றும் இல்லை யாகையால் அந்நெறியைவிட்டு அவன் விலகுதல் வேண்டா` என்றும் கூறினார்.

English Meaning:

To the Yogis of intense Tapas,
Contemplating on Mystic Meru Mount
In the radiant Sphere within,
In their rare Tapas
Siva\'s Grace, of itself, appears;
Move not from this way;
There is none other too.

← அட்டவணைக்குச் செல்ல