திருமந்திரம்

189. முப்பாழ்

(பாடல்கள் 2495 முதல் 2500 வரை)

பாடல் எண்: 2495

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1

தமிழ் விளக்கம்:

காரிய தத்துவங்களாகிய தூல உடம்பு, தூல பூதம், சூக்கும பூதம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகிய ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு நீங்கிய நிலை `போதப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை உளதாகிய சுத்த தத்துவங்களையும் வேறாகக் கண்டு கடந்த நிலை `உபசாந்தம்` எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும் நீங்கிய வீட்டு நிலையாம்.

English Meaning:

Experiencing the seven Caused States
The Maya Void is left behind;
Experiencing the seven Causal States
The Bodha Void is left behind;
Experiencing and sundering the Cause-Caused States (above)
The Upasanta Void is left behind;
Then alone is End Finale.

பாடல் எண்: 2496

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2

தமிழ் விளக்கம்:

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட மற்றும் அவையே, `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

English Meaning:

The Maya Void is of Jiva;
The Bodha (Vyoma) Void is of Para;
The Upasanta Void (Vyapta) is
Where Jiva one with Siva-Sakti is;
All three Voids are of Pure Manifestness (Svarupa)
--the end of Tvam-Tat-Asi That is Tat-Tvam-Asi.

பாடல் எண்: 2497

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3

தமிழ் விளக்கம்:

`என்றும் தன்னோடு ஒப்பார் இன்றி ஆனேற்றையே ஊர்தியாக உவந்து ஏறி உலாவுகின்ற சிவன் ஒருவனே பதி; ஏனையோர் யாவரும் பசுக்களே எனத் துணிந்து அவனது திருவடியை அடைய வேண்டி, முன்னர், `இதுவே கதி`, எனக் கருதிய மூன்று பாழ்களையும் கடந்து முன் கருதிய கருது கோள்களையெல்லாம் உதறித்தள்ளி, அவற்றையெல்லாம் கடந்த வேறொரு தனிப் பாழில் இப்பொழுது நான் அடங்கியிருக்கின்றேன்.

English Meaning:

Of Himself, daily,
Nandi that rides the bull
Blesses you,
With impediment none;
And when I reach His Feet,
I cross the Void,
And in that Void
That imagination transcends
I merge.

பாடல் எண்: 2498

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4

தமிழ் விளக்கம்:

முப்பாழையும் கடந்த, சொல்லற்ற நிலையாம் சொரூபமாகிய உண்மையை, அறியாதார் சிலர், `அஃது உயிர்களால் என்றும் அடையப்படாத மிக மேலேயுள்ள நிலை` எனக் கூறுவர். (உயிர்களால் என்றுமே அடையப்படாது எனின், `அத்தன்மையதாகிய ஒருபொருள் உண்டு` என்பதே பெறப்படாது முயற்கோடு, ஆகாயத் தாமரை முதலியனபோல அதுவும் வெறும் கற்பனைப் பொருளாய் விடும். மிக மேலானதேயானும் ஆதலின்) அஃது என்றுமே உயிர்களால் அடையப்படாதது அன்று; செயற்கரிய சாதனைகளைச் செய்தவழிக் கிடைக்கின்ற ஓர் அரிய இடமேயாம். இவ்வுண்மையை அறிந்து, அவ்வாற்றால் அதனை அடைய முயல்பவர் எத்துணைப் பேர்? ஒரு சிலரேயாவர்.

English Meaning:

That Void where Turiyas merge
Defies description
They call it Paramparam;
Thus they say who know not;
As Paramparam they worship it;
Who knows, what wondrous Land it is!

பாடல் எண்: 2499

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5

தமிழ் விளக்கம்:

`மெய்ப் பொருளை அருளாசிரியர் பக்குவம் வாய்ந்தவர்கட்கு உபதேசிக்கும் உபதேச மொழி, `சிவாய நம` என்னும் மந்திரமே என்பதைச் சைவப் பெருமக்களன்றிப் பிறர் தெளிய மாட்டாராயினும் சைவப் பெருமக்கள் அதனைத் தெளிந்து அதன் உண்மையை ஆராயுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களும் தம்மின் வேறாகி நீங்கிய பொழுது அந்த ஐந்தெழுத்தில் பாசத்திற்கு வழியாகிய `நம` என்பதை நீக்கி, முன்பு நகரத்தின் பொருளாய்த் திரோதானமாய் இருந்த சத்தி வேறுபட்டு அருட்சத்தியாய் வகாரத்தின் பொருளாகி, யகாரத்தின் பொருளாகிய ஆன்மாவை, யகாரம் நீங்கிய இரண் டெழுத்தில் ஈற்றெழுத்தாகிய வகாரம், முதலெழுத்தாகிய சிகாரத்தின் பொருளாகிய உண்மைச் சிவத்தில் பின் என்றும் நீங்காதவாறு சேர்ப்ப தாகவே யன்றோ உணரப்படும்! `பிறிதாக ஒன்றும் உணரப்படாது` என்பதாம்.

English Meaning:

The Tattvas six times six left,
And Malas, Anava and Maya devoid,
Denoted by letters 'Na' and 'Ma'--
Parai to Jiva ('Ya') Her Grace granting,
Into Paran ('Va' Sakti and 'Si' Siva) makes it merge,
That indeed is 'Si Va Ya Na Ma' (the Five-letter mantra).

பாடல் எண்: 2500

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6

தமிழ் விளக்கம்:

`உயிர் உடம்பே; உடம்பே உயிர்` என இவ்வாறு உயிரின் இயல்பை மயங்கி உணர்ந்து, அந்நெறியிலே தங்கள் ஆராய்ச்சியைச் செலுத்தபவர்கட்கு உயிர் இல்பொருளேயாம். உயிர் இல்பொருளாயினமையின், உடம்பின் தன்மையை அவர் உணர்ந்ததும் உணராமையேயாம். ஆகவே, அவர்கட்கு இங்குக் கூறி வந்த இருட்குழியாகிய தத்துவச் சிக்கலும் இல்லை; அக்குழியினின்றும் ஏறும் கரையாகிய முப்பாழும் இல்லை. அவற்றைக் கடந்த வேறு வெளியாகிய பரநிலையும் இல்லை.

English Meaning:

For them who realized Truth
That Thought is Form and Form is Thought,
For them is no descent, no ascent, no Void.
Neither Thought, nor Form.

← அட்டவணைக்குச் செல்ல