திருமந்திரம்

20. அக்கினி காரியம்

(பாடல்கள் 214 முதல் 223 வரை)

பாடல் எண்: 214

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 1

தமிழ் விளக்கம்:

சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.

English Meaning:

Riches from obloquy free, the spreading sky and earth,
The directions all, and the godly hosts who there hold sway,
All flourish in Victory\'s wake when Brahmins true,
With Vedas commencing, pursue the sacrificial way.

பாடல் எண்: 215

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே. 2

தமிழ் விளக்கம்:

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.

English Meaning:

The Vedic Brahmins who holy sacrifices perform,
On Salvation intent, give before they eat;
Even as in knowledge true, supreme they stand,
So in conduct they lead--to the One Goal headed straight.

பாடல் எண்: 216

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 3

தமிழ் விளக்கம்:

உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.

English Meaning:

They who invoke our Lord--the Fire within the Fire,
The Brahmins true are they and our goodly support;
Who, night and day, raise the Sacrificial flame
Guiding us along the pure Path to our heavenly port.

பாடல் எண்: 217

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 4

தமிழ் விளக்கம்:

இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

English Meaning:

Morn and eve, when in devotion rapt they chant,
The two damsels (Gayatri and Savitri) with them in smiling grace stand;
Then do the two birds of one seed sprung
Karmas, good and bad, fluttering, in haste depart.

பாடல் எண்: 218

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே. 5

தமிழ் விளக்கம்:

நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.

English Meaning:

They who know in the sacrificial ghee\'s steady flame,
All dark things are for ever consumed;
They also know when from Karma\'s hold we\'re freed,
That day is our day of abiding wealth,
The holy Fire\'s truest meed.

பாடல் எண்: 219

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. 6

தமிழ் விளக்கம்:

ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.

English Meaning:

All sins fly like wick fast consumed in flame,
All diseases fade that Karma brings in its wake;
They fade and fall in the rising sacrificial fire.
And all evils are scorched that our Karmas make.

பாடல் எண்: 220

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே. 7

தமிழ் விளக்கம்:

மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து நும் அருஞ் செல்வ மாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.

English Meaning:

Firmly holding that vast riches are a grievous curse,
They hungered for the Lord who to us richest treasure gave;
Hoping and dreaming they waited for the immortal prize,
All sacrifices performed, the undying wealth to achieve.

பாடல் எண்: 221

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே. 8

தமிழ் விளக்கம்:

எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப் பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர் களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.

English Meaning:

The Pure Flame is He, the immortal Lord is He,
The Radiant Flame who in my heart\'s core resides;
The Lord whose eyes are the Three Fires,
Who the Seven Worlds transcends,
The Lord of Homa\'s Cool Flame, and my heart\'s King besides.

பாடல் எண்: 222

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 9

தமிழ் விளக்கம்:

வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

English Meaning:

Inside the Fire of the Homa is my Lord,
Inside too is He seated in the flame of the funeral pyre;
The Fire of Homa which scorches Karma\'s surging sea,
The Fire, that the mighty Churner in the sea begot, still abides.

பாடல் எண்: 223

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 10

தமிழ் விளக்கம்:

வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

English Meaning:

In true penance striving, to Vedic rites conforming
They, who everywhere raise the sacrificial flame,
Tireless, unsparing in kindling the Holy Fire--
Theirs the true flame eternal, theirs the undying name.

← அட்டவணைக்குச் செல்ல