திருமந்திரம்

201. ஞானி செயல்

(பாடல்கள் 2610 முதல் 2612 வரை)

பாடல் எண்: 2610

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 1.

தமிழ் விளக்கம்:

தம்மை நன்குணர்ந்தபின் தலைவனையும் உள்ளவாறு அறிந்தவரே (சிவஞானபோதம் - அவையடக்கம்) உண்மைத் தத்துவஞானிகள். அவர்கள் பிராரத்த வினைதோன்றினால், `இது நாம் முகந்துகொண்டு வந்தது, இதனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்` என்று உணர்ந்து அதன் பயனாகிய இன்பத்தில் விருப்பமும், துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் கடன்கழிப்பார்போலப் பற்றற்றே ஐம்புலன்களை நுகருமாற்றால் அவ்வினையினின்றும் நீங்குவர். (பற்றுச்செய்யா மையால் அவ்வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல். உடலையே தாக்கி ஒழியும்) விருப்பு வெறுப்பு இன்மையால் இன்பத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், துன்பத்தை விரைவில் ஒழிக்கவும் அவர்கள் எண்ணமையால், அவர்கள் ஆகாமிய வினையில் வீழ்தல் இல்லை. அதன் தோற்றத்தை நிகழாதபடி தடுத்து விடுவார்கள்.

English Meaning:

If Karma from past
Overtakes them,
They exterminate them,
Patiently experiencing them;
But they see,
Future Karma is created not;
They realize the Self,
They are Jnanis,
That have Tattvas cognised;
They train senses five,
In ways goodly.

பாடல் எண்: 2611

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே. 2.

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்திற் கூறிய அந்த ஞானிகள், அம் மந்திரத்தில் கூறியபடி தாங்கள் வினையினின்று நீங்குதலோ டல்லாமல், தங்களைச் சிவமாகக் கருதி வந்து அடைந்தவர்களது வினைகளையும் சிவனது திருவருள் வியாபகத்தில் நின்று நீங்கியருள்வார்கள்.

English Meaning:

The Tattva Jnanis realize the Self;
The Gordian knot of Karma Past
They cut asunder;
Future Karmas they seize and crush,
By Grace of Siva,
Whom they hold,
High on their heads.

பாடல் எண்: 2612

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. 3

தமிழ் விளக்கம்:

உயிர்களின் மனமும், வாக்கும், காயமும் நேர்முறையில் செயற்படாது, கோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்கு, நீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றி, நேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானமுடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையிற் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கிமெய்ஞ்ஞானத்தைப்பெற்று, மனோ வாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும், பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தினால், அவன், `ஞானி` என்னும் நிலையினின்று நீங்கான்.

English Meaning:

Through thought, word and deed
Karmas accumulate;
If thought and word consistent stand
Karma bides not;
Thought and word conquering,
They experience Karmas,
And alter their course,
They the great Jnanis are.

← அட்டவணைக்குச் செல்ல