திருமந்திரம்

7. திருமந்திரத் தொகைச் சிறப்பு

(பாடல்கள் 99 முதல் 100 வரை)

பாடல் எண்: 99

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1

தமிழ் விளக்கம்:

மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

English Meaning:

Three Thousand Holy Hymns, Mula in Tamil composed,
Did He, Nandi, reveal for all the world to know,
Wake early at dawn and pour forth the strains
Surely you\'ll win the splendid soft repose
Of the Bosom of the Lord.

பாடல் எண்: 100

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2

தமிழ் விளக்கம்:

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

English Meaning:

In the Holy Three Thousand is the Salvation Finale
Of the diverse works, true and good;
In the Divine Three Thousand, original and wise,
All knowledge is, special and general.

← அட்டவணைக்குச் செல்ல