திருமந்திரம்

85. பூரண சக்தி

(பாடல்கள் 1125 முதல் 1154 வரை)

பாடல் எண்: 1125

அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. 1

தமிழ் விளக்கம்:

சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின்கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.

English Meaning:

I measured the limits of space,
Its beginning and end;
I measured the men and women
In spaces everywhere;
I measured the Primal Lord
Of spaces Vast;
I measured His Grace in devotion
And knew all.

பாடல் எண்: 1126

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. 2

தமிழ் விளக்கம்:

பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனைக் கும்பிப்பதே.

English Meaning:

They know this not;
That Sakti Primordial espoused Siva
And together Perfection are;
She bestows Her Grace
On Her devotees;
She, the Virgin Eternal;
Meditate on Her in Muladhara, where She is
Success indeed shall be
Your yogic feat in breath control.

பாடல் எண்: 1127

கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. 3

தமிழ் விளக்கம்:

மத்தகத்தை யுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.

English Meaning:

The massive elephants five (Indriyas)
The mahout with the goad (Jiva)
The Lord of many splendoured crown (Siva)
Who in the fragrant (Blossom) appears, (Sahasrara)
And the Lady who with Him is in rapturous union,
All in one love-union for ever merged.

பாடல் எண்: 1128

இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. 4

தமிழ் விளக்கம்:

எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப் பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.

English Meaning:

In the rapture of that union
My Father enters in love subtle;
In Misery\'s broth of harassing Pasa,
My Mother Para Sakti
To the very marrow enters.

பாடல் எண்: 1129

என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்Yயும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. 5

தமிழ் விளக்கம்:

உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ் விடத்தே உளனாவன். இனி, `அத் தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.

English Meaning:

Cease talking of 'my mother', 'my father'
In possessive way of this world;
Your Mother and the timeless Father
Are there in union;
As your unerring guide for you Here-after;
Nandi verily stood,
As Mother and Father in one.

பாடல் எண்: 1130

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. 6

தமிழ் விளக்கம்:

காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின்மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.

English Meaning:

On the lovely lotus
That blossoms in cool waters
Is the Four-Headed God;
The years vouchsafed by Him here below
Are no more than a hundred;
The Lady of Jnana seated on blossom appeared;
She is the Mistress of Words, abiding in the tongue
Now it is Her command (how long you live).

பாடல் எண்: 1131

ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தானதனன் தானே. 7

தமிழ் விளக்கம்:

திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.

English Meaning:

Untroubled by Anava ways,
Inward looking,
Steadying the wavering mind,
Centering it on high,
Thus when they realize praiseworthy Para
They and He for ever one become.

பாடல் எண்: 1132

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானோர் எழுந்து மதியை விளக்கினள்
தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே. 8

தமிழ் விளக்கம்:

உயிர்களின் முயற்சியாலன்றித்தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச்செய்தாள். இனி, இனிமையைத் தருவ தாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.

English Meaning:

Of Herself She arose
This Mistress of Tattvas,
And illumined the Moon
In the astral sphere within;
Unto a column of treacle
The light of Kundalini bright rises,
Know you, where that Fawn dances!

பாடல் எண்: 1133

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பிரியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. 9

தமிழ் விளக்கம்:

அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.

English Meaning:

In the five senses of Mayaic knowledge,
When Grace of Sakti of True Knowledge enters,
They know the Jnana
That forever abide;
In the thoughts of those
Who intense cherish Her,
She abides for sure.

பாடல் எண்: 1134

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. 10

தமிழ் விளக்கம்:

`இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தி யையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.

English Meaning:

In the spaces vast
Where neither night nor day is,
She of fragrant tresses is;
Seek Her;
And in silentness with Grace slumber,
You shall for ever youthful be
Transcending time and age.

பாடல் எண்: 1135

பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. 11

தமிழ் விளக்கம்:

`முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.

English Meaning:

Youthful forever you shall be;
Transcending Bindu and Nada
That approach Her not,
You shall one with Para Sakti be;
And reach the Mukti State Finale,
She, the Tatparai,
All Grace confers.

பாடல் எண்: 1136

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 12

தமிழ் விளக்கம்:

`முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய் விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர் களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப் படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திக ளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.

English Meaning:

Parasakti, who with pervasive Para stood,
Becomes Jnana Sakti and Ichcha Sakti;
And when Kriya Sakti arrives, (from Bindu)
The Dancer immanent becomes in them all.

பாடல் எண்: 1137

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 13

தமிழ் விளக்கம்:

சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.

English Meaning:

As flower and its fragrance
Siva and Sakti stood form resembling
This they know not;
When together they stirred the Primordial Bindu
For creation to commence,
He in Thought was one with Her
Thus it was, My Father stood.

பாடல் எண்: 1138

சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 14

தமிழ் விளக்கம்:

மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.

English Meaning:

Siva-Sakti who in Thought,
Thus commenced devolution
As Bindu and Nada expanded;
She wears the orb of moon
As on Her matted locks
She is Sathavi, of Sattva Guna possessed
She is the Beginning and End
Thus is Her Form Divine.

பாடல் எண்: 1139

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. 15

தமிழ் விளக்கம்:

தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவின ளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புற நோக்கத்தை விடுத்து அக நோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப் பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரின்பப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.

English Meaning:

She is in Siva contained,
She is of ambrosial milk breasted,
She is in Jivas,
Yet they know not the way to Her;
Into them that hold Her in their hearts,
She welled up from within
And unto a bright lamp shed Her light.

பாடல் எண்: 1140

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே. 16

தமிழ் விளக்கம்:

எல்லாப் பொருள்களையும் அடிமையும், உடை மையுமாக உடையவனும், அக்கினியைச் சிறப்பு வடிவமாகக் கொண்டவனும், `உருத்திர மூர்த்தி` எனப்படுபவனும், இடப வாகனத்தை ஊர்பவனும் ஆகிய சிவன் இனிது விளங்கியிருக்கும் இடமே, மேற்கூறிய அக நோக்குடையவர் சென்று சேரும் இடமாகும். ஆகவே, அவ்விடத்திற் சென்று சிவனை நேர்படக் கண்டவர்களே உள்ளமாகிய வாயில் வாயிலாகப் பயன்படப் பெற்ற சாதகராவர்.

English Meaning:

The Lord is my master,
He is Rudra, Fire and Light
He mounts the Bull in splendour surpassing;
Ye who have not seen Him,
Away, from Here!
The Sadhakas have seen Him
He is the support of their heart.

பாடல் எண்: 1141

தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. 17

தமிழ் விளக்கம்:

மேற் கூறிய சாதகர் உலகரின் மேம்பட்டுத் தங்கு கின்ற இடம் ஆறு. அவற்றுள் ஒவ்வொன்றும் தாமரைகளாய் விளங்கும். அவர்கட்குப் பிருதிவி `முதலாக மேல்நோக்கி எண்ணு கின்ற தத்துவம் முப்பத்தாறினையும் இதழ்களாகக் கொண்ட மாயை யாகிய தாமரையிலும், உண்மையாகவே நூறிதழ் உள்ள தாமரையிலும் உள்ளவளாய்க் காட்சியளிக்கின்ற அச்சத்தி, உலகர் பொருட்டுப் பூமியில் தேவியாயும் விளங்குகின்றாள்.

English Meaning:

On the petals of six Adharas is She seated;
On the petals of the Flower of Cosmos,
Of Worlds two hundred and eighteen above is She seated;
She is the Blessed One that is seated on the Flower of Heart
She is the bejewelled one that is on
Earth (Muladhara) below.

பாடல் எண்: 1142

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே. 18

தமிழ் விளக்கம்:

சிவன் யாதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது, சத்தியும் அசைதல் இல்லாத கொடிபோல ஞானமாத்திரையாய் நிற்பாள். சிவன் மேகத்தில் உண்டாகின்ற மின்னலைப்போல உலகை நோக்கித் தெய்வ நாயகனாய் வருதலினால், சத்தி தெய்வநாயகியாய் அவனுக்குத் துணை நிற்கின்றாள். அதனாலே உலகம் நடைபெற்று வருகின்றது.

English Meaning:

The bejewelled one is where Parama is;
She is the Light that shines high
As pennon resplendent,
She is dazzling unto the lightning in the sky,
And all worlds in Sakti\'s Way whirl.

பாடல் எண்: 1143

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. 19

தமிழ் விளக்கம்:

உலகம் நடைபெறுவது ஒன்பது இதழ்த்தாமரை வடிவாகியாம். அதனால், சத்தியின் பேதங்களாய் உள்ள கன்னியரும் வாமை முதலிய எண்மரும், முதல்வியாகிய மனோன்மனியும் என ஒன்பதின்மராயினர். அவர் அனைவரும் இயங்குவது ஆதி சத்தியின் வழியேயாம். அவர்களை உலகத்தார் தொடர்வது மேற்கூறிய தாமரை மலரிலே. இவையெல்லாம். இங்ஙனம் இருத்தல் சிவனைச் சார்ந்தேயாம்.

English Meaning:

In the nine centers within,
That Flower walked,
As nine Saktis were they there;
Kundalini Light through Central passage arose,
And into the Lotus in Sahasrara spread.

பாடல் எண்: 1144

அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. 20

தமிழ் விளக்கம்:

பிராணன் எளிதில் சென்று பொருந்துகின்ற ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள தாமரையே ஆதிசத்தி நின்று உயிர்களுக்கு அறிவிக்கின்ற இடமாகும். ஆன்மாவைக் கீழே செல்லாது தியானம் முதலியவற்றால் மேலெழச் செய்கின்ற ஆசனமாகிய தாமரை மலர் உடலின் நடுவிடத்தில் உள்ளது. (அனாகதம் - இருதயம் என்றவாறு.) வழிபடுவோன் சந்திரனது அமுதத்தைப் பருகும் இடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மலர் உள்ள தலையிலே உயிருணர்வு செல்லும்படி ஓட்டுகின்ற தாமரை மலர், மேற்சொல்லிய அனைத்திற்கும் முதலிலே நாற்கோண நிலையினதாய் உள்ளது. (மூலாதாரத்திலே உள்ளது என்பதாம்.)

English Meaning:

That Lotus in folds several is Primal Sakti\'s abode;
The Lotus that lifts soul is in the heart;
When the Lotus in Muladhara is roused,
The Lotus in Sahasrara blossoms.

பாடல் எண்: 1145

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே. 21

தமிழ் விளக்கம்:

முதல் ஆதாரமாகிய மூலத்தினின்றும் எழுகின்ற தீக் கொழுந்து ஏனை ஆதாரங்களிலும் சென்று பரவுதற்பொருட்டும், அங்ஙனம் பரவுதலின் பயனாகிய உள்ளொளியைத் தரிசித்தற் பொருட்டும் சத்தி அந்த ஆதராங்களாகிய சிறிய இடங்களில் அடங்கு பவள் அல்லளாய் இருந்தும் அவைகளில் எழுந்தருளியிருக்கின்றாள்.

English Meaning:

The Spark that arose in triangular Chakra (Muladhara)
Flew and spread in the rest of Adhara Chakras;
And piercing Sahasrara shone bright;
Thus She pervaded in Chakras all.

பாடல் எண்: 1146

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. 22

தமிழ் விளக்கம்:

சத்தி பத்துத்திருமுகங்களைக்கொண்டு பத்துத் திசைகளையும் நோக்கியிருக்கின்றாள். அதனாலே, காற்று எங்கும் சென்று அசைதலும், நெருப்பு மேல்நோக்கி எரிதலும், நீர் கீழ்நோக்கிப் பாய்தலும் உடையனவாய்த் தம்தம் செயலைச்செய்கின்றன.

English Meaning:

There She was with faces ten (in Ajna)
And in all directions the breath spread,
And sought the pearly-white light of Her face,
And then flowed ambrosial waters
From Her downward looking face.

பாடல் எண்: 1147

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே. 23

தமிழ் விளக்கம்:

சத்தி, சிவனது சிவந்த பொன் போலும் திரு மேனியில் நிறைந்த நறுமணம் கமழும்படி அவனையே நாள்தோறும் பற்றிப் பயில்கின்றாள்.

English Meaning:

Her glances are unto arrows sharp,
She is the Lady Supreme
She is Manonmani
Her waist is slender unto a tender vine
Her tresses are bedecked with flower garlands
Her Form is red gold,
Fragrant by far
Daily She looks at Lord and prays.

பாடல் எண்: 1148

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே. 24

தமிழ் விளக்கம்:

நான்கு வேதங்களும் சொல்கின்ற பெருந்தெய்வம் (முதற்கடவுள்) ஆகிய பூரணசத்தி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு, பாதம் பூமியைக் கடந்தும், முடி வானத்தைக் கடந்தும் இருக்க, `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் முச்சுடர்களே மணிகள் இழைத்த அணிகளாய் அழகுபடுத்த நிற்பாள்.

English Meaning:

She utters the Vedas Four,
The great Goddess, the Sakti;
She dons robes fine,
Her Feet compass world entire;
She stands elated
Pervading worlds and universes;
She stands adorned
With three lights, Sun, Moon and Fire.

பாடல் எண்: 1149

புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 25

தமிழ் விளக்கம்:

உலகத் தலைவனாகிய சிவனையும், உயிர்களாகிய எங்களையும் தாங்க வல்லவள்; உலகங்கள் அனைத்தையும் ஆக்க வல்லவள்; அவைகளைத் தனக்குள்ளே அடக்கிக் காக்க வல்லவள்; உலகத்து ஒளிகள் அனைத்தையும் தனது திருமேனியின் ஒளியாகச் செய்ய வல்லவள்; அத்தகைய பேராற்றல் உடையவளாகிய பூரண சத்தியையே நான் துதிக்கின்றேன்.

English Meaning:

She holds in Her Form
The One Lord of Worlds all,
She creates million, million universes vast
In Her Thought;
She is draped in Cosmic Light,
She beautifies all,
Her I stood adoring.

பாடல் எண்: 1150

போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 26

தமிழ் விளக்கம்:

எனது இச்சா ஞானக்கிரியைகளாகிய ஆற்றலில் இயைந்து நின்று அவற்றை இயக்குகின்ற, அரியதவத்தால் அடையப் படுபவளும், `சாந்த ரூபம், யமனையும் வெல்லும் வேக ரூபம்` என்னும் இரு நிலைகளையும் உடையவளும் ஆகிய அந்த உலகத் தலைவியாம் பூரண சத்தியையே நான் வணங்குதல், வாழ்த்துதல் முதலியவற்றைத் தெரிவிக்கும் சொற்களைச் சொல்லி வழிபடுகின்றேன்.

English Meaning:

Hail, to You--thus I pray
She is the Mistress of Worlds all,
She is my Mother
She is my Prowess
She is Lady of Tapas rare
She is bejewelled,
Her countenance is
Of passions dispelled;
She is of soft finery
She drives away fearsome death.

பாடல் எண்: 1151

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 27

தமிழ் விளக்கம்:

வளையல் அணிந்த கைகளையுடையவளும், இன்பத் தோற்றத்திற்குக் காரணமாயிருப்பவளும், அழகிய வடிவத்தை யுடைய `திரிபுரை` என்னும் தேவியும் ஆகிய சத்தி, ஐயத்திற்குக் காரண மாயுள்ள கீழான முன்னை வினைகள் கெடுதலினால் தன்னை உணர்ந்து வந்து அடைபவர்களை, `என் அடியார்கள்` என்று சொல்லி ஏற்று, அவர்கட்கு, மேல் வினை வாராமல் காக்கின்ற தலைவியாயும் நிற்பாள்.

English Meaning:

She is of hands bedecked in jewellery,
She is Fountain of Bliss Divine,
She is Beautiful,
She is Tiripurai of Loveliness Perfect,
She is Mount Kailas
That all Karma destroys
She for ever uproots Karmas
Of Her devotees;
She is the Primal One.

பாடல் எண்: 1152

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. 28

தமிழ் விளக்கம்:

மென்மைத்தன்மையோடு பொருந்து தலை யுடைய பெண்மகளாகக் காட்சியளிப்பவளும், ஆகாயத்தில் தோன்றும் மின்னலை ஒப்பவளும், பலவாகிய புகழையுடைய தேவியாய் நின்று பல பயன்களைத் தருகின்ற, பசிய கொடி போன்றவளும் ஆகிய சத்தி, கீழ்மையோடு இசைதலையுடைய அக இருளாகிய பெண்டினை என் மனமாகிய வீட்டினின்றும் ஓட்டிவிட்டுத் தான் வலிமையோடு கூடிய பெண்டாய் அதனுள் குடிபுகுந்தாள்.

English Meaning:

She is damsel of sweet music,
She is tender vine of Void Limitless,
She is of fame infinite,
She is fruit-laden green vine
She drove away Maya
That transitory fame gives,
She of abiding fame,
In my heart entered.

பாடல் எண்: 1153

தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. 29

தமிழ் விளக்கம்:

சத்தி மேற்கூறியவாறு மனம் புகுந்தபின் அவளால் அங்கு நிறுவப்பட்ட (நிலைப்பிக்கப்பட்ட) அப்பொருள் எம் இறைவனாகிய சிவனேயாகும். எதனால் எனின், அவன் உலகைப் படைக்க நினைக்கும்பொழுது சத்தியும் அதனையே விரும்பி, மாயையின், மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளையும் சார்ந்து நின்று பல்வேறு வகையாகப் புலனாகின்ற அப்பொருளாய் நிற்கின்ற அச்செயலையே தான் செய்வாள் ஆதலின்.

English Meaning:

Eternal existent is our Lord;
When at the beginning the worlds were created,
She Our Para Sakti followed Him,
Through 'Heaven and earth'
And breathed life into creation all;
That verily was Sakti\'s Work.

பாடல் எண்: 1154

அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 30

தமிழ் விளக்கம்:

`அதற்குக் காரணம் அதற்கு முன்னுள்ள அந்த ஒன்று; இதற்குக் காரணம் இதற்கு முன்னுள்ள இன்னொன்று` என்று இப்படிக் காரியப்பொருள்கள் பலவற்றிற்கும் பல காரணப் பொருள்களையே முடிந்த காரணப் பொருளாக மயங்கி, அனைத்துக் காரணங்கட்கும் காரணமாய் உள்ள பொருளை உணரமாட்டாதவர் சிவனை அறியுமாறில்லை. அதனால், முத்திக்கு வழியை அவர் அறியாதவரே யாகின்றனர். அவர் அன்னராதல் சத்தியின் இயல்பை முற்பட உணராமை யாலேயாம். ஆதலின், அவர் உண்மைச் சிந்தனையாளர் அல்லர்.

English Meaning:

This and 'That', they say, is God,
They Know Him not, the True One
They know not,
Who ultimate liberation grants,
fortress erected and protected by our Guru Paramparai.
They know not
Lady Great of honeyed-flower bedecked tresses,
That Grace confers;
Of muddled thinking they are.

← அட்டவணைக்குச் செல்ல