திருமந்திரம்

96. சரியை

(பாடல்கள் 1443 முதல் 1450 வரை)

பாடல் எண்: 1443

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1

தமிழ் விளக்கம்:

`மூலன் உடன்பட்டுக் கூறிய சரியை நெறி யாது` என்று ஆராய்கின்ற கஞ்சமலையமானே, கந்துருவே` `பூமியில் உண்மையை ஓர்ந்து உணரச் செய்வதாகிய சுத்த சைவத்தின் உயிர் நாடியாம் நெறிகள் இவை` எனக் கூறுகின்றேன்; கேண்மின்கள்.

English Meaning:

O! Kalangi! Kanja Malayaman! Kanduru!
My loved disciples, this you understand;
The practice of Chariya is basic to salvation,
nd verily is the breath of Suddha Saiva
In this world below-
Thus quotes-Mula,
Master of penances many.

பாடல் எண்: 1444

உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. 2

தமிழ் விளக்கம்:

உயிர்க்கு உயிராய் உள்ள பொருளை ஆராய்ந் தறிவது ஞானபூசை. உயிர்க்கு உணர்வுண்டாக்குகின்ற பிரணவத்தைப் பல வகையாலும் காணுதல் பெரியயோக பூசை. புறத்தில் விளங்கும் மூர்த்தி உயிருடையதாகும்படி மூர்த்திமானை அதன்கண் வருவித்துச் செய்தல் புறப் பூசை. இனிக் குற்றந் தீர்ந்த அன்புடன் செய்வனயாவும் சிவனுக்குச் செய்யப்படும் பூசையாம்.

English Meaning:

To be one, Life within Life-that the luminous path of Jnana;
To seek the Light within Life-that the mighty path of Yoga;
To invest idol with Life-that the external way of Kriya
To adore Siva in love-that the basic worship of Chariya.

பாடல் எண்: 1445

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 3

தமிழ் விளக்கம்:

இதன் பொருள் வெளிப்படை.

English Meaning:

Wander you through town and villa
Seek Him through shrine and temple
Sing of Him as 'Siva, Siva, my Lord'
And thus do you offer worship meek,
And the Lord will make your heart His temple.

பாடல் எண்: 1446

பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 4

தமிழ் விளக்கம்:

சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில் நிற்போர் அணுக்கத் தொண்டு செய்யும் அத்தகுதியை யுடைய `தொண்டர்` என்றும், இயமம் முதலிய யோக நிலைகளில் நிற்போர் `சாதகர்` என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.

English Meaning:

They who follow path of Chariya are Bhaktas;
In Kriya the devoted souls wear holy emblems,
They who practise Iyama and the rest are Yogis;
And they who reach Siva Jnana are Jnana Siddhas true.

பாடல் எண்: 1447

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. 5

தமிழ் விளக்கம்:

சிவமாந் தன்மையை எய்தினோரே மெய்ஞ் ஞானம் முற்றினவராவர். மனம் சமாதிநிலையில் அடங்கப் பெற்றவரே அட் டாங்கயோகம் முற்றினவராவர். ஒருநாளேனும் அர்ச்சனை தவறி யொழி யாதபடி செய்தவரே நுணுகியதான கிரியை முற்றினவராவர். நெடுந் தொலைவான நாட்டிலும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தங்களை முறைப்படி வணங்கினவரே தாம் ஏற்றுக்கொண்ட சரியை முற்றின வராவர்.

English Meaning:

Jnanis merge the I in You;
Yogis attain Siddhi and Samadhi;
Those in Kriya miss not daily worship;
And in Chariya they perform pilgrimages many.

பாடல் எண்: 1448

கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே. 6

தமிழ் விளக்கம்:

கிரியை வழிபாட்டிலும், யோக வழி பாட்டிலும் சிவனது அருள் உருவம் நிற்கும். ஞானவழிபாட்டில் உருவம் அற்ற அருவ நிலை தோன்றும். இவ்வழிபாடுகள் சத்தி நிபாத நிலைக்கு ஏற்பக் குருவின் வழி நூல் நெறியாற் செய்யப்படுவன. இவ்வாறன்றி அன்பு காரணமாகத் தத்தமக்கு இயலும் வகையிற் செய்யப்படுவன இவற்றினும் உயர்ந்த வழிபாடாய் அமையும்.

English Meaning:

Kriya is worship of Siva in Form,
Yoga of the Formless One,
Jnana is the advanced path in ripeness of time,
The adoration of the loving heart is Chariya,
Exalted indeed it is.

பாடல் எண்: 1449

சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 7

தமிழ் விளக்கம்:

`சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய நான்கும் விரிந்துள்ள இவையே வேதத்தின் தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமை யுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற் பொருட்டு` வைத்துள்ளான்.

English Meaning:

The Four paths of worship
And the four states of realization they give
And the six schools of Vedanta-Siddhanta
All these are truths
That Nandi from the Golden City descending revealed
For the doubting humanity to redeem.

பாடல் எண்: 1450

சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. 8

தமிழ் விளக்கம்:

வீட்டு நெறிளாகிய சரியை முதலியவைகளில் நிற்க விரும்புவோர், ஆசிரியரை அடைந்து தீக்கை பெற்று நின்ற வழியே அவை உண்மைச் சரியை முதலியனவாய்ப் பயன்தரும். அத்தீக்கை, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நான்கு வகைப்படும். சமய தீக்கை தூல உடம்பைப் பல வகையில் தூய்மைப் படுத்து வதாகும். அதன் பயனாக, மாணவன், இது காறும் எல்லாச் செயல் களையும் தன்னால் ஆகின்றனவாகவேயாக மயங்கியிருந்த மயக்கம் நீங்குமாறு. `எல்லாம் அவன் செயல் (சிவன் செயல்)` ஆதலை உணரும் வாய்ப்பினைப் பெறுவான். அதனை அடுத்துச் செய்யப்படும் விசேட தீக்கை சிவமந்திரங்களைப் பீசங்களோடு கூட்டி உபதேசித்து, அதனால் பெரும்பயன் அடையச் செய்வதாகும். சாந்தத்தை உடைய நிருவாண தீக்கை, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி யாதீதை` என்னும் கலைகள் ஐந்தில் ஏனைய பொருட் பிரபஞ்சம், சொற்பிரபஞ்சங்களாய் அடங்கியுள்ள அத்துவாக்களிடமாக நிற்கும் சஞ்சித கன்மங்களை ஆகுதிகளால் அழித்து, மாணவனது ஆன்மாவை நின்மலம் (மாசற்றது) ஆக்குவதாம். அதற்குமேல் உள்ள அபிடேகம்` ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்கும் தீக்கை செய்தற்கு உரிய பெரிய ஞானத் தகுதியுடையவர்க்கு அவ் ஆசிரியத்தன்மையை அபிடேகம் செய்து அளிப்பது.

English Meaning:

Samaya is the ordination rite for self-surrender in Chariya
Visesha, the rite for incantation of Siva Mantra in Kriya
Nirvana helps Kalas purification in Yoga
And Abhisheka for Grace to reach in Jnana.

← அட்டவணைக்குச் செல்ல