திருமந்திரம்

97. கிரியை

(பாடல்கள் 1451 முதல் 1456 வரை)

பாடல் எண்: 1451

பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1

தமிழ் விளக்கம்:

எல்லாத் தெய்வங்கட்கும் மேலான ஒரு தெய்வ மாகிய சிவபிரான் பத்துத் திசைகளிலும் நிறைந்திருக்கின்றான். அவனை எந்தத் திசையில் `இல்லை` என்று கூறமுடியும்! ஆதலால், பலவகை மலர்க் கூட்டத்தைக் கொண்டு அவனது திருவடியையே புகலிடமாகக் கருதி வழி பட்டால், பொங்கிப் புரண்டு வருகின்ற வினையாகிய கடல் வந்து மோத மாட்டாது ஒழியும்.

English Meaning:

The One God there is
He pervades the ten directions around,
In which direction can we say is He not?
So, do take refuge under His Holy Feet
Then shall you cross the roaring Sea of Karma,
And safe reach the Shores of Beyond.

பாடல் எண்: 1452

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2

தமிழ் விளக்கம்:

Not available

English Meaning:

You may adore Him with sandal, fragrance exceeding,
That grows on peaks atop in forests interior,
You may worship Him with flowers rare,
That bloom in Heaven\'s gardens
Unless you shed your fleshly attachments
And realize Him in the depths of your heart
You shall never never reach His Holy Feet
That is unto flowers that shed honey dew.

பாடல் எண்: 1453

கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 3

தமிழ் விளக்கம்:

தலைவனாகிய சிவபெருமானது நடனம் புரிகின்ற திருவடிகளைத் துதியுங்கள். ஏனெனில், `ஞானக்கன்றுகளின் கூட்டம்` எனத் தக்க அடியார் கூட்டத்தின் நடுவே திரிந்துகொண்டிருப்பவனும், வானத்தில் வாழும் பசுக்கன்றுகளாகிய தேவர்களால் தொழப் படுபவனும் ஆகிய சிறப்பால் யானையை ஒத்த அடியவனுக்கே மறுமையில் சிவனது திருவருட் பெருக்கு உளதாகும்.

English Meaning:

The Lord is your Guide,
Seek His feet as does the yearning calf,
He shall seat you amidst His children of Wisdom;
The Devas, the Beings of Heaven, bow low before Him;
Great is His love, as of the cow to her calf;
And bounteous His Grace, beyond beyond count.

பாடல் எண்: 1454

இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே. 4

தமிழ் விளக்கம்:

உலகங்கள் அனைத்தையும் செயற்படுத்தலாகிய அச்செயலைச் செய்பவளாகிய அம்மையும் அதனைச் செய்தல் அவளை ஒரு கூற்றிலே உடைய சிவனிடத்து இக்கிரியைத் தொண்டைச் செய்தேயாம். அங்ஙனமாயின், `மக்கள் செய்யத் தக்க பணி` யாது என்பார்க்கு, பதியாகிய அவனிடத்துச் செய்யுங் கிரியையே` என்பது கூற வேண்டுமே! இனி, `பத்திமை` எனக் கூறப்படுவது இக்கிரியையேயாம்.

English Meaning:

She fashioned this world
And all universe that fills space in directions eight
Her-He consorts, sharing Himself with Her
To adore Him is the duty of humans here below;
And that which fashions a place in Lord\'s Abode

பாடல் எண்: 1455

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 5

தமிழ் விளக்கம்:

பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியை களிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத் தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.

English Meaning:

The Bhakta to begin with practises Chariya and Kriya,
Then blessed with grace takes to Yoga pure;
And that way reaches the path of Jnana
And in the end by Guru\'s grace becomes one with Siva.

பாடல் எண்: 1456

அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே. 6

தமிழ் விளக்கம்:

செம்பொன்போலும் திருமேனியும், அதனுட் சிறப்பாகக் குறிக்கத் தக்க தாமரை மலர்போலும் திருவடிகளும் என் கண்முன் தோன்றினாற்போல, என் உடம்பகத்து இருதய கமலத்தில் ஒளியாய் விளங்குகின்ற சிவன், புறத்தில் இலிங்க மூர்த்தியிடமாக எனக்கு விளங்கிநிற்கின்றான். அதனால், அடியேன் அவன்மேல் வைத்த அன்பினால் மனம் நெகிழ்ந்து உருகுகின்றேன்; அவன் இடும் பணிகளைச் செய்கின்றேன்; எல்லாம் செய்து அவனை வேண்டுவது அவனது அருள் ஒன்றையே.

English Meaning:

The Lord is resplendent as pure gold
His Feet are unto the lotus bloom
At them I pray: 'Lord, Grant me Your Grace!'
And in love I melt and daily adore;
And the Lord that is Light within my bones
Himself does reveal unto me.

← அட்டவணைக்குச் செல்ல