(பாடல்கள் 1457 முதல் 1466 வரை)
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1
வளி நிலை (பிராணாயாம) முறைப்படியே மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களிலும் உணர்வாய் ஏறிச்சென்று இறுதியில் சிவனது அருவத் திருமேனியில் நிலைத்து நின்று, ஊன்றி நிறுத்தப்பட்ட தூண்போலும்படி தமது உடலை நேராக நிமிர்த்துச் சிறிதும் அசைவற நிறுத்தி, அதனைப் பிறர் கீறினாலும், தாக்கினாலும் அவற்றால் உணர்வு பிறழ்ந்து விரைய அவரை நோக்குதல் இல்லாது, தியானப்பொருள் ஒன்றையே உணர்ந்திருக்க வல்ல மாயோகிகட்கே அந்தத் தியானப் பொருளாகிய சிவனை அடைதல் கூடும்.
They course Kundalini through centers six,To singleness of aim direct the mind,Unto a wooden stake they sit immobile,Impervious to tickle or to thrust,To the wise yogins who thus set their purpose high,Lord His Grace grants.
ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. 2
யோகப் பயிற்சியால், பல ஊழிகள் செல்லவும் எடுத்த உடம்பு நீங்காது நிற்க, அதன்கண் நின்று அவ்வூழிகளைக் காண வல்லவர்க்கல்லது, ஊழிகள்தோறும் காரணக் கடவுளர்களது தொழிலிற்பட்டுப் பிறந்து இறந்து உழல்பவர்கட்கு அப்பிறப்புக்களில் பல்லூழிகள் சென்றாலும் அவர் தன்னை உணர நில்லான் சிவன். பாற் கடலில் பள்ளி கொள்பவனாகிய மாயோனும், பிரமனும்` என்று சொல்லப்பட்ட தலைமைத் தேவர்களே பல்லூழிக்காலம் தேடியும் காணவராமல் அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு அவன் நின்றதே அதற்குச் சான்று.
Unless you have realized Him as Timeless EternityYou know Him not, albeit through aeons and aeons of time;The Gods-Hari of the Ocean bed and Aya, the Creator-In vain have sought Him through countless vista of TimeHe is at the Pinnacle, beyond, beyond their reach.
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. 3
பூ மலர்தற்குமுன் அதன் மணம் அதனுள் அடங்கி யிருத்தல் போல, உயிர் பக்குவப்படுதற்கு முன் அதன் அறிவுக்கு அறிவாய் அதனுள்ளே தோன்றாதிருந்த சிவம், பக்குவத்தால் உள்ளமும், உடலும், எழுதப்பட்ட ஓவியம் போல அசைவற்று நிற்கப் பெற்ற யோக உணர்வினர்க்கு வெளிப்பட்டு விளங்கும். அப்பொழுது அவர்களது உள்ளமும், உடலும் புனுகு பூனையால் கூடப்பட்ட மூங்கில் தறி அதன் மதநீரால் மணம்பெற்றுத் திகழ்ந்தது போலச் சிவமணம்கமழப் பெற்றுச் சிவதனுவும், சிவகரணமுமாய் விளங்கும்.
As from within the flower,The hidden fragrance wakes to life,So, out of Jiva blossomsSiva\'s divine grace;Sitting unmoved like painted pictureThe yogi realizes Him withinUnto the planted pole is He,Which the musk-cat embraces, its fragrance to shed.
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 4
உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.
You say, 'I have realized God'Yet you have not seen Him that is but within you;Nandi abides subtle as fragrance within flower;Seek Him in singleness of your thoughtThen shall your darkness of Impurities vanishThe darkness that is the seed of birth and rebirth interminable.
எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 5
இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக் குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர்பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்.
Neither mantra, nor song, nor arts four and sixtyEver sunders birth and its accursed bonds;Then did I take to Yoga\'s way,And lo! I met the Sun, Moon and Fire on the way to CraniumAnd they showed the Supreme Way!
விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. 6
யோகத்தைத் தியானப் பொருளிடத்து வைக்கும் பேரன்புடன் செய்த வழியே அதனால் விளையத்தக்க பயன்கள் யாவும் விளையும்.
Do in devotion practise yogaYou shall a true tapasvin become;You shall the True Word realize;And of certain, one with Heavenly Beings be;Yoga devoted is penance true.
பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நகர நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. 7
உடம்பினுள் நின்று வெப்பத்தைத் தருகின்ற மூலாக் கினியாய் உள்ள சிவன், அவ்வக்கினியை அணையாது ஓம்பி நின்றால் வீட்டுலகத்தை அளித்தருள்வான். அவ்வக்கினியை எழுப்பிக் காணும் அளவில் நின்றால், அங்ஙனம் நிற்கும் யோகிக்கு அவன் உறவான பொருளாய்ப் பல நலங்களைச் செய்தருள்வான். இவ் இரண்டும் இன்றி, உலகரது பழிப்பு நோக்கி அந்நெறியிற் செல்ல ஒருவன் கூசுவனாயின், அவன் நரகத்தை நோக்கிப் போகும் வழிக்கே வகையைச் சிவன் உண்டாக்குவான்.
Do with care practise yogaYou shall with Immortals be;Within you shall you glimpse Him;If you but waver,Then shall you reach the World of DarknessVerily, Kundalini Fire that Yoga kindles in theeIs the Gracious Lord HimSelf.
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே. 8
யோகத்தில் விருப்பங்கொண்டு, மேற்கூறியவாறு மூலாக்கினியை ஓம்பி நின்றவனைத் தனது பூத உடலை விட்டுப் போவதற்குள், நீதிக்கு ஒத்த செங்கோல் அரசராயும், அமர முனிவ ராயும் உள்ளோர் எத்தனை ஆயிரவர் இறந்தார்கள்! எண்ணில்லாதவர் இறந்தார்கள். அதனால், சித்தர், தேவர், மும்மூர்த்திகள் ஆகியோரும் மேற்கூறிய யோகியை, `இவனே சிவன்` என்று பெருமையாகப் பேசி, அவனிடத்து அன்புடையராவர்.
The monarchs that swayed the sceptre righteous,The devout anchorites in unnumbered thousands,How many, how many, thy fell below;(For having wavered in Yoga practice)And yet, the myriad Siddhas, Devas and Supreme Beings Three,All redeemed adore HimSaying 'You, Our Father!'
யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. 9
யோக நெறியில் நிற்பவனுக்கு, `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்றும் செய்ய உரிமை உண்டு. கிரியை நெறியில் நிற்பவனுக்கு, `கிரியை, சரியை` என்னும் இரண்டும் செய்ய உரிமை உண்டு. உலகியல் அவாவை விட்டுச் சரியையில் நிற்பவனுக்கு அஃது ஒன்றற்குமட்டுமே உரிமை உண்டு. அங்ஙனமாயினும் எந்த ஒன்றில் அன்புடையவனாயினும் அவனது அன்பை நான் விரும்புகின்றேன்.
The yogi has sub-divisions three in his path;The yoga-kriya that helps him be the yogi;The yoga-chariya that of desires deprives him,And yoga-in-yoga that centers thought on Sun within;This latter I fixed my heart on.
யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. 10
யோக நூல் பற்றி யோக வகைகள் பலவற்றையும் உணர்தல் `யோகத்தில் சரியை` எனப்படும். இயமம் நியமம் முதலிய எட்டுநிலைகளிலும் நிற்றல் `யோகத்தில் கிரியை` எனப்படும். உள்ளொளிக் காட்சி கிடைக்கப் பெற்று நிற்றல். `யோகத்தில் யோகம்` எனப்படும். மூன்றாம் தந்திரத்தில் `பரசித்தி` எனக் கூறப்பட்ட அவற்றைப் பெறுதல் `யோகத்தில் ஞானம்` எனப்படும்.
Samaya Diksha in yoga is initiation for diverse yoga efforts;Visesha Diksha in yoga is for achievement of eight-limbed yoga;Nirvana Diksha in yoga aids yogi glimpse the Divine;And when he is granted Abhisheka OrdinationThen is he ripe for Siddha State.