(பாடல்கள் 1467 முதல் 1476 வரை)
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1
ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.
Than Jnana,There is none better an ethical path, here below;None better a religious faith;Nothing else than Jnana can confer liberation true;They that are exalted in JnanaAre truly exalted among men.
சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2
ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.
Out of the primal Principle of Sound (Nada)The Mind springs;And out of the Mind-Intelligence, Egoity and Will;They who have mastered these three,And the Mind\'s cogitational activity as well,Verily have mastered NadaAnd have truly attained Jnana.
தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3
சிவனது வியாபகத்தில் உள்ள உலகம் சிவனது உடைமையும், அடிமையுமாய் அவனுக்கு உரித்தாதலை உணர் தலையே `ஞானம்` என்றும், சிவனிடத்து வைத்த அன்பு காரணமாக அவனது திருவருள் தமக்குக் கிடைக்கப் பெறுதலையே `சிவோகம் பாவனை` என்றும் ஞானிகள் கூறுவார்கள். அவ் இரண்டையும் பெற்றோர், அவற்றின் பயனாகப் பின்பு, அறியத்தக்க பொருளையே அறிந்து, அதில் அழுந்துவார்கள்.
Thus they say:By devotion the Jiva first sojourns Lord\'s world;Then comes to dwell in Lord\'s proximity;Further on receives Lord\'s grace,And in the end attains JnanaIn Sivohamic I and You unionJiva shall himself Siva become.
இருக்குஞ் சேம இடம்பிரமமாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4
மாறுபாடில்லாத ஞானத்தை ஓர்ந்துணர்ந்தவர்க்கு அவர் இருத்தற்குரிய பாதுகாவலான இடம் `பிரமம்` எனப்படுகின்ற சிவமே. ஏனெனில், உலகம் `இயங்கியற்பொருளும், நிலையியற் பொருளும்` என்னும் ஈரினமாய் நின்று உணர்வை அலைப்பனவாம். (ஆதலின் அவை அவர்க்கு இருத்தற்குரிய இடமாகா என்பதாம்.) ஆதலின், சிவ வியாபகத்தில் நிற்கின்ற பெருமகிழ்வோடு செய்கின்ற செயல்களே, எல்லா இன்பங்களையும் தருவனவாம்.
Brahmam shall be his impregnable abode,Universe, his kith and kin;Diverse paths the world presentsAll, all shall be his;For, verily he has realizedThe pure Jnana, free of doubt.
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. 5
தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாதலை உணரும் உணர்வும், அவ்வுணர்வால் அதற்குட்டானே அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி, அதனைமறவாதுஉணர்கின்ற உணர்வால் பெருகுகின்ற அன்பும் என்னும் இவை ஒரு சேரக் கூடி நீங்கா திருக்கின்ற அந்த உள்ளமாகிய கோயிலிலே நீங்காதிருக்கின்ற பேரரு ளாளனாகிய சிவனது அருட்டிரு மேனி, அருட்குணம், ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடி இவைகளை மறவாதிருக்கின்ற முறையை உணர்ந்த ஞானிகட்கு இவ்வுலகமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி பிரகாசிக்கும்.
The Lord is of Infinite Grace,In His Celestial City are Love, Light and Peace eternal,To them that seek to know His FormAnd understand His AttributesAnd attain His Holy FeetTo them, this is the PathThis, this the boat to cross Life\'s turbulent waters.
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6
ஞானத்தை விரும்பி எழுச்சி பெற்ற உள்ளத்தில், பிராணவாயுவாகிய ஊர்தியை விரும்பி ஏறி மேலே செல்லும்பொழுது வழியில் எதிர்ப்படுகின்ற இடந்தோறும், சந்திர மண்டலத்திலிருந்து பெருகும் அமுத தாரை நிரம்பியிருக்கக் கண்டு, அதனால் உடற்கும், உள்ளத்திற்கும் வருவனவாகிய குறைகளைப்போக்கி நிலைபெற்று ஒளிமயமாக ஆகுங்கள்.
In whose thoughts Jnana ripens and swells,In his path the Life-Boat appears and greets him;And thus does he reach the surging watersOf the Crescent Moon\'s sphere,And there, rid of Impurities,He himself the Effulgent Light becomes.
ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7
ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.
For JnaniAll four paths are;Not so for the Yogi until he becomes Mauni;For him is Kundalini Yoga in ardour performed,Chariya and Kriya too are his.
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8
ஞானத்தில் ஞானத்தை அடைந்தவனுக்கு, அந்த ஞானத்திற்குக் கீழுள்ள மூன்றும் முன்பே கைவந்தனவாம். ஞானத்தில் ஞானமாவது `யான், எனது` என்னும் ஞாதுரு ஞானங்கள் தோன்றாது, ஞேயம் ஒன்றேயாக அதனுள் அழுந்துதல். ஞானத்தில் யோகமாவது தத்துவாதீதத்தில் எல்லையற்ற சிவ ஒளியில் சேர்தல். ஞானத்தில் கிரியையாவது தத்துவக் கூட்டத்தினின்றும் விடுபடுமாற்றைச் சிந்தித்தல்.
The Jnani attains all the four stages in Jnana;Jnana-in-Jnana is to transcend the 'I' and 'Mine'Yoga-in-Jnana is to envision the Light of Nadanta;Kriya-in-Jnana is to seek the liberation by good.
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9
ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.
He who realizes Jnana in its four divisionsHe verily transcends the conflict of virtue and vice;He has reached the farthest shores of Truth;He has glimpsed the Mighty Object;He is the Immaculate, Siddha, Siva Mukta.
ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 10
ஞானத்திற் சரியை முதலிய நான்கையும் பெற்றோர் முறையே ஞான சமயி, ஞான புத்திரன், ஞான சாதகன், ஞான ஆசாரியன் என்பவராயும் நிற்பர்.
In Jnana are initiation rites four;Samaya initiates the search for the Self;Visesha, the search for the Divine;Nirvana for the descent of Lord\'s Grace;Abhisheka for the attainment of Divine Guru\'s Holy Feet.