61. மலைந்தோரும் பணிந்தோரும்! பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை. துறை; அரச வாகை. கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர் குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து, செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும், வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன், எ·குவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி, சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன் எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர் வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, திருந்து அடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல், அதனினும் இலமே!
புறநானூறு > பாடல்: 61
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக