ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 3
திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 105
Beyond the Two Karmas is Isa seated, The seed of this world, the mighty God become; This and "That" is Isa--so the thoughtless contend, The dross but know the basest sediment low.
வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத் தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!