23. நண்ணார் நாணுவர்! பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம். வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக், களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்! கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்; வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர் வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி, நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று, இன்னும் இன்னபல செய்குவன், யாவரும் துன்னல் போகிய துணிவினோன், என, ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட கால முன்ப! நின் கண்டனென் வருவல்; அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச், சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் ஆளில் அத்தம் ஆகிய காடே.
புறநானூறு > பாடல்: 23
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக