44. அறமும் மறமும்! பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. திணை : வாகை. துறை: அரச வாகை. குறிப்பு : நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள். இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ, திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி, நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து, அலமரல் யானை உருமென முழங்கவும், பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்! அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லை யாகத், திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
புறநானூறு > பாடல்: 44
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக